வார விடுமுறை பிக்னிக் சிற்றுலா செல்வதற்கு இந்த பிண்டவாஸ் ஏரி மிகவும் ஏற்றது. பறவை ரசிகர்கள் மற்றும் புகைப்பட, வீடியோ ஆர்வலர்களும் இந்த ஏரிப்பகுதிக்கு அதிகம் விஜயம் செய்கின்றனர். 12 கி.மீ பரப்பளவில் இந்த ஏரி பரந்து காணப்படுகிறது.
இந்த ஏரிப்பகுதி 1985ம் ஆண்டில் ஒரு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மனித முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி ஜவஹர்லால் நேரு கால்வாயில் பெருகும் உபரி நீரை தேக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
உலகின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர் பறவைகள் இந்த ஏரிப்பகுதிக்கு ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றன. குளிர்காலத்தில் இவை தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு இதமான பருவநிலை நிலவும் இப்பகுதிக்கு விஜயம் செய்கின்றன.
பல்வேறு வகைகளைச்சேர்ந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக இப்பகுதியில் காணப்படுவதால் பறவை ரசிகர்கள் விருப்பத்துடன் இந்த ஏரிக்கு வருகை தருகின்றனர்.
மீன்கொத்திப்பறவைகள், மயில், புல்புல், கொண்டலாத்தி, ராட்சத நீர்க்காக்கை, ஊதா நீர்க்கோழி போன்ற வண்ணமயமான பறவையினங்கள் கலவையான ஒலிகளை எழுப்பியபடி உலாவிக்கொண்டிருப்பதை பார்வையாளர்கள் இங்கு ரசிக்கலாம்.
இந்த ஏரியின் மையத்தில் சிறு தீவுப்பகுதிகள் போன்ற அமைப்புகள் அமைந்திருப்பதால் பறவைகள் தங்குவதற்கு வசதியாக உள்ளது. மிகப்பெரிய பரப்பளவை இந்த ஏரி கொண்டிருப்பதால் சாதாரண கேமராக்கள் மூலம் இங்கு புகைப்படம் எடுப்பது சிரமம். விசேஷ லென்ஸ்கள் பொருத்திய தொழில்முறை கேமராக்கள் மூலம் பறவைகளை படம் பிடிக்கலாம்.