சரிஸ்கா தேசியப்பூங்கா என்றும் அழைக்கப்படுகிற சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்’ ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் டெல்லி-அல்வர்-ஜெய்ப்பூர் சாலைக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதி அக்காலத்திய அல்வர் ராஜவம்சத்தினருக்கு வேட்டைக்களமாக திகழ்ந்துள்ளது. 1955ம் ஆண்டு இது அதிகாரபூர்வமாக காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1979ம் ஆண்டில் தேசிய இயற்கைப்பூங்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய இயற்கைப்பூங்கா இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் ஆரவல்லி மலைத்தொடரில் 800 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது புல்வெளிப்பகுதி, வறண்ட இலையுதிர்காடுகள், செங்குத்தான சிகரங்கள் மற்றும் பாறைப்பிரதேசங்கள் என்று பலவகை நிலப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
பெரும்பாலும் இக்காட்டுப்பகுதியில் தோக் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் பலவகை காட்டுவிலங்குகளான சிறுத்தைகள், சாம்பார் மான்கள், சிறுமான்கள், நில்கை மான்கள், நான்கு கொம்பு கலைமான்கள் , காட்டுப்பன்றிகள், ரீசஸ் குரங்குகள், லாங்குர் குரங்குகள், கழுதைப்புலிகள் மற்றும் காட்டுப்பூனைகள் ஆகியவை வசிக்கின்றன. கௌதாரி, மணல் வாத்து, தங்கக்குருவி மற்றும் கொண்டைப்பருந்து போன்ற பறவையினங்களையும் இங்கு பார்க்கலாம்.
மாமிசபட்சணிகளான சிறுத்தைகள், காட்டு நாய், காட்டுப்பூனை, கழுதைப்புலி, நரி ஆகியவையே இங்கு அதிகம் காணப்படும் விலங்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.10ம் நூற்றாண்டு மற்றும் 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த கர்ஹ்- ரேஜர் எனும் புராதனமான கோயில்களின் இடிபாடுகளும் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன. இந்த தேசிய இயற்கைப் பூங்காவிலுள்ள ஒரு மலையின் உச்சியில் 17ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு கோட்டையும் அமைந்துள்ளது. இந்தகோட்டையை சுற்றி கழுகுகளும் பருந்துகளும் பறந்த வண்ணம் இருக்கும் காட்சியைப்பார்ப்பது மிக அற்புதமான ஒரு அனுபவமாக உள்ளது.