அமெரிக்காவின் அரிசோனாவில் அமைந்து இருக்கும் கிராண்ட் கேன்யன் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம், அதன் புகைப்படங்களைப் பார்த்து வியந்து இருக்கிறோம். ஆனால் இந்தியாவிலேயே அப்படி ஒரு அதிசயம் இருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம்.
ஏன் மக்கள் இதை அரிசோனா கிராண்ட் கேன்யனின் ப்ராக்ஸி என்றே கூறுகின்றனர். மக்கள் ஏன் இதை அவ்வாறு கூறுகிறார்கள்? ஏன் இங்கே அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்? எப்படி இங்கே செல்வது? என்பதையெல்லாம் இங்கே பார்ப்போம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஒளிந்து இருக்கும் அதிசயம்
ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் காந்திகோட்டா கிராமத்தின் பென்னார் ஆற்றங்கரையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அது பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் போலவே இருக்கிறது.
காந்திகோட்டா பள்ளத்தாக்கு ஆந்திர பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. காக்கத்தியர்கள், விஜயநகரர்கள் முதல் குதுப் ஷாஹிகள் வரை, ராஜ்யத்தின் சிறந்த அரசர்கள் யாவரும் இந்த பாரிய பள்ளத்தாக்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதை வரலாறு கூறுகின்றன.

கிராண்ட் கேண்யனை போல் இருக்கும் காந்திகோட்டா
எர்ரமலா மலைகளின் இளஞ்சிவப்பு கிரானைட் பாறைகளுக்கு நடுவே பாயும் பென்னார் நதி காலப்போக்கில் இந்த அழகிய பள்ளத்தாக்கை உருவாக்கின என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியான நீரின் ஓட்டத்தினால் இந்த கண்கவர் தளம் உருவாகியது. இப்போது நாம் பார்ப்பது ஒரு அற்புதமான இயற்கை உருவாக்கமே தவற வேறொன்றும் இல்லை.
இந்த குறுகலான பள்ளத்தாக்குகள், அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள் மற்றும் செங்குத்தான பாறை சுவர்கள் அரிசோனாவின் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யனை நினைவூட்டுகின்றன. இப்படி ஒரு அதியசம் இருப்பதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.

காந்திகோட்டாவில் நீங்கள் ஆராய வேண்டியவை
பள்ளத்தாக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் தொலைவில், இந்தியாவின் இரண்டாவது பெரிய குகை அமைப்பான பெலும் குகைகள் அமைந்துள்ளன. குகைக்கு அருகே உள்ள 40 அடி வெள்ளை புத்தர் சிலையைக் கண்டு தியானத்தில் அமராமல் இருக்க முடியாது. பின்னர் காந்திகோட்டா கோட்டை, கோட்டை வளாகத்தில் உள்ள ஒரு களஞ்சியம், இரண்டு கோவில்கள், ஒரு மசூதி, கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் ஒரு சிறை போன்ற கட்டிடம் ஆகியவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம். மேலும், பென்னார் ஆற்றில் சாகச விளையாட்டுகள் சில சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை வழங்குகின்றன. கயாக்கிங், ஜிப் லைனிங் போன்றவற்றில் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம்.

காந்திகோட்டாவுக்குச் செல்ல சிறந்த நேரம்
காந்திகோட்டாவிற்கு நீங்கள் ஆண்டு முழுவதும் செல்லலாம். ஆனால் கோடைக்காலத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இங்கு கோடை காலம் மிகவும் வெப்பமாக இருக்கும், வெப்பநிலை 28-40 °C வரை நிலவும்.
செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இந்த இடத்திற்கு நீங்கள் சிறந்த பயணத்தைத் திட்டமிடலாம், ஏனெனில் இந்த நேரத்தில் வானிலை ஒப்பீட்டளவில் இனிமையானதாக இருக்கும்.

காந்திகோட்டாவை எப்படி அடைவது?
நீங்கள் விமானம், ரயில் மற்றும் சாலை வழிகளில் காந்திகோட்டாவை அடைந்திடலாம். காந்திகோட்டா கோட்டையிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கடப்பா விமான நிலையம் தான் காந்திகோட்டாவிற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். அங்கிருந்து நீங்கள் டாக்சி அல்லது பேருந்து மூலம் காந்திகோட்டாவிற்கு செல்லலாம்.
காந்திகோட்டாவிற்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள் கடப்பா, ஜம்மலமடுகு மற்றும் திருப்பதி ஆகும். சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து நேரடி ரயில்களும் இயக்கப்படுகின்றன.
காந்திகோட்டா பெங்களூரிலிருந்து 280 கிமீ, ஹைதராபாத்தில் இருந்து 384 கிமீ, சென்னையிலிருந்து 360 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் NH 7 மற்றும் NH 16 வழியாக காந்திகோட்டாவை அடையலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் லாங் டிரைவ் போக இது ஒரு சரியான தேர்வாக இருக்கும்.



Click it and Unblock the Notifications





