இந்தியா பல ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. காடுகள், மலைகள். கடற்கரைகள், கோட்டைகள், பெரு நகரங்கள் என இந்தியாவிற்கு பல முகங்கள் உண்டு. நாமும் நம் வாழ்வில் பல அதிசயங்களை கண்டு வியந்திருக்கிறோம். அதிலும் இந்தியாவில் எண்ணற்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்று தான் மகாராஷ்டிராவின் நானேகாட்டில் அமைந்துள்ள இந்த தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி - 'ரிவர்ஸ் வாடேர்ஃபால்'! ஆம், இங்கு தண்ணீர் தலை கீழாக பாய்கிறது! நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்களேன்!

மும்பை மற்றும் புனேவுக்கு அருகில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி
மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கையின் பல அற்புதமான அதிசயங்களைக் கண்டு நாம் வியந்துள்ளோம், ஆனால் நானேகாட்டின் தலைகீழ் நீர்வீழ்ச்சி நிச்சயமாக நம்மை முற்றிலும் திகைப்பில் ஆழ்த்தும் அதிசயங்களில் ஒன்றாகும். நானா காட் என்றும் பிரபலமாக கருதப்படும் நானேகாட், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் கடற்கரை மற்றும் தக்காண பீடபூமிக்கு அருகில் உள்ள ஒரு கம்பீரமான மலைத்தொடர் ஆகும். நானேகாட்டின் பிரமிக்க வைக்கும் மலைப்பாதை அமைதியான சூழலில் நம்மை வரவேற்கிறது. புனேவின் ஜூன்னாருக்கு அருகே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, மும்பையில் இருந்து சுமார் மூன்று மணி நேரத்தில் அமைந்துள்ளது.

தலைகீழாக நீர் எழும்ப காரணம் என்ன?
இது ஒரு மர்மமான மலை, அங்கிருந்து ஒரு நீர்வீழ்ச்சி தலைகீழ் திசையில் பாய்கிறது. ஆனால் அது எப்படி நடக்கிறது? என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்குக் காரணம் என்ன, பாய்ந்து வரும் நீரை மேல்நோக்கித் தள்ளும் காற்றின் வலுவான சக்திதான் அதற்கு காரணம். இந்த அதிசயத்தைக் காணவே மக்கள் அதிகளவில் இங்கு கூடுகின்றனர். நானேகாட்டிற்குச் செல்லும் ஒவ்வொரு பார்வையாளர்களும், மேலிருந்து பார்க்கும்போது இந்த இடம் பூமியில் உள்ள ஒரு சொர்க்கம் போன்றது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.

சத்ரபதி சிவாஜியுடன் தொடர்புடைய மலை
இதில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த மலையேற்றப் பாதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் இந்த மலைப்பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது என பழங்கால குகைகளும் பாறையில் வெட்டப்பட்ட பானைகளும் இந்த இடத்தில் சாட்சியாக கடந்த காலத்தின் கதைகளை கூறுகின்றன.

நானேகாட் ட்ரெக்கிங்
ட்ரெக்கிங் பிரியர்களிடையே மிகவும் பிரபலமானது இந்த நானேகாட். ஒவ்வொரு ஆண்டும் இங்கு ட்ரெக்கிங் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உற்சாகத்துடன் ட்ரெக்கிங் செய்து புவியீர்ப்பு விதியை அறியாத அழகிய வெள்ளை அருவியைக் காணலாம். இருப்பினும், மழைக்காலத்தில் நானேகாட் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பது நல்லது என ஒரு பெரும்பான்மை கருத்து நிலவுகிறது, ஏனெனில் இந்த விசித்திரமான நிகழ்வு நீரின் வேகம் அதிகமாக இருக்கும் போது கண்களுக்கு விருந்தாக அமைகிறது என்று நினைக்கிறார்கள், போலும்!

இதர தகவல்கள்
மலைத்தொடருக்கு அருகே பலத்த காற்று வீசுவதால் சூழல் குளிர்ச்சியடையக்கூடும் என்பதால், சில அத்தியாவசிய மருந்துகளையும் சில ஆடைகளையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். மேலும், குடை, சில சிற்றுண்டிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக மழைக்காலமாக இருந்தால், உறுதியான பிடியுடன் கூடிய நல்ல மலையேற்ற காலணிகளை அணிவது கட்டாயமாகும்.

எப்படி நீர்வீழ்ச்சியை அடைவது
கல்யாண் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறி ஜுன்னாரில் இறங்கலாம். அங்கிருந்து சாலை வழியாக நானேகாட்டை எளிதாக அடையலாம். மாற்றாக, மும்பை மற்றும் புனேவிலிருந்து வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம், ஒரு நபருக்கான கட்டணம் 750 ரூபாய் முதல் தொடங்குகிறது.



Click it and Unblock the Notifications





