அனுமன். ஆஞ்சநேயர், ஹனுமான் மாருதி என எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அனுமாரு என்று அழைப்பதுதான் தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் வழக்கம். குரங்கு முகமும், நல்ல குணமும் கொண்டுள்ள அனுமன் பிறந்த இடம் எது தெரியுமா? அனுமன் பிறந்த இடத்தைப் பற்றியும், அனுமன் இன்றளவும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை பற்றியும் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
யார் இந்த அனுமன்?
வானரப் படையில் இடம்பெற்றிருந்த தீவிர ராம பக்தரான அனுமன், குரங்கு முகமும் நல்ல உள்ளமும் கொண்டவர் என பழங்கால புராணக்கதைகளில் எழுதப்பட்டிருக்கிறது. இது கற்பனை கதாபாத்திரம் என்போர் பலர் உள்ளனர். எனினும் அனுமன் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே பூமியில் பிறந்து வாழ்ந்தவர் என்று நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆச்சர்யத்தை தரலாம்.
உயிருடன் இருக்கிறாரா அனுமன்?
ராமாயணம் பற்றி படித்தவர்கள் சஞ்சீவினி மூலிகை பற்றி அறியாமலிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் இந்த ஆயுள் காக்கும் அதிசய மூலிகை பற்றி உங்களுக்கு தெரிய வந்திருக்கும். அதை எடுக்க கிளம்பியவர்தான் இந்த அனுமன். புராணங்களின் படி, சஞ்சீவினி மூலிகையை உண்டு, பல ஆயிரம் காலங்கள் அனுமன் வாழ்வதாக கூறப்படுகிறது. அப்படியானால் அனுமன் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்வியும் பிறக்கிறது. அப்படி உயிரோடு இருப்பதென்றால் எங்கே இருக்கிறார். வாருங்கள் அனுமன் பிறந்த ஊரான ஆஞ்சனேரிக்கு செல்வோம்.
சஞ்சீவினி மூலிகை தேட பயணம்
சில வருடங்களுக்கு முன் உத்தரகண்ட் அரசு, 25 கோடி அளவுக்கு செலவு செய்து ஒரு திட்டத்தை தீட்டியது. அதாவது, சஞ்சிவினி மூலிகையை தேட ஆட்களை அனுப்பும் திட்டம் அது. சீன எல்லையை ஒட்டிய துரோணகிரி எனும் இடத்தில் இந்த தேடுதல் வேட்டை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனுமன் பிறந்ததாக கருதப்படும் ஆஞ்சநேரி எனும் இடத்தில் இத்தகைய அரிய மூலிகைகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. அனுமன் உயிரோடு இருப்பதும் இந்த இடத்தில்தான் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
ஆஞ்சநேரி
நாசிக் அருகே இருக்கும் ஆஞ்சநேரி எனும் இடம்தான் அனுமன் பிறந்த இடமாகும். இங்குதான் அனுமன் தனது பால்ய காலத்தை கழித்ததாக இன்றளவும் இங்குள்ள மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எங்குள்ளது
நாசிக்கிலிருந்து திரும்பகேஸ்வர் செல்லும் வழியில் இருக்கும் மலைத் தொடர்களில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேரி. கடல் மட்டத்திலிருந்து 1280 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.
அனுமனின் அன்னை
அனுமனின் பிறந்த ஊரான ஆஞ்சநேரி தற்போதுதான் ஆஞ்சநேரி என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக இது ஆஞ்சனி என்றே அழைக்கப்பட்டதாம். இது அனுமனின் தாயின் பெயரிலிருந்து பெறப்பட்டதாக நம்புகின்றனர் இப்பகுதி மக்கள்.
நாசிக்கிலிருந்து தொலைவு
நாசிக் நகரத்திலிருந்து மிகக் குறைந்த தொலைவிலேயே இந்த ஆஞ்சநேரி அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட திரும்புகேஸ்வர் சாலையில் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு சமண குகைகளும் கண்டறியப்பட்டுள்ளது இந்த பயணத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது.
ஆஞ்சநேரி செல்லும் வழியில்
ஆஞ்சநேரி செல்லும் வழி, முழுவதும் பச்சை பசேலென்ற வயல்வெளிகளும் மலைகளும் காடுகளும் நிரம்பி காணப்படும். இது பயணம் செல்லும் நம்மை குதூகலப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆஞ்சநேய பர்வதம் என்றும் அழைக்கப்படும் ஆஞ்சநேரி ஒரு மலையேற்றப் பிரதேசமும் கூட. நீங்கள் மலையேற தயாராக இருக்கிறீர்கள் என்றால் ஆஞ்சநேயரின் பிறந்த இடமாக கருதப்படும் ஆஞ்சநேரிக்கு செல்லும் மலையேற்றத்தைத் தொடங்குவோம்.
மாதா ஆஞ்சநேரி பிதா கேசரி
மாதா ஆஞ்சநேரி வேறு யாரும் இல்லை அனுமனின் தாய்தான். அவருக்கு ஆஞ்சனி என்று பெயரும் இருப்பதாக நம்பப்படுகிறது. சிவனை நோக்கி தவம் செய்து ஆஞ்சநேயரைப் பெற்றார் அவர்.
ஆஞ்சநேயரின் தந்தையான கேசரியும், ராமாயணப் போரில் ராவணனுக்கு எதிராக, ராமனுக்கு ஆதரவான மனநிலையிலே இருந்ததாக புராணம் கூறுகிறது. சிவனின் வரத்தால் குழந்தை பெற்றதால், ஆஞ்சநேயரும் சிவனின் குழந்தை அல்லது சிவனின் மறுஉருவம் என்று நம்பப்படுகிறது.
திரிம்பகேஸ்வர் அருகிலிருக்கும் ஆஞ்சநேரி மலைக்கு உலா
திரிம்பகேஸ்வருக்கு செல்லும் வழியில் 4 கிமீக்கு முன்னதாகவே இந்த பயணம் ஆரம்பித்துவிடுகிறது. குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி இறங்கிவிட்டு, நம் மலையேற்றம் துவங்குகிறது. நாசிக் திரிம்பகேஸ்வர் சாலையில் வலப்புறம் திரும்பி சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும்.
மலையை கண்டோம்... காதல் கொண்டோம்
45 நிமிட நடை பயணத்துக்கு பிறகு கிட்டத்தட்ட மலையின் அடிவாரத்தை நெருங்கிவிடுவோம். நாங்கள் அங்கு சென்றபோது அங்கிருந்த ஒரு உணவகத்தில் எங்கள் உடைமைகளை வைத்துவிட்டு புறப்பட்டோம். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமம்
சிறிது தூரத்தில் கிட்டத்தட்ட 1 கிமீ தூரம் இருக்கலாம். அங்கே ஒரு அழகிய கிராமம் இருக்கிறது. யாருக்கேனும் நடை பயணத்தில் மலையேற்றத்தில் உடன்பாடில்லை அல்லது நடக்க முடியவில்லை என தெரிந்தால், இந்த கிராமத்துக்கு சென்று இங்குள்ள ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மேலும் ஒரு 4 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும். அங்கு ஒரு படிக்கட்டுகளுடன் கூடிய மலையை காணமுடியும். மலையேற்றத்தை தொடங்குவோம்.
வாருங்கள் மலையேறலாம்
சில சமயங்களில் நாம் வெகு தூரம் பயணித்திருப்பதாக நினைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நம் பயணத்தில் பத்து சதவிகிதம் கூட அது இராது. அட இந்த பயணமும் அப்படித்தான். இப்போதுதான் நாம் மலையேற்ற பயணத்தை தொடங்குகிறோம். ஆரம்பத்தில் சில படிக்கட்டுகள் இருந்தாலும், போக போக மலைப் பாதையில் நடந்து செல்வதுதான் நம் பயணத்தில் சோதனை காலம்.
ஆஞ்சநேரி மலைக்கு செல்ல
இப்போதுவரை நாம் நடந்து கொண்டிருப்பது ஆஞ்சநேரி மலை இல்லை. இது முதல் பயணத்தில் நாங்கள் அனுபவப்பட்டது. இங்கிருந்து 15 நிமிட நடை பயணத்துக்கு பிறகுதான் நாம் ஆஞ்சநேரி மலையை அடைவோம். இப்போதே நம் கால்களை வலிக்கத் தொடங்கியிருக்கும்.
இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பாதை
இந்த இரு மலைகளுக்கும் இடையில் ஒரு பாதை செல்லும் அதில் ஏறி, நடந்து ஒருவழியாக ஆஞ்சநேரியை அடையலாம்.
இங்கு ஆஞ்சநேரி மாதா கோவில் இருக்கிறது. இதன் சற்று தொலைவில் ஒரு ஏரியும் காணப்படுகிறது. இது மிகவும் அழகான தோற்றத்துடன் பிரதிபலிக்கிறது.இறுதியாக ஆஞ்சநேரி மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்கலாம்.
இங்கு ஒரு குகை உள்ளது அது மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கிறது. இந்த குகையில்தான் ஆஞ்சநேயர் இன்றும் வசிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த குகைக்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. ஆனால் இதன் அருகிலேயே ஒரு வித சத்தம் கேட்கிறது. அது மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது.