ஒரு பரபரப்பான நகரமாகவும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் சிங்கார சென்னைக்கு பல முகங்கள் உண்டு. காலம் கடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், அதியசம் நிறைந்த கோவில்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், வானுயர்ந்த ஷாப்பிங் மால்கள், பல வண்ண கடற்கரைகள், கேளிக்கைப் பூங்காக்கள் என பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவொன்றும் இல்லை!
ஆனாலும் இவை யாவும் மக்கள் கூடும் இடங்கள்! எப்போதுமே ஜே ஜே என்று தான் இருக்கும், தனிமை விரும்பிகளுக்கும், கூட்ட நெரிசலில் இருந்து விடுபட்டு சற்று இளைப்பாற நினைப்பவர்களுக்கும் இடமுண்டா என்று நீங்கள் யோசிக்கலாம்! ஆம், அதற்கும் இடமுண்டு நம் சென்னையில். கயாக்கிங், ராஃப்டிங், பாராகிளைடிங், சர்ஃபிங் போன்ற பல்வேறு சாகச விளையாட்டுகளுக்கு சென்னையில் இடமுண்டு என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்!
அதே போல் தான் இயற்கையை ரசித்துக் கொண்டே இரவை கொண்டாடும் ஒரு அற்புத செயலான கேம்பிங் நம்மில் பலருக்கு பிடிக்கும், ஆனால் அதை நிகழ்த்திப் பார்க்க நீங்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு தான் செல்ல வேண்டும் என்று அர்த்தம் சென்னையிலும் சென்னையைச் சுற்றி உள்ள சில பகுதிகளிலும் நீங்கள் அனுபவிக்கலாம்! அவை எங்கே இருக்கின்றன, எப்போது கேம்பிங் செய்யலாம் என்பதை எல்லாமே இந்தக் கட்டுரையில் காண்போம்!
மகாபலிபுரம்
சென்னையில் இருந்து 60 கிமீதொலைவில் அமைந்துள்ள மகாபலிபுரம் அதன் பழங்கால கட்டிடக்கலையின் அழகால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள மிகவும் ஒரு பிரபலமான இடமாகும். உங்களின் வசதிக்கேற்ப கடற்கரை ஓரத்தில் நீங்கள் கூடாரங்கள் மற்றும் முகாம்களை தயார் செய்துக் கொள்ளலாம்.
கூடாரத்தில் தங்குவதற்கு முன் மகாபலிபுரத்தின் அழகிய பல்லவக் கால கட்டிடக்கலையை ரசிக்கலாம், வகை வகையான கடல் உணவுகளை ருசிக்கலாம், ஷாப்பிங் செய்து மகிழலாம்.
பின்னர் கடற்கரையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விளையாடி மகிழ்ந்து, கேம்ப்ஃபையர் செய்து குதூகலிக்கலாம்.
நாகலாபுரம்
ட்ரெக்கிங்கிற்கு மிகவும் ஃபேமஸ் ஆன நாகலாபுரம் மலைகள் சாகச ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் ஒரு இடமாகும். நாகலாபுரத்திற்கு வரும் பெரும்பாலான மக்கள் ட்ரெக்கிங் செய்ய வரும்போது, சிறிய அளவில் கூடாரங்கள் அமைத்து இயற்கையை சிறப்பாக ரசிக்கின்றனர்.இந்த அழகிய இடம் சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
பல சிறிய மலைகள், பரபரப்பான நீரோடைகள் மற்றும் அடர்ந்த பசுமையாக இருக்கும் நாகலாபுரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும். நீங்களும் மலைகளுக்கு நடுவிலேயே அல்லது நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே கேம்ப் அமைக்கலாம்.
புலிகாட் ஏரி
வனவிலங்கு மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக திகழும் புலிகாட் ஏரி சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இளஞ்சிவப்பு ஃபிளமிங்கோக்கள், கொக்குகள் போன்ற பல பறவைகள் நிறைந்து இருக்கும் ஏரி கேம்ப் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான ஹாட்ஸ்பாட் ஆகும்.
அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும் ஏரியின் கரையில் நீங்கள் உங்கள் சொந்த கூடாரத்தை அமைக்கலாம் அல்லது ஆற்றின் கரைக்கு அருகில் உள்ள முகாம் தளத்தில் ஒன்றை பதிவு செய்யலாம். விடியும் காலையின் அழகைக் காணும் போது நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள்.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னைக்கு உள்ளேயே அமைந்து இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஒரு நாள் அவுட்டிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.ஏரிக்கரைக்கு அருகிலேயே ஏராளமான கேம்பிங் சைட்ஸ் உள்ளன. அந்த கூடாரங்கள் அனைத்தும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அதில் ஏதேனும் ஒன்றில் தங்கி பறவைகளைக் கண்டு மகிழலாம், சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம், வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடலாம். மேலும் ஏரியில் போட்டிங் செய்யும் வசதியும் உண்டு.
தடா நீர்வீழ்ச்சி
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள உப்பலாமுடுகு என்றழைக்கப்படும் தடா நீர்வீழ்ச்சி ட்ரெக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும். இது சென்னைக்கு அருகில் அமைந்திருப்பதால், பெரும்பாலான உள்ளூர்வாசிகள் வார இறுதி நாட்களில் தடா நீர்வீழ்ச்சிக்குச் சென்று கேம்பிங் செய்தும் மற்றும் ட்ரெக்கிங்கில் ஈடுபட்டும் பொழுதை கழிக்கிறார்கள்.
தடாவில் ஒரு நாள் சாகசத்தை அனுபவிக்க சிறந்த வழி, முதலில் ட்ரெக்கிங் செய்து பின்னர் தடா நீர்வீழ்ச்சியின் சமவெளியில் கூடாரத்தை அமைப்பதாகும். நீங்கள் சொந்தமாக செல்ல விரும்பவில்லை என்றால், நீங்கள் முன்கூட்டியே ஒரு கூடாரத்தை பதிவு செய்யலாம்.
மேலும் மாமண்டூர், பாண்டிச்சேரி, ஆலம்பரை கோட்டை, வேடந்தாங்கல் ஆகியவையும் சென்னைக்கு மிக அருகில் உள்ள கேம்பிங் தலங்கள் ஆகும். ஆகவே இந்த வார இறுதியை சரியாக திட்டமிட்டு களைத்து போயிருக்கும் உங்களு உயிருக்கு ஊட்டம் அளித்திடுங்கள்.