அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான இது ஹிமாலய மலையின் மடியில் அருமையான இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. அழகு கொஞ்சும் மலை வாசஸ்தலங்கள் ஏராளமாக உள்ள அருணாச்சல பிரதேசத்தில் குறைவான செலவில், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் எவை என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அலாங்:
புகைப்படம்: Catherine Marciniak
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மேற்கு சிசங் மாவட்டத்தில் மலைகள் சூழ அமைந்திருக்கும் ஒரு சிறு நகரம் தான் அலாங். யோம்கோ மற்றும் சிபு ஆகிய ஆறுகள் இந்த நகரத்திற்கு அழகு சேர்க்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 619 மீ உயரத்தில் அமைந்திருக்கும் அலாங்கின் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். நீல நிறமாக பாய்ந்தோடும் ஆறுகள், அமைதி நிறைந்த பள்ளத்தாக்கு, கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகளை அள்ளித்தரும் மலைகள் என அற்புதமான ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும் இது ட்ரெக்கிங், சாகசப்படகு சவாரி செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அலாங் வருகையில் இங்கு கிடைக்கும் புகழ்பெற்ற மூங்கிலால் செய்யப்பட்ட அழகிய கைவினப்போருட்களை நிச்சயம் தவறாமல் வாங்கிசெல்லுங்கள்.
போம்டிலா:
புகைப்படம்: Gourab Das
கடல் மட்டத்தில் இருந்து 2,438 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான போம்டிலாவில் அடர்த்தியான காடுகள் நிறைந்து இருக்கின்றன. இங்கு நிலவும் சூழல், கதைகளில் கூறப்படுவது போன்ற மாய உலகத்தினுள் நாம் வந்துவிட்ட உணர்வை ஏற்ப்படுத்தும். வன உயிரினங்களை புகைப்படம் எடுக்க விரும்புபவர்கள் மற்றும் இயற்கை அழகினை ரசிக்க விரும்புவோர் அவசியம் வர வேண்டிய இடம் இந்த போம்டிலா ஆகும்.
இடாநகர்:
புகைப்படம்: rajkumar1220
ஹிமாலய மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இடாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகராக விளங்குகிறது. 'மினி இந்தியா' என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து வசிக்கின்றனர். இடாநகரின் முக்கிய சுற்றுலாத்தலமாக இடா நகர் கோட்டை விளங்குகிறது. இதைத்தவிர கங்கா ஏரி, ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் விலங்கு காட்சி சாலை போன்றவை உள்ளன. புதுமையான அனுபவம் வேண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆண்டு முழுவதும் இங்கே வருகின்றனர்.
தவாங்:
புகைப்படம்: rajkumar1220
அருணாச்சல பிரதேசத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக தவாங் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் தான் உலகப்புகழ் பெற்ற தவாங் புத்த மடம் உள்ளது. பெரும் பழமை வாய்ந்த இம்மடத்திற்கு புத்த மதத்தினர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இது தவிர மேலும் இங்கு சோங்க-த்சேர் ஏரி , தக்ட்சங் புத்த மேடம் போன்றவை உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 13,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் 'ஷீலா' மலைப்பாதையில் பயணம் செய்யவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
கொன்ஷா:
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொன்ஷா என்னும் மலை வாசஸ்தலம் இன்னும் அதிகம் பிரபலமடையாதது. கடல் மட்டத்தில் இருந்து 1,215 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடம் இயற்கை காட்சிகளை விரும்பி புகைப்படம் எடுப்பவர்களின் சொர்க்க புரியாக விளங்குகிறது. இரைச்சல் மிகுந்த தினசரி வாழ்க்கை வழக்கத்தில் இருந்து தப்பித்து மனதுக்கு மகிழ்ச்சியாய் சில நாட்கள் தங்கிவர ஏற்ற இடம் கொன்ஷா.