ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்த பின்னர், பயணிகளை கவர பல்வேறு சுவாரஸ்யமான திட்டங்களையும் அம்சங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. பயண தேதியை மாற்றிக் கொள்வதற்கும், டிக்கெட்டை ரத்து செய்வதற்கும் இனி ஏர் இந்தியா சார்பில் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த அம்சம் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அருமையான வசதியை எப்படி உபயோகப்படுத்துவது, அதில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் இதோ!

அதிகரித்து வரும் பனிப்பொழிவால் பாதிக்கப்படும் பயணிகள்
வட இந்தியா முழுவதும் பனி பொழிவு இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக எதிரில் வரும் நபர்கள், வாகனங்கள்கூட தெரியாத அளவிற்கு மிகக் கடுமையாக பனி பொழிந்துக் கொண்டு வருகிறது. அதோடு அவ்வப்போது வானில் ஏற்படும் சீரற்ற வானிலை காரணமாக விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை குறைக்கும் விதமாகவே ஏர் இந்தியா ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய “பாஃக் கேர்”
குளிர்காலத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக விமானங்களின் தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்படும் விமான சேவை ஆகியவை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் "பாஃக் கேர்" (FogCare) என்ற முயற்சியை அறிமுகப்படுத்தியது, இது குளிர்காலத்தில் அடர்ந்த மூடுபனி காரணமாக விமானங்களின் தாமதங்கள் மற்றும் ரத்து போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளை கவனித்துக்கொள்ளும். இதனைப் பயன்படுத்தி டிக்கெட் ரத்து செய்தல், பயணம் செய்யும் தேதியை மாற்றுவது ஆகியவற்றை செய்யலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்பதே இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

டெல்லியில் இருந்து தொடங்கும் சேவை
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்களுக்கு இந்த முயற்சி முதலில் தொடங்கப்படும் என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரியும், விமான நிலைய செயல்பாடுகளின் உலகளாவிய தலைவருமான ராஜேஷ் டோக்ரா கூறியதாவது "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம், அதன் ஒரு படியாக தான் "பாஃக் கேர்" முயற்சியை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். இந்த முயற்சி பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட நாட்களில் பயணிகளின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும்" என்று அவர் கூறினார்.

டாடா குழுமத்தால் சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஏர் இந்தியா
68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடா குழுமத்தின் கைகளுக்கு கடந்த ஆண்டு ஏர் இந்தியா கைப்பற்றப்பட்டது. ஏலத்தின் வாயிலாக ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இதனை வாங்கிய டாடா குழுமம் பல்வேறு அசத்தலான ஆஃபர்களை அறிவித்து வருகிறது. இப்போது அறிமுகப்படுத்திய "பாஃக் கேர்" பயணிகளுக்கு வழங்கும் சிறப்பம்சங்கள் இதோ கீழே!
o விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்கவும் உதவுவதோடு, அவர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.
o ரத்து செய்யப்படும் விமானங்களில் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு, மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.
o CAT-III இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) மூலம் குறைந்த தெரிவுநிலை நிலைகளில் செயல்படும் திறன் கொண்ட முழுப் பயிற்சி பெற்ற காக்பிட் குழுவினருடன், ஏர் இந்தியா பனிமூட்டத்தால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கத் தயாராக உள்ளது.
o கூடுதலாக, www.airindia.com இல் உருவாக்கப்படும் பிரத்யேக ஃபோக்கேர் இணையப் பக்கத்துடன், இந்த முயற்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்.
o அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், விமானத்தின் நிலை குறித்த நேரடித் தகவல்கள் மற்றும் மறு திட்டமிடல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான ஆதரவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களைப் பயணிகள் இந்தப் பக்கத்தில் காணலாம்.
இந்த திட்டம் மூலமாக பெருவாரியான பயணிகள் பயனடைவார்கள், அதோடு இதனை பயணிகளும் வரவேற்றுள்ளனர்.



Click it and Unblock the Notifications




