கோடை தணிந்து, குளிர் ஆரம்பித்துவிட்டது! இந்த நேரத்தில் ஒரு சுற்றுலா சென்றால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறதா? ஆனால் மழை பெய்யுமோ என்ற கவலையும் உள்ளதா? இதோ உங்களுக்கான நவம்பர் மாத டூர் கைடு!
இந்த குளிர் காற்றும் மிதமான வானிலையும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர தூண்டுகிறது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகவும் அழகாகவும், பசுமையாகவும் காட்சி தரும். ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் போன்ற வழக்கமான இடங்களுக்கு செல்லாமல் புது விதமாக முயற்சி செய்யுங்கள்!

மதுரை
மதுரை எப்பொழுதும் ஸ்டாரு சூடாகவே இருக்கும் ஒரு இடமாகும். ஆனால் மதுரைக்கு செல்வதற்கு இது தான் சரியான தருணம். வெயில் குறைந்து குளிரும் லேசான தூறலும் இருக்கும் இந்த சமயத்தில் தான் மதுரைக்கு செல்ல வேண்டும். அப்பொழுதுதான் வெயிலின் தாக்கம் இல்லாமல் ஃப்ரீயாக ஊர் சுற்றி பார்க்க முடியும்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால், வைகை அணை, அழகர் கோயில், மேகமலை, சமணர் ஹில்ஸ், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்என மதுரையைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

ஏற்காடு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஏற்காடு அதன் பரந்த பசுமையான காடுகள், வளமான காபி தோட்டங்கள், தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக பெயர் பெற்றது. 4970 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டின் வானிலை மிகவும் இதமாக இருப்பதால் எப்பொழுதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.
எமரால்டு ஏரி, மான் பூங்கா, 32 கிமீ லூப் ரோடு, டிப்பரரி வியூ பாயின்ட், லேடி சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ரோஸ் கார்டன், கோட்டச்சேடு தேக்கு காடு, தாவரவியல் பூங்கா, குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, பட்டுப் பண்ணை ஆகியவற்றை நீங்கள் இங்கு கட்டாயம் பார்வையிட வேண்டும்.

சிதம்பரம்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் பழங்காலத்திலிருந்தே கட்டிடக்கலை பெருமை மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்து வருகிறது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாய ஸ்தலம் இங்கு தான் அமைந்துள்ளது.
தில்லை அம்பல நடராஜர் கோயில், இளசுகளுக்கு எல்லாம் பிடித்த பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள், பொன்னியின் செல்வன் கதையோடு தொடர்புடைய கொள்ளிடம், மார்க்கேண்டயரை காத்த திருக்கடையூர், பழம்பெரும் வரலாற்று நகரமான பூம்புகார் ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு களிக்கலாம்.

ஏலகிரி
ட்ரெக்கிங் செய்பவர்களிடையேயும், இயற்கை ஆர்வலர்களின் மத்தியிலேயும் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இடம் தான் இந்த ஏலகிரி. கடல் மட்டத்திலிருந்து 4600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் பல கண்கவர் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியது.
அவற்றில் ஜலகம்பாறை அருவி, புங்கனூர் ஏரி, தொலைநோக்கி கண்காணிப்பகம், சுவாமிமலை மலை, ஜலகண்டீஸ்வரர் கோவில், இயற்கை பூங்கா, அரசு மூலிகை பண்ணை, நிலாவூர் ஏரி, அமிர்தி விலங்கியல் நீர்வீழ்ச்சி ஆகியவை முதன்மையானவையாகும்.

சிவகங்கை
செட்டிநாட்டின் வளமான பாரம்பரியம், கலை மற்றும் கட்டிடக்கலை அழகை உலகிற்கு எடுத்து சொல்லி பிரமாண்டமாக நிற்கிறது இந்த சிவகங்கை மாவட்டம். ஆனால், கோடைக்காலத்தில் இங்கு வருவது அவ்வளவு சரியான தேர்வாக இருக்காது. வெயிலின் தாக்கம் இல்லாத நேரத்தில் தான் இங்கு நன்றாக சுற்றி பார்க்க முடியும்.
செட்டிநாடு கலாச்சாரத்தில் கட்டப்பட்டிருக்கும் மாளிகைகள், அரண்மனை வீடுகளை நாம் முதலில் பார்க்க வேண்டும். பின்னர் செட்டிநாடு மியூசியம், பிள்ளையார்பட்டி விநாயகர், இளையாத்தன்குடி, சூரக்குடி ஆகியவற்றை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.

வால்பாறை
கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது.
சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

தேனி
பசுமை மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய மாவட்டமாகும். ஏராளமான ஆறுகள் மற்றும் அணைகளைக் கொண்டுள்ள தேனி 27 காடுகளின் இருப்பிடமாக உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை குடி கொண்டுள்ளது.
சுருளி நீர்வீழ்ச்சி, மேகமலை, கும்பக்கரை அருவி, போடிநாயக்கனூர், பல கோவில்கள் மற்றும் அணைகள் என தேனியில் எங்கு சென்றாலும் அது நமக்கு சுற்றுலாத் தலமே!

கன்னியாகுமரி
தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்து இருக்கும் கன்னியாகுமரி வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு மாவட்டமாகும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கு செல்லும் போது கோடை வெயில் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது.
திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், தாணுமாலயன் கோவில், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி கடற்கரை, மெழுகு அருங்காட்சியகம், சங்குத்துறை கடற்கரை, ஒலகருவி அருவி ஆகியவை நீங்கள் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

திருநெல்வேலி
பல்வேறு புவியியல் அம்சங்களின் சங்கமமாக மலைகள், காடுகள், நெல் வயல்கள், கடல் மற்றும் வறண்ட நிலங்கள் ஆகிய அனைத்தையும் திருநெல்வேலி உள்ளடக்கி சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. திருநெல்வேலி ஒரு பழங்கால குடியேற்றமாக கருதப்படுகிறது. முற்காலப் பாண்டியர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மலபார் மற்றும் திருநெல்வேலி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு என பல மன்னர்களின் ஆட்சி புரிந்ததற்கான சான்றுகளை நாம் இங்கே காணலாம்.
நெல்லையப்பர் கோவில், மணிமுத்தாறு அருவி, பாபநாசம், கழுகுமலை, மாஞ்சோலை, கூந்தங்குலம் பறவைகள் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், மேலும் பல கோவில்கள் மற்றும் அருவிகள் என நெல்லையில் நீங்கள் பார்ப்பதற்க்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

ராமேஸ்வரம்
இந்தியாவின் கடைக்கோடி ஓரத்தில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது. எல்லா நாட்களிலும் இங்கு வருகை தரலாம் என்றாலும் மழைச் சாரலில் பாம்பன் பாலத்தின் மேல் பயணம் செய்வது பார்ப்பது சற்று சிலிர்ப்பாக இருக்குமல்லவா?
இருபுறமும் பாரிய சிற்பத் தூண்களுடன் கூடிய பிரம்மாண்டமான பிரகாரங்களுக்குப் பெயர் பெற்ற ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, அனுமன் கோயில், அரியமான் பீச், அக்வேரியம் ஆகியவற்றை நீங்கள் இங்கு கண்டு களிக்கலாம்.
மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், அருகிலுள்ள நகரங்களின் ரயில் மற்றும் விமான மார்க்கமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திலேயே மேற்கூறிய அழகான இடங்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரசித்துவிட்டு வாருங்கள்!



Click it and Unblock the Notifications






