சாதாரண நாட்களில் கூட மாலை 6 மணிக்கு மேல் பெருங்களத்தூரை கடக்க வேண்டும் என்றாலே அரை மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவே, வார இறுதி, நீண்ட விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் சென்னையில் வசிக்கும் மக்கள் மாலை புறப்பட்டாலும் கூட வண்டலூரை கடக்கவே இரவு 12 ஆகி விடும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே. ஆனால், இனி இந்த நிலை இல்லை. கூடிய விரைவில் பெருங்களத்தூரில் மேம்பாலம் திறக்கப்பட்டுவிடும்! இது உண்மையிலேயே நம் எல்லோருக்கும் குட் நியூஸ் தானே!
கிண்டல் கேலிக்கு உள்ளாக்கப்படும் பெருங்களத்தூர் டிராஃபிக்
நீங்கள் பல வீடியோக்கள், யூடியூபர்கள், மீம்ஸ் பேஜ்கள் என பலவற்றிலும் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலை பற்றி கிண்டலும், கேலிகளும் உலா வருவதை கண்டு இருப்பீர்கள். ஆனால், அவை உண்மை தான். சென்னையிலிருந்து திண்டிவனம் துவங்கி, திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், நாகர்கோயில், கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்தையும் சென்னையுடன் இணைக்கும் ஒரே முக்கிய சாலை என்றால் அது GST சாலை தான். இந்த சாலையில் குறிப்பாக பெருங்களத்தூரில் எப்போதுமே டிராபிக் அதிகமாக காணப்படுகின்றன.
சென்னையின் முக்கிய சாலை - GST
பெருங்களத்தூர் என்பது சென்னையை தமிழ்நாட்டின் பல்வேறு தென் பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான சந்திப்பு ஆகும். இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) அமைந்துள்ளது, இது சென்னை மற்றும் பிற தென் நகரங்களுக்கு இடையே பயணிக்கும் பயணிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு குறிப்பிடத்தக்க பாதையாக அமைகிறது.

பெருங்களத்தூரில் மட்டும் எப்போதுமே டிராஃபிக்
பெருங்களத்தூரில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதாலே இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெருங்களத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரைவான நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் ஆகியவை குடியிருப்பு மற்றும் வணிக நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுத்தன. இதனால், சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பெருங்களத்தூரா.. ஐயையோ..
நீங்கள் சாதாரண நாட்களில் கூட அரை மணி நேரத்திற்கு குறைவாக இந்த இடத்தினை கடந்திட முடியாது. இதுவே பொங்கல் தீபாவளி என்றால் கட்டாயம் 3 மணி நேரம் இல்லாம இந்த இடத்தை கடக்க முடியாது. ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையில் இருந்தும் சென்னையை நோக்கியும் வந்த வண்ணம் உள்ள ஒரு சாலை இது. சில நொடிகள் ஒரு வாகனம் வேகமாக செல்ல முடியாவிட்டாலும் கூட, அடுத்த 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகி விடும். பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லை. அதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இங்கே உள்ளது.
பெருங்களத்தூரில் அமைக்கப்பட்டு வந்த மேம்பாலங்கள்
இதற்கு ஒரு முடிவு கட்டவே பெருங்களத்தூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. பெருங்குளத்தூர் மேம்பாலம் அமைப்பதற்காக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 234 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து 2019 துவங்கின. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வண்டலூர் முதல் தாம்பரம் மார்க்கமான பாதை பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இதுவரை இரண்டு மேம்பாலங்கள் திறப்பு
இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து, புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் வழியாக இறங்கும் மேம்பாலமும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் மார்க்கமான பணிகள் துவங்கப்பட்டன, ஒரு சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆகின, இந்தநிலையில் தற்பொழுது பணிகள் வேகம் எடுக்கப்பட்டு இரவு மற்றும் பகல் என இரண்டு வேளைகளிலும் பணிகள் தீவிர படுத்தப்பட்டன.
மீதி இருக்கும் மேம்பாலங்களும் இன்னும் 1 மாதத்தில் திறக்கப்படும்
தேர்தலுக்குப் பிறகு பணிகள் தீவிரமடைய துவங்கின. ஒரு சில பணிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இரண்டு வாரத்திற்குள் வண்டலூர் மார்க்கமான, மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டால் பெருங்களத்தூர் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்களுக்கு இந்த பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் கட்டாயம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





