சர்வதேச அளவில், தமிழ்நாடு உற்று நோக்கும் பகுதியாக மாறிவருகிறது. அதிலும், தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் பிரதானம். அத்தகைய அந்தஸ்தை பெற்றுள்ள சென்னை மாநகரில், முக்கியமான அத்தனை போக்குவரத்து சிக்னல்களும் மேம்பாலங்களாக மாறிவிட்டன.
தற்போது, மாநகரில் எத்தனை மேம்பாலங்கள் உள்ளன என்பதை, எண்ணவே முடியாது. அந்தளவுக்கு மேம்பாலங்கள் உள்ளன. மாநகரில் சில இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடியாத நிலை இருப்பதால், அங்கு மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை.
ஒரு சில இடங்களில் மேம்பாலங்கள் கட்டினால் மாற்றுப்பாதை இல்லை என்பதால், மேம்பாலத்தை கட்டாமல் அரசு தவிர்த்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தற்போது சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உற்று நோக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கசப்பான உண்மை
போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்னையாக இருக்கும் இடங்கள் எண்ணிலடங்கா என்பது கசப்பான உண்மை. கடந்த இரு தசாப்தங்களில், சென்னை மாநகரம் வாகன நெருக்கம் என்பது, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
அதாவது, மாநிலத்தின் கடைக்கோடி கிராமங்களிலும் கூட, வீட்டில் குறைந்தபட்சம் இரண்டு டூவீலர்கள், கார்கள் இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது.

நெருக்கடிக்கு பெயர் போன பகுதிகள்
அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நந்தனம் முதல் தி.நகர் பேருந்து நிலையத்தை கடந்து, நுங்கம்பாக்கம் நோக்கி செல்லும் சாலை, அண்ணா மேம்பாலம், நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி செக் போஸ்ட், அண்ணா நகர் 3வது அவென்யூ, பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை, பள்ளிக்கரணை வேளச்சேரியை இணைக்கும் கைவேலி சிக்னல், பள்ளிக்கரணை பிரதான சாலை, திருவான்மியூர் டைட்டில் பார்க், சோழிங்கநல்லூர் சந்திப்பு, பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலை , அனகாபுத்தூர் சாலை சந்திப்பு, போரூர் என, பல இடங்கள் இன்றளவில் நெரிசலுக்கு பெயர் பெற்றவை. இதுபோல இன்னும் பல இடங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில், அண்ணாசாலை, தி.நகர் உள்பட ஓரிரு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டும் வருகின்றன.
புதிய வரவு
மாநகரின் இதயம் என்றழைக்கப்படும் முக்கிய பகுதிகளில், நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா நகர் 3வது அவின்யூ, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணியை துவக்கியுள்ளது.
இவற்றில் வேளச்சேரியை பொறுத்தவரை ஒருபுறம் 100 அடி ரோடு, மறுபுறம் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் தொடங்கி, ஃபீனிக்ஸ் மால் வழியாக வேளச்சேரி செக் போஸ்ட் வரை வாகன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பீக் ஹவர்களில் நிலைமை படு மோசம்.

வேளச்சேரி செக் போஸ்ட்டை தாண்டி விட்டால் ராஜ்பவன் செல்பவர்களும், கிண்டி ரயில் நிலையம் செல்பவர்களும் காலை, மாலையில் ஒரு நொடி நெரிசல் ஏற்படுத்தும் ஒருவித பதற்றத்தை உணராமல் இருப்பதில்லை.
இவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியாக, ஐந்து பர்லாங் சாலை ஜங்ஷனில் இருந்து குருநானக் கல்லூரி ஜங்ஷன் வரை மேம்பாலம் கட்ட, சென்னை மாநகராட்சி ஆலோசித்துள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க, டெண்டர் கோரியிருக்கிறது சென்னை மாநகராட்சி.
சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா நகர் 3வது அவின்யூவில் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய, சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதில் நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையை பொறுத்தவரை, பாலம் கட்ட ஆரம்பித்தால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கி பூந்தமல்லி ஹைரோடு வரை மாற்று வழி என்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.
ஏனெனில், இப்பகுதிகளில் சாலை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அதேபோல் அண்ணா நகர் 3வது பிரதான சாலை என்பது அதிக நெரிசல் உள்ள பகுதியாகும். இங்குமே மாற்றுவழிகள் தான் பெரும் சவாலானதாக இருக்கும் என்கின்றனர் போக்குவரத்து போலீசார்.
எது எப்படியோ, சர்வதேச அளவில் தொழில் துறையினரை கூவி கூவி அழைக்கும் மாநில அரசு, அதற்கான உள்கட்டமைப்பை இப்போதே இருந்து சரியான திட்டமிடலுடன் துவக்கினால் மட்டுமே எதிர்காலத்தில் இயற்கை பேரிடர், நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதே நிதர்சனம்.



Click it and Unblock the Notifications





