கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்ல இருந்த பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாம்பரம் காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது! இதனை பொதுமக்களும் தெரிந்து கொள்வது அவசியம்!
இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 19 வயது இளம்பெண் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவரை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே அந்த இளம் பெண்ணை விட்டு விட்டு ஆட்டோவில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பர் தயாளன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் இரவு நேரத்தில் பெண்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது காவல்துறை.
தாம்பரம் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
1. காவல் துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே இயக்க முடியும். வாகன பதிவு எண்கள் சரியான முறையில் ஆட்டோவில் தெரியும்படி இருக்க வேண்டும்.
2. வாகன பதிவெண்கள் சரியாக இல்லை என்றால் ஆட்டோவை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவிடப்படும்.
3. பயணிகள் ஆட்டோவில் ஏறும் போது அடையாள அட்டை, இந்த பேருந்து நிறுத்தத்தில் தான் ஓடுகிறதா என்பதை பார்த்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.
4. கிளாம்பாக்கத்தை சுற்றி ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5. 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பூத் அமைக்கப்பட உள்ளது.
6. காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரில் இருந்து இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழை பரிசோதிக்கலாம்.
7. வெளி ஆட்டோக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8. மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றும், தொடர்ந்து இரவு நேரங்களில் அதிகளவிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் நிர்ணயித்த அரசு
போக்குவரத்து துறை, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்டோ, பைக், கேப் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் புதிய வழிகாட்டுதல்களை 2025 ஜனவரி 11 அன்று வெளியிட்டது. இதன்படி, ஆட்டோக்களுக்கு அடிப்படை கட்டணம் ரூ.40, மேலும் கிலோமீட்டருக்கு ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்ஜ் கட்டணம் அதிகபட்சம் அடிப்படை கட்டணத்தின் 1.5 மடங்காக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஓட்டுநர்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தின் 80% வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications



