ஷிமோகா எனும் பெயருக்கு சிவனின் முகம் என்பது பொருளாகும் (ஷிவ்முகா). இந்நகரம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து 275 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மலநாடு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எழில் நகரம் மேற்குத்தொடர்ச்சியின் ஒரு அங்கமாகும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் மாநிலத்தின் மற்ற நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளிடையே வெகு பிரசித்தமாக உள்ளது.
சில பின்னணித்தகவல்கள்
ஐந்து ஆறுகள் ஓடும் செழிப்பான இந்த மாவட்டம் ‘பேஸ்கட் ஆஃப் கர்நாடகா’ (ரொட்டிக்கூடை)’ மற்றும் ‘ரைஸ் பௌல் ஆஃப் கர்நாடகா(அரிசிக்கிண்ணம்)’ என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சஹயாத்திரி மலைத்தொடர்கள் அவற்றின் அபரிமிதமான மழைப்பொழிவின் மூலம் இப்பகுதியின் ஆறுகளை எப்போதுமே வற்றாது ஓடவைக்கின்றன. வளம் கொழிக்கும் இந்த ஷிமோகா பூமியை உள்ளூர் மக்கள் ‘பூமியிலுள்ள சொர்க்கம்’ என்றே அழைக்கின்றனர்.
அனைவருக்கும் ஏற்ற ஏதாவது ஒரு அம்சத்தை இந்த எழில் பிரதேசம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கோயில்கள், மலைகள், செழுமையான தாவரப்பசுமை மற்றும் இந்தியாவின் மிக உயரமான - உலகப்பிரசித்தி பெற்ற - ஜோக் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை ஷிமோகா கொண்டுள்ளது.
வியப்பூட்டும் விசேஷங்கள் ஏராளம்
கர்நாடகாவின் புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களுக்கிடையே அமைந்திருப்பதால் ஷிமோகா நகரத்தை கேந்திரமாக கொண்டு சுற்றுலாப்பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஷிமோகா நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்திலுள்ள ஆகும்பே எனும் இடம் இங்குள்ள ‘சன்செட் பாயிண்ட்’ எனும் காட்சித்தளத்திற்காக பிரசித்தி பெற்றுள்ளது. பருவநிலை தெளிவாக உள்ள காலங்களில் இந்த காட்சித்தளத்திற்கு அதிக அளவில் சுற்றுலா ரசிகர்கள் விஜயம் செய்கின்றனர்.
அடர்ந்த காட்டுப்பகுதிகள், புரண்டோடும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக்கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவற்றை இந்த காட்சித்தளத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கஜனூர் அணை ஷிமோகாவிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாகும். யவரேகொப்பா எனும் இடத்தில் லயன் சஃபாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடலாம்.
பத்ரா ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் மற்றொரு அணை ஷிமோகாவிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. 200 அடி உயரம் கொண்ட இந்த அணை கர்நாடகத்திலேயே மிக உயரமான அணையாகும்.
புகழ்பெற்ற சிருங்கேரி சாரதா மடம் ஷிமோகாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ஆதிசங்கரரால் ஹிந்து மதத்தின் உன்னதங்களை பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். முக்கிய யாத்ரிக ஸ்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் சிருங்கேரி மடத்திற்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஷிமோகாவை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி சாகச ரசிகர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை அளிக்கிறது. இங்கு இயற்கை நடைப்பயணம் மற்றும் மலையேற்றத்திற்கான பாதைகள் அதிகம் உள்ளன.
நாட்டிலேயே அதிக மழைப்பொழிவு பெறும் இரண்டாவது இடமாக அறியப்படும் ஆகும்பே பகுதியில் மழைக்காடுகள் அராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இப்பகுதி ராஜ நாகம் எனப்படும் இந்திய கருநாகம் அதிகம் வசிக்கும் பிரதேசமாகவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜுலை முதல் ஜனவரி வரையிலான காலம் ஷிமோகா பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. இக்காலத்தில் இங்குள்ள ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் நிரம்பி வழிவதால் அவற்றை கண்டு களிக்க வசதியாக உள்ளது.
ஷிமோகவில் பலதரப்பு பயணிகளுக்கும் ஏற்றபடி பலவகையான தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் போன்றவை ஏராளம் அமைந்துள்ளன.