இந்தியாவின் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில், சண்டிகரின் துணை நகரமான பஞ்ச்குலாவும் ஒன்று. பஞ்ச்குலா மாவட்டத்தின் ஐந்து நகரங்களுள் ஒன்றான பஞ்ச்குலா, பஞ்சாபின் மொஹாலி நகருடன் தன் எல்லையை பகிர்ந்தபடி அமைந்துள்ளது. இந்திய ராணுவத்தின் பெரிதும் மதிக்கப்படும் தலைமையகமான சண்டிமந்திர் பாசறை இங்கு உள்ளது.
உள்ளூர் மக்களால் 'குல்' என வழங்கப்படும் நீர்பாசன கால்வாய்களின் பேரால் இவ்வூர் பஞ்ச்குலா என வழங்கப்படுகிறது. இக்கால்வாய்கள் கக்கார் நதி நீரை சுற்றியுள்ள பகுதிகளான நடா சாஹிப், மானசா தேவி ஆகிய இடங்களுக்கு அளிக்கிறது. உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த கால்வாய்களை கிராமவாசிகளே பராமரிக்கிறார்கள்.
கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இமாச்சலப் பிரதேசமும், மேற்கு தெற்கு பகுதிகளில் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களும் இப்பகுதியை சூழ்ந்துள்ளன.
இவ்வழியாக ஓடும் கக்கார் நதி வற்றாத நதி என்றாலும் கூட மழைக்காலம் தவிர்த்து மற்ற பருவங்களில் குறைவான நீரையே கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரும் நீர்பாசனத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
நகரப் பண்ணையான பஞ்ச்குலா சண்டிகாரின் மேற்குப் பக்கம் அமைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நகரம் குடியிருப்புகள், தொழிற்பகுதி, பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களுக்கான இடங்கள் என திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிவாலிக் மலைத்தொடர்ச்சியுடன் கூடிய கக்கார் நதியின் மேற்குப் பக்கம் அமைந்துள்ளதால் பஞ்ச்குலா நகரின் பின்னணி இயற்கை எழில் நிறைந்ததாக இருக்கிறது.
தெள தேவி லால் விளையாட்டு வளாகம் மற்றும் கோல்ஃப் மைதானமும் பொழுதுபோக்கிற்காக இங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.எல் கிரிக்கெட் பந்தய விளையாட்டுக்களுக்காக இந்த விளையாட்டு வளாகம் புகழ்பெற்று விளங்குகிறது.
இங்கிருக்கும் பிஞ்சூர் எனும் இடத்தில் எச்.எம்.டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற தனித்துவம் வாய்ந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் ஏராளமாக பணியாற்றுகின்றனர்.
பஞ்சாபி மற்றும் இந்தியே இங்கு பெரும்பாலான மக்களால் பேசப்பட்டாலும், மாநில மொழியாக ஹர்யான்வி விளங்குகிறது. சமீபத்தில் மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன
பஞ்ச்குலாவிற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
சிவாலிக் மலைகளைச் சேர்ந்த, பஞ்ச்குலாவின் ஒரே மலைப்பிரதேசமான மார்னி ஹில் ஹர்யானாவின் மிக உயர்ந்த மலை உச்சியாகும்.
யதவிந்திர தோட்டங்கள் என்றும் அழைக்கப்படும் பிஞ்சூர் தோட்டம், அங்கிருக்கும் அழகிய முகாலய தோட்டங்களுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் கெளசாலி பஞ்ச்குலாவில் இருந்து 30 நிமிட தொலைவில் உள்ளது.
இங்குள்ள சகி மோட் என்ற இடத்தில் இயற்கை ஊற்று அமைந்துள்ளது. கேபிள் காரில் டிம்பர் ட்ரெயில் வழியாக பயணிப்பது சண்டிகார் மற்றும் பஞ்ச்குலா நகரங்களின் மொத்த அழகையும் காண்பிப்பதாக இருக்கிறது.
பயணிகள், பல்வேறு பொழுதுபோக்குகள் நிரம்பிய, மலை உச்சியில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றையும் கேபிள் காரில் இருந்தபடியே காணலாம்.
காக்கர் நதி கரையில் குரு கோவிந்த் சிங்கிற்கு கீழ் பணியாற்றிய நாடா சிங்கின் நினைவாக பெயரிடப்பட்ட குருத்வாரா நாடா சாஹிப் அமைந்துள்ளது. சண்டிகாரில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் மானசா தேவி கோவில் 1815ல் கட்டப்பட்டது. இங்கிருக்கும் அம்மன் வரம் அளிக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறது.
இங்கிருக்கும் கள்ளிச்செடி (கேக்டஸ்) தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். பல அரிய வகை தாவரங்கள் இங்கிருக்கின்றன. 360ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, சாண்டல் ஆட்சியாளர்களால் ஆட்சிசெய்யப்பட்ட ராம்கார்ஹ் கோட்டை இங்கு உள்ளது. சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன.
மானசா தேவி கோவிலில் இருந்து 10கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 22ல் சண்டி மந்திர் என்ற கோவில் அமைந்துள்ளது. அதன் பேராலேயே சண்டிகருக்கு அந்தப் பெயர் வந்தது.
பீமா தேவி கோவிலின் பழைய மிச்சங்களை பிஞ்சூரில் காணலாம். பின்ணணியில் சிவாலிக் மலைகள் அமைந்துள்ளதால் இயற்கை எழில் வாய்ந்ததாக இவ்விடம் திகழ்கிறது.
இவ்விடத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி இதை 11ஆம் நூற்றாண்டு வேலைப்பாடாக வகைப்படுத்தியதோடு, பஞ்சாயத்தான் பாணி என தெரிவித்திருக்கிறது.