புதுச்சேரி அதன் அழகிலும், சுற்றுலாத் தலங்களிலும், பயணிகளுக்கு வழங்கும் சுதந்திரத்திலும் கோவாவுக்கு இணையாக இருப்பதால், 'மினி கோவா' என்று சுற்றுலாப் பயணிகளால் செல்லமாக அழைக்கப்படுகிறது. நீண்ட விடுமுறை நாட்களிலும், வார இறுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் புதுவை ஸ்தம்பித்து போகிறது என்றே கூறலாம். ஆனால், புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால் அங்கே சுற்றிப் பார்ப்பதற்கு ஆட்டோக்களை பிடிப்பது தான். இது தான் சாக்கு என்று ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணத்தில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வசூல் செய்கின்றனர். ஆனால், இதற்கு இப்போது ஒரு முடிவு கட்டப்படவுள்ளது!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
இந்தியாவின் மற்ற பெருநகரங்களில் இருப்பது போன்று புதுச்சேரியில் ஓலா, ஊபர் பிரபலமாக வழக்கத்தில் இல்லை. ஆதலால் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்தும், ஆட்டோக்களை சென்றும் சுற்றிப் பார்க்கின்றனர். ஆனால், ஆட்டோ என்று வரும் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு வரம்பே இல்லாமல், அதிகபட்சமாக சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
புதுச்சேரியில் வரவிருக்கும் ஆட்டோ ஆப்
அரசு தரப்பில் போதியளவு வாகன வசதி அதிகம் இல்லை என்பதால் ஆட்டோவின் தேவை இன்றைக்கும் மிக முக்கிய அளவில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆட்டோ கட்டணத்தை இஷ்டத்துக்கு பலரும் வசூலிக்கின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டோ சவாரிக்கான ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆட்டோ தேவை இன்றியமையாத ஒன்று
புதுச்சேரி போக்குவரத்து துறையானது ஆட்டோ கட்டணங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. 1.8 கிமீ தொலைவுக்கு குறைந்தபட்சம் ரூ.35 என நிர்ணயித்தது. இதை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோல் உயர்வை காட்டி இஷ்டத்துக்கு பலரால் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இங்குள்ள ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. ஆளுக்கு தகுந்தாற்போல் இஷ்டத்துக்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். கட்டணத்தை போக்குவரத்துத்துறை முறைப்படுத்தினால் பலரும் ஆட்டோவில் பயணிப்போம். பலருக்கும் ஆட்டோ தேவையாக உள்ளது என்று புதுச்சேரிக்குள் வருவோர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் மக்களின் கருத்தும் இவ்வாறாகவே இருக்கிறது.
ஆட்டோ செயலியில் முன்கூட்டியே தெரிய வரும் கட்டணம்
இப்பிரச்சினை குறித்து ஏஐடியூசி தொழிற்சங்க புதுச்சேரி பொதுச்செயலர் சேதுசெல்வத்திடம் கேட்டதற்கு, "வெளிமாநிலங்களில் இருப்பது போல் கட்டணத்தை முறைப்படுத்த 'ஆட்டோ ஆப்' (மொபைல் செயலி) தொடங்க போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியிருக்கிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே ஆப் மூலம் கட்டணம் தெரிந்து விடும். இதனால் பேரம் பேச வேண்டியிருக்காது. அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தி, குறிப்பிட்ட இடத்துக்கு பயணிக்கலாம். நாம் வீட்டில் இருந்து செல்ல இருக்கும் கட்டண விவரம் ஆப்பில் தெரிந்து விடும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களும் அதிகளவில் ஆட்டோவை பயன்படுத்துவர். ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு உரிய வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 31 க்குள் செயலி வழக்கத்திற்கு வந்துவிடும்
இதுபற்றி புதுச்சேரி போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் உள்ளது போல் 'ஆப்' ஒன்றை உருவாக்கி வருகிறோம். டிசம்பர் 31-ம்தேதிக்குள் இதை அமல்படுத்த முயற்சித்து வருகிறோம். தனியார் இரு சக்கர சேவை வாகனங்களை போக்குவரத்துத்துறையின் உரிய உரிமம் பெறாமல் வாடகைக்கு விட்டால், மோட்டார் வாகன சட்டம் 1089-ன் படி பறிமுதல் செய்து குற்ற வழக்கு தொடர்வோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது..



Click it and Unblock the Notifications






