நம்பிக்கை என்று வரும்போது, குடும்பத்திற்கு சில நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வர பரிந்துரைக்கும் பல்வேறு விஷயங்களை மக்கள் நம்புகிறார்கள். அது போல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் ஏலத்தில் கிடைக்கும் எலுமிச்சை பழத்தை வாங்கினால், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், தீராத நோய்களும் தீரும், கட்டாயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை! இந்த வருட ஏலத்தில் முருகனுக்கு சாற்றப்பட்ட எழுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாம் தெரியுமா மக்களே!
பிரசித்தி பெற்ற சின்ன மயிலம் முருகன் கோயில்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற இரத்தின வேல்முருகன் கோயில் உள்ளது. இந்த கோயில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கருவறையில் 5 அடி உயரத்தில் முருகனின் வேல் மட்டுமே பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுத்தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது.

பக்தர்கள் குறை தீர்க்கும் எலுமிச்சை
இந்த 9 நாட்களும் ரத்தினவேல் முருகன் கோயிலில் இருக்கும் 5 அடி உயர வேலில் ஒவ்வொரு எலுமிச்சை பழம் சொருகி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது வந்தது. காலம் காலமாக பங்குனி உத்திரத்தில் வழிபாடு செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். மொத்தம் 9 எலுமிச்சை பழங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். 9 நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்களும் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டன.
போட்டிக் கொண்டு ஏலம் எடுத்த பக்தர்கள்
11 ஆம் நாள் இரவு 11 மணி முதல் 12:30 மணி வரை எலுமிச்சை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு எலுமிச்சை பழமும் 100 ரூபாய்க்கு தொடங்கி 1000, 2000, 3000 என ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்டனர். இதில் அதிகபட்சமாக முதல் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.50,500 ரூபாய்க்கும், 2ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.26,500க்கும், 3ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.42,100க்கும், 4 ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 5ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்திற்கும், 6ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.34 ஆயிரத்திற்கும், 7ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.24,500க்கும், 8ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.13,500க்கும், 9ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும் என மொத்தம் உள்ள 9 எலுமிச்சை பழங்களும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

வேண்டியதை வரமாக வழங்கும் முருகப்பெருமான்
இதனை ஏலம் எடுப்பதற்கு புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், பெங்களூர், திருச்சி, போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் வந்து இருந்தனர். இந்த ஏலத்தில் கிடைக்கும் எலுமிச்சையை வாங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். வியாபாரம் செய்பவர்களின் கடன் சுமை குறையும். வீடு கட்ட முயல்பவர்கள் வெற்றிகரமாக வீடு கட்டுவார்கள். திருமணமாகாத நபர்களுக்கு திருமணம் ஆகும். எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். முருகனை மந்தர வேண்டிக் கொண்டு இந்த எலுமிச்சையை வாங்கினால் எப்பேற்பட்ட வேண்டுதலும் நிறைவேறுமாம் மக்களே!



Click it and Unblock the Notifications





