இந்தியா 2023 ஆம் ஆண்டின் G20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்த மும்முரமாக தயாராகி உள்ளது. இதனால் மாநாடு நடைபெறும் இந்தியாவின் 50 க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்திப்புகளுடன் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வரும் பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் வருகிற 1 ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களை பார்வையிடுவார்கள். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது!
முதல் இடத்தை பிடித்த மகாபலிபுரம்
6 ஆம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் காலத்து சிற்பக்கலை எடுத்துகாட்டாக நிற்கும் மகாபலிபுரத்து சின்னங்கள் உலகப்புகழ் பெற்றவை. அதன் காரணமாக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரத்திற்கு வருகை தருகின்றனர். கடந்த ஆண்டு அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்திய சுற்றுலாத் தலங்களில் மகாபலிபுரம் முதல் இடத்தை பிடித்தது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் எந்த வெளிநாட்டினரும் மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிடாமல் நாடு திரும்ப மாட்டார்கள்.
புதுச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் G20
G20 மாநாட்டுக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றிருக்கும் நிலையில், அதன் தொடக்கநிலை மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. புதுவை 100 அடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, இந்தோனேஷியா ஆகிய 11 நாடுகளில் இருந்து 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 வல்லுநர்களும் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி முழுவதும் தடை உத்தரவு
இம்மாநாட்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கலந்துரையாடலுக்காக சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்வதால் புதுச்சேரி முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலைகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாபலிபுரத்தைப் பார்வையிடும் பிரதிநிதிகள்
இந்நிலையில் புதுச்சேரியில் மாநாடு முடிந்த பின்னர் பிரதிநிதிகள் அனைவரும் சென்னையில் நடைபெறும் மாநாட்டில் ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தை பார்வையிட்டு வருவதற்காக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்
கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு நடந்து சென்று கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வீசும் காற்றின் மூலம் இந்த புராதன பகுதிகளில் உள்ள சிற்பங்கள், புல்வெளி மைதானங்கள், நடைபாதைகள், நுழைவு சீட்டு மையங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சு பரவி உள்ளதா? என கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டுபிடிக்கும் ரேடார் கருவி, ரேடார் மீட்டர் மூலம் ஆய்வு செய்தனர். இவர்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர், புராதன சின்னம், சோதனை சாவடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாவட்ட போலீசார் 1000 க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரம் செல்ல தடை
சென்னை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதிநிதிகள் வருகிற 1-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. புராதன சின்னங்களில் புல்வெளிகள் அமைத்தல், அழகிய மலர் செடிகள், நடைபாதைகள் அழகான முறையில் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொல்லியல் துறை சார்பில் நடந்து வருகின்றன.
இதனால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!