தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் திருச்சியில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாத் தொகுப்பை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு சுற்றுலாத் துறை தமிழக சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது.
TTDC நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாநில TTDC சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, திருச்சியில் இருந்து திருப்பதிக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை தினசரி அடிப்படையில் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த சுற்றுலா பேருந்து தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக திருச்சியிலிருந்து திருப்பதிக்கு குளிர்சாதன வசதியுடன் சுற்றுலா சொகுசு பஸ் தினசரி இயக்கப்படுகிறது. இந்த திட்டம் வருகிற 8-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மாநில விரைவு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 40 இருக்கைகள் கொண்ட குளிர் சாதன பேருந்துகள் இந்த சுற்றுலாத் தொகுப்பில் பயன்படுத்தப்படும். ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்தோ, அல்லது மற்ற போர்டிங் பாயின்ட்டுகளான பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்தோ பேருந்தில் ஏறிக் கொள்ளலாம்.
இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் பேருந்து மறுநாள் காலை 5 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். பக்தர்களுக்கு திருப்பதியில் இரண்டு மணி நேரம் தங்குமிடம் வழங்கப்படும், அங்கு அவர்கள் இளைப்பாறி புத்துணர்ச்சி பெற்ற பிறகு திருமலைக்கு பயணத்திற்கு தயாராகலாம். பக்தர்கள் மற்றொரு பஸ் மூலம் திருமலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஸ்ரீ பாலாஜி தரிசனத்தைத் தொடர்ந்து, அவர்கள் தாயாரைக் காண திருச்சானூருக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்பட கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.3,300-ம், சிறுவர்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலா சொகுசு பஸ்சில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான https://www.ttdconline.com/-ல் சுற்றுலா பற்றிய விவரங்கள் மற்றும் முன்பதிவையும் செய்து கொள்ளலாம் என சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருச்சியை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் இதே போல டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்த TTDC திட்டமிட்டுள்ளது. ஆகவே இனி திருப்பதிக்கு சுலபமாக செல்லலாம். நீங்கள் திருச்சி வாசியாக இருந்தால் இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!



Click it and Unblock the Notifications




