வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் இந்தியாவின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை 48 (NH-48) பல மாநிலங்களை இணைக்கிறது. தமிழக மக்களும் பெங்களூரு மற்றும் அதற்கு மேல் செல்லக்கூடிய இடங்களுக்கு பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும் இது இருக்கிறது. ஆனால், சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆரம்பித்ததில் இருந்து இந்த சாலை கவனிப்பின்றி, குண்டு குழிகளுடன் காணப்படுகிறது. இப்படி ஒரு சாலையை பயன்படுத்த நாங்கள் எதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சமூகவலைத்தலங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்!
குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை-பெங்களூரு சாலை
காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற முக்கிய தொழில் மையங்களுக்கு சென்னையில் இருந்து முக்கியமான இணைப்பை வழங்கும் இந்த நெடுஞ்சாலை, சரக்குகள் மற்றும் சேவைகளை கொண்டு செல்வதற்கு இன்றியமையாத பாதையாக இருந்தபோதிலும், அதன் மோசமான பராமரிப்பிற்காக விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால் சாலை அந்த அளவுக்கு குண்டும் குழியுமாக, ஆங்காங்கே பள்ளங்களுடன் காணப்படுகிறது.
தமிழக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலை
தேசிய நெடுஞ்சாலை எண் 48 ஆனது வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் மிக நீண்ட சாலைகளில் ஒன்று. டெல்லியில் இருந்து ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு வரை நீள்கிறது. குறிப்பாக பெங்களூரு - சென்னை இடையிலான NH-48 சாலையை தமிழக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழித்தடத்தை ஒட்டி தான் எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடிதம் எழுதிய திமுக எம்.பி தயாநிதி மாறன்
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் (NH-48) மோசமடைந்து வரும் நிலையில், சாலையை சீரமைக்கும் வரை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் திமுக எம்.பி தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். தயாநிதி மாறனின் கடிதத்தைத் தொடர்ந்து, தமிழக மக்களும் இதற்காக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சாலை நிலைமைகள் தீர்க்கப்படும் வரை நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.
குமுறி வரும் வாகன ஓட்டிகள்
விரக்தியடைந்த ஒரு பயனர், சாலைகள் குழிகள், குண்டும் குழியுமான திட்டுகள் நிரம்பியுள்ளன. மாற்றுப்பாதைகள் மற்றும் ஒற்றை வழிப்பாதை நீட்டிப்புகளால் இந்த சாலை நிரம்பியிருக்கும் போது நாம் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்? @NHAI_Official இதை சரிசெய்ய வேண்டும் அல்லது கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்ல எனக்கு 8.5 மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. சாலை மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது, சாலையின் தரத்திற்கு மீறி, எங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டுமா
அவர்கள் கேட்கும் கேள்விகள் நூற்றுக்கு நூறு சதவீதம் நியாயம் தான், பொதுமக்களாகிய நாம் செலுத்தும் வரி பணத்தில் தான் நமக்கு சாலை போடப்படுகிறது. இதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது நியாயமான கேள்வி தான். இது ஒரு புறம் இருக்க, சென்னை பெங்களூரு விரைவுச்சாலையின் நிலை என்ன என்றும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை எப்போது பயன்பாட்டுக்கு வரும்
262 கிமீ நீளமுள்ள பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை ரூ.16,730 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. புதிய நான்கு வழி பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, அரசாங்கத்தின் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2022 மே மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த விரைவுச் சாலை 2025 டிசம்பரில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் இது இன்னமும் தாமதமாகும் என்று தெரிய வந்துள்ளது.
தரமற்ற சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. முதலில் சாலையை சரிசெய்யுங்கள். அப்புறம் கட்டணம் வசூலிக்கலாம் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய அரசிடம் இருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போம்!



Click it and Unblock the Notifications





