மழை, கான்கிரீட் நகரத்தையும் பசுமை நகரமாக மாற்றிவிடும் வலிமை படைத்தது. ஒரு பெரு மழை போதும்; நகரை, ஆறாய் மாற்ற! அப்படியிருக்க, ஊரைச்சுற்றி மேற்கு மலைத் தொடர்ச்சியும், தாமிரபரணி ஆறும் கொண்ட அம்பாசமுத்திரம் மழைக்காலத்தில் எப்படி காட்சியளிக்கும் ? படிக்கும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு வருகிறதல்லவா! ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் அம்பாசமுத்திரம் ஒன்று. அதில் குறிப்பாக அகத்தியர் அருவி.
Photo Courtesy : Muthuraman99
அகத்தியர் அருவி, பாபநாசம் அருகில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற அருவி; முக்கியமான சுற்றுலா தலமும் ஆகும். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழை காரணமாக அகத்தியர் அருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. ஆனால், அதிகபட்ச நீர்வரத்து, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கிறது.
புராணத்தின்படி, அகத்தியர், கைலாயத்தில் நடக்கும் சிவன்-பார்வதி கல்யாணத்தை காண விரும்பி தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரது தவத்தின் பலனாக திருமணக் கோலத்தில் சிவனும் பார்வதியும் பாபநாசத்தில், அகத்தியர் முன் காட்சியளித்ததாக ஐதீகம். இதனாலேயே பாபநாசநாதர் கோவில் இங்கு வந்தது; அகத்தியர் அருவி என்ற பேரும் வந்தது.
Photo Courtesy : Wikipedia
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு நடக்கும் திருவிழா அதிக அளவில் மக்களை ஈர்க்கிறது.
பாபநாசநாதர் கோயிலுக்கு வருபவர்கள் இங்கு குளிப்பதை ஒரு முக்கிய சடங்காக, புனித நிகழ்வாக கருதுகின்றனர். குறிப்பாக, . நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்குச் சென்று வருபவர்களும் இங்கு பலர் வருகின்றனர்.
Photo Courtesy : Mariselvam
இவ்வருவியின் உச்சியில் அதாவது 125 அடியில் இருக்கும் ஒரு நீரூற்றிற்கு கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்துதான் அருவியாய் நீர் கீழே வருகிறது.
இதைத்தவிர , களக்காடு முண்டந்துறை புலி சரணாலயம், பசுமைக்காடாய் விரியும் தேயிலைச் செடிகள் சூழ் மாஞ்சோலைத் தோட்டம் மக்கள் மிக விரும்பிப் பார்க்கும் முக்கிய இடங்கள். காரையார் அணை, பாணதீர்த்தம் அருவி, தாமிரபரணி ஆறு என இன்னும் பல வகை சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன.
அம்பாசமுத்திரம் செல்வது எப்படி ?
திருநெல்வேலியிலிருந்து 45 கீ.மி தொலைவில் இருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து 15-30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. ஆனால், விரைவு வண்டிகள் வராது. திருநெல்வேலி, செங்கோட்டை பேசஞ்சர்கள் இயக்கப்படுகின்றன. அருகில் இருக்கும் விமான நிலையம்: மதுரை மற்றும் திருவனந்தபுரம்.