'நினைத்தேன் வந்தாய்' படத்தில் படகில் சென்று தேவயாணியை பெண் பார்ப்பார்களே நியாபகம் இருக்கிறதா? அந்த அழகான கிராமம் ஒரு குட்டித்தீவு என்றே சொல்லலாம். சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பூலாம்பட்டி அதன் இயற்கை அழகு, பச்சை பசேல் புல்வெளிகள், படகு சவாரிக்கு மிகவும் பேமஸ் ஆன இடம். இந்த இடம் அதன் மிகுதியான வசீகரம் மற்றும் பசுமைக்காக தமிழ்நாட்டின் 'குட்டி கேரளா' என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு சென்றால் ரூ.15 க்கு அசத்தலான போட்டிங், ரூ.50 க்கு சுடச்சுட மீன் வறுவலுடன் கூடிய மீன் குழம்பு சாப்பாடு, கரையில் குளிப்பது என சூப்பராக என்ஜாய் பண்ணலாம்! இந்த இடத்திற்கு நாம் எப்போது, எப்படி செல்லலாம் என்று பார்க்கலாமா!

சேலத்தில் அமைந்துள்ள குட்டி கேரளா
அழகான நீர்நிலைகள், சுற்றிலும் பசுமை, படகில் பயணம் என பூலாம்பட்டி கேரளாவை பிரதிபலிப்பதால் இது குட்டி கேரளா என்றழைக்கப்படுகிறது. பூலாம்பட்டியை அடைய இன்னமும் படகுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பூலாம்பட்டியில் இருந்து அருகில் இருக்கும் கிராமமான நெறிஞ்சிபேட்டைக்கு படகில் தான் மக்கள் சென்று வருகின்றனர். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தை பிரிக்கும் ஆறு பூலாம்பட்டி மற்றும் நெரிஞ்சிப்பேட்டை வழியாக செல்கிறது. இந்த நதியில் பசுமையான மற்றும் இயற்கைக்காட்சிகள் நிறைந்த படகு சவாரியை ரசிக்க சரியான தருணத்தை அளிக்கிறது.

மனதை வருடும் காட்சிகள்
நீர் நிரம்பிய வயலைப் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், கால்நடைகளை பராமரிப்பது, ஆண்கள் விவசாய வயலில் ஈடுபடுவது ஆகியவை பூலாம்பட்டி கிராம வாழ்க்கையாகும். அந்த கிராம மக்கள் இயற்கையுடன் ஈடுபடுவது பார்க்கும் போது நம்மால் இப்படி ஆழ முடியவில்லையே என்ற ஏக்கம் வராமல் இருக்காது.

ரூ.15 க்கு சூப்பரான படகு சவாரி
பூலாம்பட்டியை அடைந்த உடனே முதலில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் பருத்தி வயலில் உலா வாருங்கள். அங்கிருக்கும் பசுமையை பார்த்து ரசித்து விட்டு படகு சவாரி செய்யுங்கள். ரூ.15 கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு படகு சவாரி செய்யுங்கள். அழகான நீர்நிலைகளில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே படகு சவாரி செய்யும் போது, நேரம் கழிவதே நமக்கு தெரியாது. குளிக்க வேண்டும் நீச்சலடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கரையிலேயே குளிக்கவும். சில இடங்களில் ஆழம் அதிகமாக இருக்கிறது, கவனமாக இருப்பது அவசியம்.

மீன் வறுவல், மீன் குழம்பு சாப்பாட்டை ருசிக்க மறக்காதீர்கள்
குட்டி கேரளா, போட்டிங், இயற்கை காட்சிகளை ரசிப்பது போலவே பூலாம்பட்டியில் வகை வகையான மீன் வறுவல், ருசியான மீன் குழம்பு சாப்பாடும் அதே அளவு பேமஸ். ரூ.30 இல் இருந்தே சுவையான மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கிறது. ரூ.50 அல்லது ரூ.100 கொடுத்தால் பெரிய வறுத்த மீன் வைத்து மீன் குழம்பு சாப்பாடு வயிறார சாப்பிடலாம்.

பல திரைப்படங்களில் நாம் பார்த்து ரசித்த பூலாம்பட்டி
பூலாம்பட்டியின் பெயர் நமக்கு புதிதாக இருந்தாலும், நாம் பல திரைப்படங்களில் பூலாம்பட்டியை பார்த்திருக்கிறோம். ஆம்! நினைத்தேன் வந்தாய், பௌனு பௌத்தன், முத்துகை, சாமுண்டி, ராசுக்குட்டி, சாமுராய், சிவசக்தி போன்ற எண்ணற்ற படங்கள் இந்த பூலாம்பட்டியில் படமாக்கப்பட்டது. எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு வள குருநாக்தன் கோயில் பூலாம்பட்டிக்கு மேற்கே 3 கிமீ தொலைவில் உள்ளது. எடப்பாடியில் உள்ள புனித செல்வ நாயகி அன்னை தேவாலயம், முருகன் கோவில் ஆகியவற்றையும் நீங்கள் இங்கே காணலாம்.
எப்படி செல்வது?
அழகான இந்த பூலாம்பட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், மேட்டூர் அணையில் இருந்து 17 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் சேலத்தில் இருந்து பேருந்து மார்க்கமாக இப்பகுதியை அடையலாம். சேலம் மற்றும் ஈரோட்டில் இருந்து பூலாம்பட்டியை ஒரு மணி நேரத்திலும், கோயம்புத்தூரில் இருந்து இரண்டு மணி நேரத்திலும் அடையலாம். நீங்கள் இந்த மாவட்டங்களில் எங்கு இருந்தாலும் கட்டாயம் பூலாம்பட்டிக்கு ஒரு விசிட் அடிக்க மறந்து விடாதீர்கள்! ரூ. 500 எடுத்துக்கொண்டு 4 பேர் சென்றால் செமையா என்ஜாய் பண்ணிட்டு வரலாம்!



Click it and Unblock the Notifications





