ஜோத்பூர் நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பாலைவன நகரமாகும். இது இரண்டு விசேஷப்பெயர்களால் பெருமைப்படுத்தப்படுகிறது. ஒன்று ‘சூரிய நகரம்’ மற்றொன்று ‘நீல நகரம்’ ஆகும். தெளிவான சூரியவெளிச்சத்துடன் கூடிய சீதோஷ்ணநிலையைக் கொண்டிருப்பதால் சூரிய நகரம் என்றும், மேஹ்ரான்கர் கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீல வண்ணம் பூசப்பட்டு காட்சியளிப்பதால் நீல நகரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.
மேலும், இது தார் பாலைவனத்தில் எல்லையில் அமைந்திருப்பதால் ‘தார் பாலைவன வாசல்’ என்றும் அறியப்படுகிறது. ரத்தோர் வம்சத்தின் ராவ் ஜோதா என்பவரால் இந்த நகரம் 1459ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
முற்காலத்தில் மார்வார் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று அதன் ஸ்தாபகரான ராஜபுத்திர தளபதி ராவ் ஜோதாவின் நினைவாக ஜோத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
பாரம்பரிய உணவின் சுவை
ஜோத்பூருக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் திகட்ட வைக்கும் சுவையுடைய மக்கானியா லஸ்ஸி போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்கலாம். இது தயிர் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களில் தயாரிக்கப்படுவதாகும்.
மேலும், மாவா கச்சோரி, பியாஸ் கி கச்சோரி மற்றும் மிர்ச்சி படா போன்ற பல பண்டங்கள் உணவுப்பிரியர்களை தம் வாசனை மற்றும் ருசியால் கவர்வது நிச்சயம். பாரம்பரிய உணவின் ருசியைத் தவிர ஜோத்பூரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களாக பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பூவேலைப்பாடுகள் கொண்ட செருப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை இங்குள்ள கடைத்தெருக்களில் கிடைக்கின்றன.
சோஜாடி கேட், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற வண்ணமயமான கடைத்தெருக்கள் ஜோத்பூரில் உள்ளன. மேலும், சிவப்பு மிளகாய்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமையையும் ஜோத்பூர் பெற்றுள்ளது.
கேளிக்கைகள், சந்தைகள் மற்றும் திருவிழாக்கள்
ஜோத்பூர் நகரம் வருடந்தோறும் நடத்தப்படும் பலவகை விழாக்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 14ம் தேதி இந்நகரத்திலுள்ள போலோ மைதானத்தில் சர்வதேச ‘காற்றாடித்திருவிழா’ நடத்தப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின்போது காற்றாடி விடும் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து ரசிகர்கள் கூடுகின்றனர். அச்சமயம் வானவெளியெங்கும் வண்ணமயமான காற்றாடிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் பறக்கவிடப்படுகின்றன.
அஷ்வின் பருவம் என்றழைக்கப்படும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களின்போது மார்வார் திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாள் திருவிழாவானது ராஜஸ்தான் மாநில பழங்குடி இசை மற்றும் நடனம் போன்றவற்றை கண்டு ரசிக்கும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஜோத்பூரின் நாகவுர் சந்தை ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பெரிய கால்நடைச் சந்தைத்திருவிழாவாக புகழ் பெற்றுள்ளது.
இந்த பிரசித்தமான கால்நடைச்சந்தை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. சுமார் 70,000 காளைகள், ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் இந்த சந்தையில் வியாபாரம் செய்யப்படுகின்றன. சந்தைக்கென்றே இந்த கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டிருப்பது மற்றொரு விசேஷமாகும்.
ஒட்டகப் பந்தயம், காளைப்பந்தயம், வித்தைக்காட்சிகள், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கதைசொல்லும் நிகழ்ச்சிகள் போன்றவை இந்த சந்தையில் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகின்றன.
கட்டிடக்கலையும் பாரம்பரிய மணமும் கலந்த கலவை
பாரம்பரிய உணவு வகைகள், மார்க்கெட் மற்றும் திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக வருவது ஜோத்பூர் நகரத்தின் அடையாள அம்சங்களான பழைய மன்னராட்சிக் கோட்டைகள், அழகிய அரண்மனைகள், தோட்டப்பூங்காக்கள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய விடுதிகளாகும்.
இந்த முக்கியமான சுற்றுலா அம்சங்களில் உமைத் பவன் அரண்மனை குறிப்பிடத்தக்க வரலாற்றுச்சின்னமாகும். இந்த அழகிய அரண்மனை இந்தோ-காலனிய கலை நுணுக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது.
அழகாக வெட்டப்பட்ட மஞ்சள்கற்கள் இக்கட்டிடத்திற்கு அழகைச் சேர்க்கின்றன. உமைத் பவன் அரண்மனையின் ஒரு அங்கமாக அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் மாதிரி ஏரோப்பிளேன்கள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள்,கரண்டி வகைகள், பழமையான கடிகாரங்கள், பாப் கைக்கடிகாரங்கள், அபூர்வ கற்கள், புகைப்படங்கள் மற்றும் வேட்டைச்சின்னங்கள் போன்றவற்றை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
மெஹ்ரான்கர் கோட்டை ஜோத்பூரிலுள்ள மிகப் பிரசித்தமான கோட்டையாகும். இந்த கோட்டை வளாகத்தில் மோதி மஹால், ப்பூல் மஹால், ஷீஷா மஹால் மற்றும் ஜான்கி மஹால் போன்ற அரண்மனைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏழு வாயில்களைக் கொண்டுள்ளது. பலவிதமான அழகிய பல்லக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகமும் இந்த கோட்டை வளாகத்தில் உள்ளது.
பலவிதமான சுவாரசிய அம்சங்கள்
ஜோத்பூருக்கு விடுமுறைச்சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இங்கு எழில் நிறைந்த மந்தோர் தோட்டப் பூங்காவை ரசிக்கலாம். இதில் ஜோத்பூர் அரசர்களின் சமாதிச்சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை வழக்கமான சாத்ரிகள் (கல்லறை விதானம்) போல் அல்லாமல் வித்தியாசமாக தோற்றமளிக்கின்றன. இது தவிர முப்பது கோடி கடவுள் சன்னதி எனும் கோயிலும், அற்புதமாய் வடிவமைக்கப்பட்டுள்ள மாவிரர் மண்டமும் இந்த பூங்காவின் இதர விசேஷங்களாகும்.
ஜோத்புரிலுள்ள புகழ் பெற்ற கோயில்களான மஹாமந்திர் கோயில், ராசிக் பிஹாரிகோயி, கணேஷ் கோயில், பாபா ராம்தேவ் கோயில், சந்தோஷி மாதா கோயில், சாமுண்ட மாதா கோயில் மற்றும் ஆச்சாள் நாத் ஷிவாலயா போன்றவற்றை ஆன்மீகத்தில் நாட்டமுள்ள பயணிகள் மட்டுமல்லாது அனைத்து பயணிகளும் தரிசித்து மகிழ்வது அவசியம்.
இங்குள்ள பல்சாமந்த் எனும் நீர்த்தேக்கம் சுற்றிலும் அழகிய தோட்டப்பூங்காவுடன் எழிலுடன் காட்சியளிக்கிறது. இந்த ஏரியை நோக்கியவாறு அமைந்துள்ள பல்சாமந்த் ஏரி அரண்மனைக்கும் பயணிகள் விஜயம் செய்து ரசிக்கலாம்.
ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களுடன் மிளிரும் இந்த அரண்மனை தற்சமயம் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.மற்றொரு செயற்கை நீர்த்தேக்கமான கைலானா ஏரி அதன் இயற்கை அழகிற்காக பிரசித்தி பெற்றுள்ளது. இதில் பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபட்டு மகிழலாம்.
சிற்றுலா சென்று ஓய்வெடுப்பதற்கும் இந்த ஏரிக்கரை பொருத்தமான ஸ்தலமாக உள்ளது. குடா பிஷ்னோய் எனும் கிராமமும் தன் சிறப்பம்சங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகளை ஜோத்பூருக்கு ஈர்க்கின்றது.
பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் மக்கள் கலைமான் மற்றும் சிங்கார மான் (சிறுமான்)போன்றவற்றை வழிபடுகின்றனர். மேலும், இப்பகுதியில் காட்டுயிர் ரசிகர்கள் மயில், கறுப்பு மான், கலைமான், கொக்குகள் மற்றும் புலம்பெயர் பறவைகள் போன்றவற்றைக்காணலாம்.
ஜோத்பூருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள மாச்சியா சஃபாரி பூங்காவில் மானிட்டர் உடும்புகள், பாலைவன நரி, நீல எருது, கீரி, முயல், காட்டுப்பூனை மற்றும் குரங்குகள் ஆகியவற்றையும் காணலாம்.
இந்த சஃபாரி பூங்கா ஜோத்பூர்-ஜய்சல்மேர் சாலையில் ஜோத்பூரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது. ராஜா அபய்சிங் அவர்களால் கட்டப்பட்ட சோக்கேலாவ் எனும் அழகிய தோட்டப்பூங்காவிற்கும் பயணிகள் செய்து ரசிக்கலாம்.
இந்த பூங்காத்தோட்டம் மூன்று அழகிய அடுக்குகளால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க விசேஷமாகும். இந்த ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு விதமான பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவைதவிர ஜஸ்வந்த் தடா எனும் மாளிகையும் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ள ஒன்றாகும். இந்த மாளிகை ‘மார்வாரின் தாஜ் மஹால்’ என்றே சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
வெண்பளிங்கினால் ஆன மிக அற்புதமான கலைச்சிற்ப வடிவமைப்பை இது கொண்டுள்ளது. மேலும், ஜெனனா மஹால், லோஹா மஹால், அரசு மியூசியம், காண்டா கர், ஜஸ்வந்த் சாஹர் அணை, ராய் கா பாக் அரண்மனை மற்றும் உமேட் தோட்டப்பூங்கா ஆகியவையும் ஜோத்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
ஜோத்பூருக்கான பயண வசதிகள்
ஜோத்பூர் நகரம் பிரத்யேக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளதால் முக்கிய இந்திய நகரங்களுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் அருகிலுள்ள சர்வதேச விமானத்தளமாகும். மெலும், சுற்றுலாப்பயணிகள் ஜெய்பூர், டெல்லி, ஜெய்சல்மேர், பிக்கானேர், ஆக்ரா, அஹமதாபாத், அஜ்மேர் மற்றும் உதய்பூர் நகரங்களிலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்றவாறு பேருந்துச்சேவைகள் உள்ளன.
ஜோத்பூர் பிரதேசம் வெப்பமான மற்றும் வறண்ட பருவநிலையை வருடமுழுதும் கொண்டுள்ளது. கோடை காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் போன்ற முக்கிய பருவங்களே இங்கு முக்கிய பருவங்களாகும். அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை உள்ள காலம் ஜோத்பூருக்கு விஜயம் செய்து சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற காலமாகும்.