உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் பெருமையை பற்றி நாம் ஏற்கனவே அறிந்து இருக்கிறோம் அல்லவா! ஒரு மனிதன் தன் மனைவியை எவ்வளவு ஆழமாக நேசித்தான் என்பதற்கு தாஜ்மஹால் ஒரு சிறந்த உதாரணம்.
இந்த அழகான காதல் சின்னம் அதன் நுணுக்கமான வேலைப்பாடு மற்றும் கட்டிடக்கலை காரணமாக காலம் கடந்து கம்பீரமாக நின்று பல கோடி கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருவதில் அதிசயம் இல்லை!

உலகின் மிகவும் விரும்பப்படும் வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால் கொரானா தொற்றைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், வெளி நாட்டவரின் வருகை கணிசமாக குறைந்து இருந் போதிலும், இவை அனைத்தையும் தாண்டி தாஜ் மஹால் இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் நினைவுச்சின்னத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது.தாஜ்மஹால் ஈட்டிய வருமானம் டெல்லியின் செங்கோட்டையை விட ஐந்து மடங்கும், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் நினைவுச்சின்னங்கள் மற்றும் புவனேஷ்வரில் உள்ள சூரியன் கோவிலை விட பத்து மடங்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அப்படி என்ன இங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். 1632 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த பளிங்கு மாளிகை யமுனை நதிக்கரையில் சிதறி விழுந்த ஒரு சொர்க்க துண்டு போல காட்சியளிக்கிறது. சூரிய உதயத்தின் போதும் அரை நிலவொளியின் கீழும் இதை ரசிக்கும் போது 'ஆஹா இது என்ன மாயம், ஏதோ ஒரு உணர்வு நம்மை எங்கோ கொண்டு போகிறதே' என்று யாருக்கும் தோன்றாமல்
இருக்காது. சிறந்த முகலாய பாரம்பரியம் மற்றும் அன்பின் நித்தியத்தின் சின்னமாக காணப்படும் அமைதியான கல்லறைகள், நுணுக்கமான வேலைப்பாடுகள், அழகிய பூங்காக்கள், வண்ணமயமான ஷாப்பிங் ஆகிய காரணங்களுக்காக மக்கள் இங்கு அதிகம் கூடுகின்றனர்.

எது எப்படி இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பாரம்பரிய தளங்களும் நினைவுச்சின்னங்களும் பல மாதங்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. சில காலத்துக்கு பிறகு, தொற்றுநோய் தணிந்தபோது பாரம்பரிய தளங்களை மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆரம்ப காலத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டன. கொரானா தொற்றுக்கு முன்னர் ஆண்டுக்கு ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பார்வையாளர்களை பெற்றுக்
கொண்டு இருந்த தாஜ் மஹால் 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பயணிகளை மட்டுமே பெற்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் டிக்கெட் விலை காரணமாக இது வருவாயில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தாஜ் மஹால் வழக்கமாக ஈட்டும் வருவாயில் 73% குறைந்தாலும் கூட இதுவே அனைத்து பாரம்பரிய மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்களின் வருவாய் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2019-2020 ஆம் ஆண்டில், தாஜ்மஹாலில் இருந்து பெறப்பட்ட மொத்த வருவாய் ரூ.97.5 கோடி. அதேபோல், 2021-22ல் மொத்த வருவாய் ரூ.26.61 கோடியாக ஆக மொத்தம் 2022 வரை - தாஜ்மஹால் டிக்கெட் விற்பனை மூலம் சுமார் 132 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
தாஜ்மஹாலைத் தவிர, செங்கோட்டை, குதாப்மினார், ஆக்ரா கோட்டை, மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு, கொனார்க் சூரியன் கோயில், சித்தோர்கர் கோட்டை, கஜுராஹோ கோயில்கள் குழு, எல்லோரா குகைகள், ஷானிவார் வாடா ஆகியவையும் நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் பாரம்பரிய தளங்களில் இடம் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications





