மார்னி ஹில்ஸ் எனப்படும் போஜ் ஜபியல் ஹரியானாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். பஞ்ச்குலா மற்றும் ஹரியானாவின் மிக உயர்ந்த மலை உச்சியும் இதுதான்.
சண்டிகாரில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இவ்விடத்தின் பெயர் இங்கே ஆட்சி செய்த ஒரு ராணியின் பெயரில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விடத்தில் இருந்து காணப்படும் ஏரிகள் நிறைந்த இமயமலையின் எழில்மிகு காட்சியும் பலவகையான மலர்களும் மதிமயக்கச் செய்வதாக இருகிறது.
சிவாலிக் மலைகளில் ஒருபகுதியாக இருக்கும் மார்னி ஹில்ஸில் இரண்டு ஏரிகள் இருக்கின்றன. மலைகளால் அவற்றுக்கிடையே இடைவெளி இருந்தாலும் இரண்டு ஏரிகளுக்குமிடையே சிறிய நீர்ப்பாதை இருப்பதால் நீரின் அளவு சமமாகவே இருக்கிறது.
உள்ளூர் மக்கள் இந்த ஏரிகளை புனிதமானதாக கருதுகிறார்கள். மேலும் இவ்விடத்தில் மார்னி ஹில்ஸ் என்ற பெயரில் ஒரு கிராமமும் இருக்கிறது.
மலையேற்ற வீரர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் வகையில் மார்னி ஹில்ஸ் மற்றும் ஹரியான மாநில நெடுஞ்சாலையில் ஹரியானா அரசு பல விடுதிகளை கட்டியிருக்கிறது. சண்டிகர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு செல்லும் சாலைகள் நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளன.
இந்திய வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையும் ஓய்வு விடுதிகளை கட்டியிருக்கின்றன. நீச்சல் குளம், சறுக்கு விளையாட்டு மைதானம், குழந்தைகள் மைதானம் என அனைத்து வசதிகளும் இங்கு உண்டு.
பழைய சிதிலமடைந்த கோட்டை ஒன்றும் இங்கிருக்கிறது. மலையேற்ற ஆர்வலர்களின் விருப்ப இடமாக மார்னி ஹில்ஸ் இருக்கிறது.
டிக்கார் தால், படா டிக்கார், சோட்டா டிக்கார ஆகிய செயற்கை ஏரிகள் மார்னி ஹில்ஸில் அமைந்துள்ளன. ஹர்யானா சுற்றுலாத் துறை டிக்கார் தால் பகுதியில் பயணிகளுக்கு கூடாரங்கள் அமைத்திருக்கிறது.
மார்னியில் இருந்து 7கிமீ தொலைவில் இந்த ஏரிகள் உள்ளன. இயற்கைச் சுற்றுச்சூழல் கூடாரமடித்து தங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது.
பஞ்ச்குலா பகுதியின் முதல் சாகசப் பூங்கா என்பதால் இங்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள். 2004ல் ஹரியான சுற்றுலாத் துறை சிறிய ஏரிக்கு அருகில் இப்பூங்காவை அமைத்தது.
இமயமலையின் அடிவாரத்தை சுற்றுலா இடமாக மாற்றும் நோக்கத்துடன் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. பர்மா பால, படகு சவாரி, கயாகிங், செயிலிங், ரேப்பலிங், பாறையேற்றம் போன்ற பல சாகச விளையாட்டுக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் உள்ளன.
மலையேற்றத்திற்ககு ஏற்ப வானிலையும் நிலப்பரப்பும் இங்கு அமைந்துள்ளது. காக்கர் நதி இந்த பள்ளத்தாக்குகளின் வழியாக பாய்கிறது. மதிமயக்கும் அழகிய பள்ளத்தாக்கின் பின்னணியில், மலை உச்சியில் பச்சைபுல்வெளியுடன், மதுபான விடுதி வசதியுடன் கூடிய உணவு விடுதி அமைந்துள்ளது.
பைன் மரங்கள் நிறைந்த இந்த மலை உச்சியில் மலையேற்றம் செய்வது சாகசம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் மார்னி ஹில்ஸ் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் தகுந்த இடமாக இருக்கிறது. இப்பகுதி முழுமையாக ஆராயப்படாததால் பயணிகளுக்கு இவ்விடத்தைப் பற்றிய பல விசயங்கள் புதிராக இருக்கின்றன. உள்ளூர் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது.
வேப்பம், பெபல், ஜாமூன், தாக், பைன் ஆகிய மரங்கள் மார்னி ஹில்ஸில் நிறைந்து காணப்படுகிறது. வசந்த காலத்தில் இம்மரங்கள் அனைத்திலும் பூக்கள் நிறைந்திருப்பது மிகவும் ரம்மியமான காட்சியாக இருக்கிறது. புறாக்கள், குவாய்ல்கள், சேண்ட் க்ரோஸ் ஆகியவை இங்கு காணப்படும் சில பறவைகளாகும்.
சம்பார், கழுதைப் புலி, காட்டுப்பூனை ஆகியவை இங்கு காணப்படும் சில வனவிலங்குகளாகும். ஹரியானா சுற்றுலாத்துறை பயணிகளின் வசதிக்காக சுற்றுலா தொகுப்புகளையும் கொடுக்கிறார்கள். கூடாரத்துடன் தூங்கும் பைகளும் தரப்படுகின்றன. எனினும் பயணச் செலவு தொகுப்பில் அடங்காது.