இந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களையும், இனங்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்டு அழகான சுற்றுலாத் தளங்களையும் பெற்று சிறந்து விளங்கும் தேசம். தேசத்தின் அங்கங்களாக மாநிலங்களும் அவற்றின் நகரங்களும் பொருளாதாரத்தையும் இயற்கை வனப்பையும் கட்டிக் காத்து வருகின்றன. சில இயற்கையிலேயே வண்ணங்களைப் பெற்று விளங்குவதைப் போல நகரங்களும் தங்களுக்கென தனித்தன்மையோடு வண்ணங்களின் பெயர்களைக் கொண்டு சிறப்புறுகின்றன. வெறும் பெயருக்காக மட்டுமல்ல அந்தந்த நகரங்கள் உண்மையிலேயே அந்த நிறத்தில் தோற்றமளிக்கின்றன. வாருங்கள் இந்தியாவின் பத்து வண்ண நகரங்களைப் பார்க்கலாம்.
நீல நகரம்
ஜோத்பூர் நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பாலைவன நகரமாகும். இது இரண்டு விசேஷப்பெயர்களால் பெருமைப்படுத்தப்படுகிறது. ஒன்று ‘சூரிய நகரம்' மற்றொன்று ‘நீல நகரம்' ஆகும். தெளிவான சூரியவெளிச்சத்துடன் கூடிய சீதோஷ்ணநிலையைக் கொண்டிருப்பதால் சூரிய நகரம் என்றும், மேஹ்ரான்கர் கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீல வண்ணம் பூசப்பட்டு காட்சியளிப்பதால் நீல நகரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
உணவு வகைகள்
ஜோத்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் திகட்ட வைக்கும் சுவையுடைய மக்கானியா லஸ்ஸி போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்கலாம். மாவா கச்சோரி, பியாஸ் கி கச்சோரி மற்றும் மிர்ச்சி படா போன்ற பல பண்டங்கள் உணவுப்பிரியர்களை தம் வாசனை மற்றும் ருசியால் கவர்வது நிச்சயம்.
கலைப் பொருள்கள்
ஜோத்பூரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களாக பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பூவேலைப்பாடுகள் கொண்ட செருப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை இங்குள்ள கடைத்தெருக்களில் கிடைக்கின்றன. சோஜாடி கேட், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற வண்ணமயமான கடைத்தெருக்கள் ஜோத்பூரில் உள்ளன. மேலும், சிவப்பு மிளகாய்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமையையும் ஜோத்பூர் பெற்றுள்ளது.
சிவப்பு நகரம்
இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இந்த வரலாற்றுத்தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களைத் தரிசிக்க எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
Rainer Strehl
கண்ணைக் கவரும் இடங்கள்
ஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல் மற்றும் ஜல் மஹால் போன்றவை இந்நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்
உணவு வகைகள்
ஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம். தால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும். உணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.
வெள்ளை நகரம்
ஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இதன்காரணமாகவே வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை
ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம்.
மற்ற பொழுது போக்கு அம்சங்கள்
உதய்பூரில் ஜக் மந்திர், சுகாடியா சர்க்கிள், நேரு கார்டன், ஏக்லிங்க்ஜி கோயில், ராஜீவ் காந்தி பூங்கா, சாஸ்-பாஹு கோயில் மற்றும் ஷீநாத்ஜி கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஆரஞ்சு நகரம்
ஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய நகரமாக இது விளங்குகிறது.புலிகளின் தலை நகரம் என்ற இன்னொரு சிறப்பு பெயரையும் இது பெற்றுள்ளது.
உணவும் கலைப் பொருட்களும்
நாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன. நாக்பூர் நகரம் வர்ஹதி உணவு முறைக்கு பெயர் பெற்றது. இந்த உணவில் சற்றே காரம் அதிகம். வெளி நாட்டவர்க்கு ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு.
அழகு
நாக்பூர் நகரமானது பல ஏரிகளை கொண்டுள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையும் இயற்கையாகவே உருவானவையும் இதில் அடங்கும். இவற்றுள் அம்பாஜாரி ஏரியானது சிற்றுலா செல்வதற்கும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கும் பெயர் பெற்ற ஒன்றாகும். இங்குள்ள பாதிரியார் மலையில் பாலாஜி மந்திர் குறிப்பிட த்தக்க பெரிய கோயிலாகும். இந்த மலையிலிருந்து நாக்பூர் நகரத்தின் முழு அழகைக் கண்டு ரசிக்கலாம்
தங்க நகரம்
தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும் அதே சமயம் ராஜரீக அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற இந்த சுற்றுலாத்தலம் புவியியல் ரீதியாக பிரசித்தி பெற்ற தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
பாலைவனத் திருவிழா
இந்த தங்க நகரம் ராஜஸ்தானிய நாட்டார்கலை இசை வடிவத்துக்கும், நடன வடிவங்களுக்கும் சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பாலைவனத் திருவிழாக் காலத்தின் போது சாம் மணற்குன்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினரால் ‘கல்பெலியா' எனப்படும் சிருங்கார நடனம் நிகழ்த்தப்படுகிறது.
இந்த பாலைவனத் திருவிழா பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
உணவு வகைகள்
தங்க நகரத்தில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க வரும் பயணிகள் ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்து மகிழலாம். முர்க்-இ-சப்ஸ் எனப்படும் எச்சில் ஊற வைக்கும் உணவு வகை இங்கு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும்.. பாலைவன மொச்சை மற்றும் வால்மிளகு இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ‘கேர் ஷாங்க்ரி' எனும் பதார்த்தமும் ஜய்சல்மேரில் விசேஷமாக கிடைக்கிறது. உருளைக்கிழங்கை புதினா துவையலுடன் சேர்த்து குழம்பில் காய்ச்சி தயாரிக்கப்படும் ‘பனான் ஆலு' எனப்படும் உணவு வகையையும், மாவு உருண்டைகளை பாலாடையில் போட்டு சமைத்த ‘காடி பகோரா' வையும் ஆர்வமுள்ள பயணிகள் ருசித்துப் பார்க்கலாம்.