உப்புக் காற்றுடன், வெதுவெதுப்பான மணலில், நீல நிற கடற்கரைகள் ஓரத்தில் சூரிய குளியல் செய்வது வெளிநாட்டினரிடையே மிகவும் பேமஸ். இது இப்போது இந்தியாவிலும் மிகவும் வளர்ந்து வரும் ஒரு பழக்கமாகும். ஆனால் வெளிநாட்டு கடற்கரைகள் போன்று அழகான நீல நிற கடற்கரைகள் இங்கு இருக்கிறதா? ஆம் இருக்கிறதே, இந்தியா முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் அழகான கடற்கரைகள் இருந்தாலும் இந்த பதிவில் நாம் பார்க்க போவது தமிழ்நாடு, புதுவையில் இருக்கின்ற அழகான அமைதியான நீல நிற கடற்கரைகளைப் பற்றி தான்! ஆம், நமக்கு பக்கத்திலேயே இருப்பதால் இவற்றின் அருமை நமக்கு தெரியவில்லை போல! இப்போது தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்!

தனுஷ்கோடி கடற்கரை, ராமேஸ்வரம்
இந்த பட்டியலில் முதல் இடம் வகிப்பது ராமேஸ்வரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் கடைகோடி முனையான தனுஷ்கோடி கடற்கரை ஆகும். ஒரு புறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் இந்தியப் பெருங்கடலும் ஒன்று சேரும் தனுஷ்கோடியில் கடல் நீர் வெளிநாடுகளில் இருப்பது போல மிகவும் தெளிவாக தெரிகிறது. இங்கு வந்து சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயம் பார்ப்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். குளிர்காலத்தில், இந்த இடம் ஃபிளமிங்கோ போன்ற பல புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக மாறுகிறதாம்.

மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி
இது மணப்பாடு கடற்கரை தான் என்று தெரியாமலே நாம் பல திரைப்படங்களில் இந்த கடற்கரையை கண்டு இருக்கிறோம். இந்த கடற்கரையின் வெள்ளை மணலும், நீல நிற நீரும் நாம் ஏதோ வெளி நாட்டில் இருப்பது போன்ற உணர்வை நிச்சயமா நமக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு இது ஒரு பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கோவளம் கடற்கரை, சென்னை
மிகவும் தூய்மையான, பசுமையான மற்றும் அமைதியான கடற்கரைகளுக்கு கொடுக்கப்படும் ப்ளூ சர்டிபிகேஷன் பெற்ற இந்திய கடற்கரைகளில் சென்னையின் கோவளம் கடற்கரையும் ஒன்று. சென்னையை சுற்றிப் பல கடற்கரைகள் இருந்தாலும் கோவளம் கடற்கரை சற்று மாறுதலாக நீல நிறமாக அழகாக காட்சியளிக்கிறது. இங்கே சூரிய உதயம் பார்க்க தினந்தோறும் மக்கள் கூடுகின்றனர்.

போதி பீச், விழுப்புரம்
இந்த கடற்கரை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்து இருந்தாலும் இது புதுவையில் இருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. செரினிட்டி பீச் என்றழைப்படும் இந்த கடற்கரை வெள்ளை மணற்பரப்பு மற்றும் நீல நிற நீருடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்கே சஃர்பிங் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்வது மிகவும் விசேஷமாகும். நீங்கள் இங்கு வந்தாலும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். நிச்சயம் வருத்தப்பட மாட்டீர்கள்!

ஈடன் கடற்கரை, புதுச்சேரி
புதுச்சேரியில் ப்ளூ சர்டிபிகேஷன் பெற்ற கடற்கரையான ஈடன் கடற்கரை மிகவும் அழகாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு கடற்கரையாகும். வெள்ளை மணற்பரப்பின் மீது கட்டப்பட்டுள்ள ஓலை குடில்களில் அமர்ந்து நீங்கள் கடலை ரசித்து மகிழலாம். மேலும் இங்கு பாராசைலிங், ஸ்கூபா டைவிங் மற்றும் சர்ஃபிங் போன்ற சாகச நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம்.

நோனாங்குப்பம் பீச், புதுச்சேரி
பாரடைஸ் பீச், சுண்ணாம்பார் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை சுண்ணாம்பார் போட் ஹவுஸ் உடன் சேர்ந்து இருக்கும் கடற்கரையாகும். இந்த அழகிய கடற்கரையை அடைய நீங்கள் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை படகில் பயணிக்க வேண்டும். இந்த கடற்கரையோரத்தில் சிறு சிறு தென்னை மரங்கள், குடில்கள், உணவகங்கள் காணப்படுகின்றன. நீங்கள் புதுச்சேரி வருகை தரும் போது நிச்சயம் இந்த கடற்கரைக்கு வந்து விட்டு செல்லுங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

கோடியக்கரை, வேதாரண்யம்
தமிழ்நாட்டில் உள்ள நீல நிற கடற்கரைகளில் வேதாரண்யத்தில் அமைந்து இருக்கும் கோடியக்கரையும் ஒன்று. தனுஷ்கோடி போன்று இதுவும் கடைகோடியில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். மற்ற கடற்கரைகளை ஒப்பிடும் போது இது அவ்வளவு நீல நிறமாக இருப்பது இல்லை. ஆனால், அங்கே நிலவும் அமைதியும், புலம் பெயர்ந்த பறவைகளின் கூட்டமும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியும் இலங்கையைக் காண மக்கள் இங்கே வருகை தருகிறார்கள்.

வீராம்பட்டினம் பீச், புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள அழகான கடற்கரைகளில் இந்த வீராம்பட்டினம் கடற்கரையும் ஒன்றாகும். இந்த இடத்தில் பல திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. வெள்ளை மணற்பரப்பு மற்றும் நீல நிற தெளிவான நீர் ஒரு ரம்மியமான உணர்வை தருகிறது. பார்வையிடுவதற்கு உகந்தது.



Click it and Unblock the Notifications





