17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அன்பின் நினைவுச்சின்னம் ஆண்டுதோறும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் பார்வையிடப்படுகிறது. இதனால் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு எனலாம். ஆம்! அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகையால் நாட்டிற்கு வருமானம் ஏற்பட்டாலும், அதிகப்படியான மாசுபடுதல் காரணமாக தாஜ்மஹால் நேர்மறை தாக்கங்களை எதிர்கொள்ளுகிறது.
இந்நிலையில் தாஜ்மஹாலில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அங்கு வசிக்கும் மக்களிடையேயும் வணிகத்தை சார்ந்து வாழும் குடும்பங்கள் இடையேயும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு
தாஜ்மஹாலின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் வணிக நடவடிக்கைகளைத் தடை செய்யுமாறு ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்திற்கு (ADA) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ADA இன் துணைத் தலைவர் சார்ச்சித் கவுர், "நாங்கள் வணிகங்களின் கணக்கெடுப்பு செயலாக்கத்தைத் தொடங்கியுள்ளோம், கணக்கெடுப்பு முடிந்த பிறகு நாங்கள் வணிகங்களைக் கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செயல்படுவோம்" என்றார்.
1993 ஆம் ஆண்டில் துவங்கிய பிரச்சினை
1993 ஆம் ஆண்டு தாஜ்மஹாலின் மேற்கு வாசல் அருகே இருந்து 71 கடைகள் அகற்றப்பட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு பதிலாக மீண்டும் அங்கு வணிக நடவடிக்கைகள் தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டிய கடைக்காரர்களின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தாஜ்கஞ்ச் மக்கள் கலக்கம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களின் தொழிலாளர்கள் வேலை இழப்பதால், சுமார் 40,000 முதல் 50,000 பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏனெனில் உச்ச நீதிமன்ற உத்தரவால் சுமார் 500 உணவகங்கள், எம்போரியங்கள், பட்ஜெட் ஹோட்டல்கள், கஃபேக்கள் மற்றும் பிற வணிக விற்பனை நிலையங்கள் பாதிப்படையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.