மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் வேகமாக பறந்து புதிய சாதனை படைத்துள்ளது.வந்தே பாரத் அதிவேக ரயில் ஏற்கனவே 20 நாள் சோதனை ஓட்டத்தை முடித்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதால், இந்த மாத இறுதியில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இனி நீங்கள் 5 மணி நேரத்தில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்றிடலாம்.
புதிய வந்தே பாரத் ரயில்
கடந்த வாரம் சிஆர்எஸ் அனுமதி பெற்ற நிலையில் அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தேறியது. இந்த புதிய அதிவேக ரயில் செப்டம்பர் 30 பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் 2 (எ) விபி2 அரை அதிவேக ரயில் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அதே போல் விபி2 வெள்ளிக்கிழமை அன்று நடந்த சோதனை ஓட்டத்தில் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்தது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இந்த ரயிலின் முந்தைய பதிப்பான விபி1 54.6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டியது.
|
மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட வந்தே பாரத்
பயணிகளுக்கு மிகவும் வசதியான ஒரு பயணத்தை வழங்கும் பொருட்டு பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த 430 டன்களுக்குப் பதிலாக 392 டன் குறைந்த எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த ரயிலில் முந்தைய 24 இன்ச் டிவிகளுக்குப் பதிலாக 32 இன்ச் எல்சிடி திரை, 180 டிகிரி சுழலும் நாற்காலிகள், தேவைக்கேற்ப வைஃபை, தூசி இல்லாத சுத்தமான காற்று குளிரூட்டலுடன் வரும் அதிக ஆற்றல் திறன் கொண்ட ஏசிகள் என பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
எக்சிகியூட்டிவ் கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே இருந்த சைட் ரெக்லைனர் வசதி இனி அனைவருக்கும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான இடங்களில் சிக்னல் கடந்து செல்வதையும், நிலையப் பகுதிகளில் அதிக வேகம் மற்றும் ரயில் மோதலால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையும் தடுக்க, ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பும் உள்ளது.
உலகை திணற வைத்த வந்தே பாரத்
ரயில் அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான 491 கிமீ இடைவிடாத தூரத்தை அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் ஐந்து மணி நேரம் 14 நிமிடங்களில் கடந்தது. திரும்பும் போது, ரயில் ஐந்து மணி நேரம் நான்கு நிமிடங்களுக்குள் சென்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செயல்பாட்டிற்கு வந்த பின்னர் நிறுத்தங்களுடன், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் சுமார் 6 மணி நேரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2023 க்குள் இதுபோன்ற 75 ரயில்களை தயாரிக்க ரயில்வே இலக்கு வைத்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "முழுமையாக தண்ணீர் ஏற்றப்பட்ட கண்ணாடிகள் கொண்ட ரயிலான வந்தே பாரத் மணிக்கு 180 கிமீ வேகத்தில் அசையாமல் சென்றது உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார்.
ஆகவே, இந்த அதிவேக ரயில் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், நீங்கள் மிக விரைவாக மிக சொகுசாக பயணிக்கலாம்.