கோடை வெயில் பொழந்து கட்டி வந்த நிலையில், ஓரிரு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிறது. நாங்க மட்டும் பாவம்? என கேட்ட சென்னை மக்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டினார் வருண பகவான்.
ஆஹா...! 'கிளைமேட்' நல்லா இருக்கே என நினைத்து கொண்டு, உடனே காரை எடுத்துகிட்டு ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போலாம் என, பிளான் போட்டு இருந்தால், அதில் கொஞ்சம் மண் அள்ளி போட்டுருங்க பாஸ்...! ஏன் ஐயா அபசகுணமாக பேசுற என நீங்க திட்டுவது காதில் விழுகிறது.
ஹலோ உங்க பாதுகாப்புக்கு தான் சொல்லுகிறோம். நீலகிரி மாவட்டத்தில் மே 18 தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை, மிக கனமழை பெய்வதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என, அந்த மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.

வெயிலின் உக்கிரத்தை சமாளிக்க முடியாதவர்கள், மலைப் பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்லத் துவங்கினர். பெரும்பாலான கோடை வாசஸ்தலங்களில் மக்களின் தலையாக நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பமும் பெருமளவில் குறைந்து இருப்பதால், வீட்டில் இருந்த பொதுமக்களும் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், கன மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக. நீலகிரி மாவட்டத்தில் 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில், மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக, ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. சாலையோரம் ஆபத்தான முறையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வருவாய்த் துறையினர், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வர வேண்டாம் என, சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்பட வேண்டும் எனவும், கனமழை காலங்களில் வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த எச்சரிக்கை நீலகிரி வருபவர்களுக்கு மட்டுமில்லை.. அங்கு ஏற்கனவே கூடியிருக்கும் நபர்களுக்கும் தான் பொருந்தும். கன மழை நேரத்தில் தேவையில்லாமல் வெளியே ஊர் சுற்றி ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல், எச்சரிக்கையை திரும்ப பெறும் வரை ஓரிடத்தில் இருந்து மழை, மலை அழகை ரசிக்கும்படி உங்களை நாங்களும் கேட்டு கொள்கிறோம்.



Click it and Unblock the Notifications





