இந்தியா... உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்று. உலகெங்கிலுமிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் தங்கியிருந்து அதன் பழைமையையும், வரலாற்றையும், கலைகளையும் கண்டு வியந்து செல்கின்றனர்.
சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 6.23 சதவிகிதம் பங்களிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 50 லட்சங்களுக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகின்றனர்.
இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்கள் அனைத்துக்கும் தவறாமல் செல்ல, அதிக நாள்கள் தங்கியிருந்து இந்தியாவின் வளங்களைக் கண்டு செல்கின்றனர். அதிலும் குறிப்பாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்வது தென்னிந்திய மாநிலங்கள்தான் என்கிறது புள்ளிவிவரம்
ஆலப்புழா
கடவுளின் ஊர் என்றழைக்கப்படும் கேரளாவுக்கு அதிக அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். கேரளாவில், ஆலப்புழாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக கேரள சுற்றுலாத்துறை குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. படகு இல்லம், ஏரிகள் என் அட்டகாசமான அழகுகளை தன்னுள்ளே வைத்திருக்கும் ஆலப்புழாவுக்கு நீங்களும் போய் வரலாமே....
தமிழ்நாட்டிலிருந்து, கன்னியாகுமரி, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமான நிலையம்: கொச்சின்
PC: Babitha George
கசோல்
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் காடு, மலை, நீரோடைகள் என வன வளம் நிறைந்து காணப்படுகிறது. பார்வதி ஆறு ஓடும் பகுதி காடு மற்றும் சமவெளி பகுதிகளும் கலந்து உள்ளது. 1640 மீ தொலைவில் அமைந்துள்ள கசோல் வெளிநாட்டுப் பயணிகளை அதிகளவில் தன்னை நோக்கி இழுக்கிறது.
அருகிலுள்ள ரயில் நிலையம்: சந்தூரா ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: புந்தர் விமான நிலையம், குல்லூர்
PC: Sougata Sinha
கொடைக்கானல்
தமிழகத்தின் சொர்க்கபூமி கொடைக்கானல் என்றால் அது மிகையாகாது. மலைகளின் மேல் அத்தனை அதிசயங்களையும் இயற்கை படைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஏரி, பூங்கா ஆகியவற்றை காண அதிகளவில் வருகைத் தருகின்றனர்.
அருகிலுள்ள ரயில் நிலையம்: பழநி ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: மதுரை, கோயம்புத்தூர்
PC: Ahmed Mahin Fayaz
கோகர்னா
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கடல்களின் அரசன் சுற்றுலாப் பயணிகளை கண்ணை மூடிக்கொண்டு தன்னை முதல் ஆளாக தேர்வு செய்யும் வளங்களை உள்ளடக்கியுள்ளது. கோகர்னா கடற்கரை இதுவரை பார்க்கவில்லை என்றால் இந்த விடுமுறைக்கு செல்ல திட்டமிடுங்கள்...
அருகிலுள்ள ரயில் நிலையம்: கர்னா சுபர்ணா ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: கோவா விமான நிலையம்
PC: Danny Pinkus
ஆக்ரா
ஆக்ரா இந்த வருடத்தில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக உள்ளது. காதலின் சின்னமான தாஜ்மஹாலைக் காண உலகம் முழுவதுமிருந்தும் காதலர்கள் வருகைத் தருகின்றனர். முகலாய மன்னர்களின் கட்டடக்கலையை காணவும் இந்த இடத்துக்கு நிறையபேர் வருகைபுரிகின்றனர்.
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஆக்ரா சிட்டி ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: குவாலியர், டெல்லி
PC: RLuna
ஹம்பி
பழங்கால கட்டடக்கலையை பறைசாற்றும் ஹம்பி, கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசின் கீழ் இருந்தபோது இந்நகரம் பல்வேறு கட்டிடங்களால் சூழப்பட்டிருக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த கிராமம் பாதி சிதைந்த கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது. வரலாறு பற்றிய சுற்றுலாவில் அதிகம் ஆர்வம் கொண்ட வெளிநாட்டினர் இந்த இடத்தை மறப்பதேயில்லை.
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஹாஸ்பெட் சந்திப்பு ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: பெல்லாரி, பெலகாம்
PC: KRISHNA SRIVATSA NIMMARAJU
கோவா
கோவா.... பெயர் ஒன்றே போதும்.. வேறு என்ன சொல்ல.. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றாலே கோவா தானே....
அருகிலுள்ள ரயில் நிலையம் : வாஸ்கோடா காமா ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்: கோவா
PC: Monali Mahedia
மேகாலயா
இந்தியாவின் கிழக்கு பிராந்திய மாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள இயற்கை வளங்கள் கற்பனைக்குள் அடங்காதவை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அருகிலுள்ள விமான நிலையம்: கவுகாத்தி
PC: Bernard Trench Lyngdoh
அந்தமான்
அந்தமானின் அழகை நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு அழகு வளம் கொஞ்சும் இயற்கை அன்னையின் செல்லப் பிள்ளை அந்தமான். சுற்றிலும் உள்ள தீவுக்கூட்டம் உங்களை சொர்க்கத்தில் இருப்பதாக உணர வைக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம்: போர்ட் பிளேர்
PC: Alexander Ponick
கன்னியாகுமரி
இந்தியாவில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதில் கன்னியாகுமரிதான் முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் அனைவருக்குமே தெரிந்த இடமாக கன்னியாகுமரி அறியப் படுகிறது. கோவா மற்றும் கன்னியாகுமரியை பார்க்காமல் தாய்நாடு திரும்ப விரும்பவில்லை என்கின்றனர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பலர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : கன்னியாகுமரி, நாகர்கோவில்
அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம்
PC: Amar Raavi