கோல்கட்டா, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகராக, அதன் கலாச்சாரம், வரலாறு, மற்றும் உணவுகளால் பிரபலமான நகரம். "சரஸ்வதி நகரம்" என்றும் அழைக்கப்படும் இந்நகரம், ரவீந்திரநாத் தாகூர், சுதேந்திரநாத் போஸ் போன்ற பல அறிஞர்களின் பிறப்பிடமாக விளங்குகிறது.

கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு வசீகரிக்கும் தன்மை இருக்கும். துர்கா பூஜை விழாக்கள் முதல் அமைதியான குளிர்கால காலை வரை, ஒவ்வொரு பருவமும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.கொல்கத்தாவைப் பார்வையிட சிறந்த நேரம் எதுவென்று தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை)
குளிர்காலம் கோல்கட்டாவிற்கு வருகை தர சிறந்த நேரம். நீண்ட நடை பயணங்கள் சென்று நகரத்தை பார்ப்பதற்கு இது ஓர் ஏற்ற காலமாகும். இந்த நேரத்தில் நகரம் அதன் வெப்பமான தன்மை இழந்து குளிர்ச்சியான சூழ்நிலையில் இருக்கும். குளிர்கால மாதங்களில் கோல்கட்டாவின் அடையாளங்களான விக்டோரியா மெமோரியல், ஹவுரா பாலம் மற்றும் மார்பிள் பேலஸைப் பார்வையிட சிறந்த நேரம்.

நகரின் மையப் பகுதியில் உள்ள மைதானம் மற்றும் விசாலமான தோட்டத்தின் வழியாக நடை பயிற்சி செய்வதும் மகிழ்ச்சியானதாக இருக்கும். மேலும் கோல்கட்டாவின் தெரு உணவுகளான சூடான புச்காக்கள், பானி பூரி மற்றும் கத்தி ரோல்ஸ் ஆகியவை இந்த நேரத்தில் இன்னும் நாவில் நீர் ஊற வைக்கும் உணவுகளாகும்.
மேலும் குளிர்காலம் என்பது கோல்கட்டாவின் பண்டிகை காலமாகும். கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோவர் லேன் இசை மாநாட்டிற்காக தொலைதூரத்தில் இருந்து கலை மற்றும் இசை ஆர்வலர்கள் இந்த நகரத்திற்கு பார்வையிட வருகிறார்கள். இங்குள்ள பார்க் தெருவில் தேவதை விளக்குகள் மற்றும் இசையுடன் கூடிய ஆடம்பரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் பண்டிகை மனநிலைக்கு பார்வையாளர்களை மாற்றும் ஒன்றாகும்.

வசந்த காலம் (மார்ச் முதல் மே வரை)
வசந்த காலம் பூக்கள் பூப்பதற்கும், வெப்பம் அதிகரிப்பதற்கும் ஏற்ற காலம். கோல்கட்டாவில் கோடை வெப்பத்தின் அறிகுறியுடன் வசந்த காலம் தொடங்குகிறது. நீங்கள் செல்லும் நாட்களை கவனமாக திட்டமிட்டால் அது மிகவும் அருமையானதாக இருக்கும். இந்த காலங்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க தொடங்கும். ஆனால் காலை மற்றும் மாலை வேளைகளில் நன்றாக இருக்கும்.
இந்தப் பருவத்தில் இங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கும், சூரிய ஒளியிலிருந்து குளிர்ச்சி அடைய ஹூக்ளி நதி கரையில் பிற்பகல் படகு சவாரி செய்வதற்கும் ஏற்ற காலமாகும். கோல்கட்டாவின் புறநகரில் சிவபெருமானை மையமாக கொண்ட கஜன் திருவிழாவையும் காணலாம்.
இயற்கை ஆர்வலர்களுக்கு இங்குள்ள தாவரவியல் பூங்கா மற்றும் உலகின் மிகப்பெரிய மரங்களில் ஒன்றான பெரிய ஆலமரம் போன்றவை பார்வையிட ஏற்ற இடங்களாகும். மேலும் வசந்த காலங்களில் மலர் சந்தைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் இந்த காலங்களில் குளிர்காலத்திலும் ஒப்பிடும் பொழுது குறைவான மக்களே வந்து பார்வையிடுகின்றனர்.
கோடை காலம்(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை)
கோல்கட்டாவின் கோடை காலம் மிகவும் வெப்பமானதாக இருக்கும். வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கோடைகாலத்தில் சுற்றி பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், சாகச பயணங்கள் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு இந்த வெப்பமான வானிலை புதிய அம்சங்களை வெளிப்படுத்தும்.
நகரத்தின் பல கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியங்களையும் குளிரூட்டப்பட்ட ஷாப்பிங் மால்களையும் பார்வையிட இது அருமையான பருவமாகும். இந்த கோடை காலத்தில் ஷெர்பெட் சுவையூட்டப்பட்ட பானங்கள் மற்றும் புதிய மாம்பழங்கள் இந்த சீசனில் இங்கு அதிகமாக கிடைக்கும்.
கோடை காலத்தில் வருகை தருவதால் ஏற்படும் நன்மைகள்
குறைவான கூட்டத்துடன் அமைதியாக சுற்றுலா தலங்களை சென்று ரசிக்கலாம். கோல்கட்டாவிற்கு மட்டுமே உரித்தான பருவகால பழங்கள் மற்றும் பானங்களை ருசித்து மகிழலாம். பருவ காலத்திற்கு ஏற்றபடி சலுகைகள் ஏராளமாக இருப்பதால் பட்ஜெட் பயணிகளுக்கு கோடை காலம் ஏற்றதாக உள்ளது.
மழைக்காலங்களில் கோல்கட்டா:
(செப்டம்பர் முதல் அக்டோபர் வரை) மழைக்கால மழை கோல்கட்டா நகரத்தை ஒரு கவிதையாக நினைக்கத் தோன்றுகிறது. மேலும் நகரம் பசுமையால் நிறைந்திருக்கும். சூடான தேநீர் மற்றும் மொறுமொறுப்பான பக்கோடாக்களுக்கு ஏற்ற நேரம். சாலையோர கடைகளில் அவற்றை ருசிப்பது மிகவும் அலாதியானது.
வடக்கு கோல்கட்டாவில் உள்ள தெருக்களில் டிராமில் சவாரி செய்வது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இங்கு மழைக்காலத்தில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகையான துர்கா பூஜையின் தொடக்கமும் நடைபெறும். இங்கு நடக்கும் துர்கா பூஜையில், விரிவான பந்தல்கள், அற்புதமான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பலவிதமான உணவு கடைகளில் கிடைக்கும் உணவு பொருட்கள், கலை நயமிக்க மின்சார விளக்குகள் போன்றவற்றால் நகரம் மிகவும் ஜொலிப்புடன் காட்சியளிக்கின்றன. கோல்கட்டாவில் மிகச்சிறந்த கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ள ஏற்ற காலமாகும்.



Click it and Unblock the Notifications






