ஏழுமலையானுக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷம் தான். ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச ஆதார் டோக்கன் வழங்கும் முறை இப்போது மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆதார் டிக்கெட் சேவை
கொரோனா பாதிப்புகளால் ஒராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச ஆதார் டோக்கன் தரிசன முறையை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் திருமலை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 12 - ம் தேதி நேரம் ஆதார் டோக்கன் துவங்கப்பட்டாலும் அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 க்கும் அதிகமான பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் திருமலை தேவஸ்தானம் இந்த முறையைக் கால வரையின்றி நிறுத்தி சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் முறையை அமல்படுத்தியது.
மீண்டும் துவங்கப்பட்ட ஆதார் டோக்கன் சேவை
இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக வார இறுதி நாள்கள் மற்றும் விழா நாள்களில் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த புரட்டாசி மாதத்தில் 5 கி. மீக்கும் மேல் வரிசையில் காத்திருந்து 50 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவற்றைத் தவிர்க்க மீண்டும் ஆதார் டோக்கன் முறையை அமல்படுத்துவதே தீர்வு என்று பக்தர்கள் தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் அந்த சேவையைத் தொடங்கியது.
பாதியாக குறையும் காத்திருப்பு நேரம்
இனி பக்தர்கள் முன்கூட்டியே ஆதார் டோக்கன் பெற்று அவர்கள் அனுமதிக்கப்படும் நேரத்துக்கு முன்பாக வைகுண்டம் கியூ காம்பிளக்ஸில் வந்து சேர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் தரிசனம் செய்யக் காத்திருக்கும் நேரம் பெருமளவில் குறையும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்து விடலாம்.
பக்தர்களின் வசதிக்காக 30 கௌண்டர்கள்
இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் 30 கௌண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸ், ஸ்ரீநிவாசம் காம்பிளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள விஷ்ணுநிவாசம் காம்பிளக்ஸ் மற்றும் ஐ.ஐ.என்.சி ஆகிய இடங்களில் பக்தர்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து இந்த டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
வார இறுதி நாட்களில் குறையும் டோக்கன்கள்
நவம்பர் 1 முதல் பக்தர்கள் இந்த முறையிலேயே தரிசனம் செய்துவருகிறார்கள். வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். அன்றைய தினத்திற்கான ஆதார் டோக்கன்கள் தீர்ந்து விட்டால் பக்தர்கள் நேராகவே சர்வ தரிசன வரிசையில் நின்று தரிசிக்கலாம்.
சர்வ தரிசனம் மூலம் வரும் பக்தர்களுக்குத் தாமதம் இல்லாமல் தரிசனம் வழங்கும்பொருட்டு விரைவில் விஐபி தரிசன முறையிலும் சில மாற்றங்களை தேவஸ்தானம் செய்து இருக்கிறது. அது மட்டுமின்றி நடைபாதை வழியாக சென்று பெறும் திவ்ய தரிசனம், 300 ரூபாய் சிறப்பு தரிசனம் ஆகியவை வாயிலாகவும் நீங்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.