பெரும்பாலான சென்னை மக்கள் உபயோகப்படுத்திவரும் சென்னை மெட்ரோவில் தற்பொழுது ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களிலும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு உள்ளேயும் ஒரு சில பொருட்களை எல்லாம் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைவிதிக்கப்பட்ட பொருட்களுடன் நீங்கள் ரயிலில் ஏற முற்பட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவீர்கள் மக்களே! என்ன என்ன பொருட்களை எல்லாம் நீங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று இங்கே பார்ப்போம்!
சென்னை மெட்ரோ
சென்னையின் நெருக்கடியில் சிக்கி கொள்ளாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக செல்ல சென்னை மக்கள் மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பாக ஒரு சில மாதங்களில் சென்னை மெட்ரோவை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது இது மலிவானது, வேகமானது, கூடவே நிறைய பொருட்களையும் நீங்கள் மெட்ரோவில் எடுத்துச் செல்லலாம். ஆனால் சென்னை மெட்ரோவில் சில பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமைக்காத இறைச்சிக்கு அனுமதி இல்லை
அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், சமைக்காத பச்சை இறைச்சி (சிக்கன், மட்டன்) மற்றும் கடல் உணவுகளை (மீன், நண்டு, இறால், கருவாடு) எடுத்துச் செல்லும் பயணிகள் இனி சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், இவ்வளவு ஏன் ரயில் நிலையங்களில் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள். யாரும் சமைக்கப்படாத இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை எடுத்துச் செல்வதை இந்த உத்தரவு தடை செய்கிறது. CMRL ஐச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அனைத்து பெருநகரங்களிலும் இந்த உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
என்ன காரணம்
மெட்ரோ ரயில்கள் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளதால் எப்பொழுதும் மூடிய நிலையில் தான் இருக்கும். ஜன்னல்கள் கதவுகள் அடைத்து இருக்கப்படும் சூழலில் பச்சை இறைச்சி மற்றும் கடல் உணவுகள் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். சமைக்கப்படாத இறைச்சி மற்றும் கடல் உணவுகளால் தாங்க முடியாத துர்நாற்றம் ஏற்படுவதோடு, அது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.. இந்த துர்நாற்றம் ரயிலின் அதே பெட்டியில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுவுக்கும் “நோ நோ”
மெட்ரோ ரயில்களில் பயணிகள் மதுபானங்களை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானம் பொதுவாகவே பயணங்களில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளாகும். அதோடு, மெட்ரோ ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் பயணிகள் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் விமான நிலைய வரியில்லா கடைகளில் (Duty free shop) இருந்து சீல் வைக்கப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்லும் பயணிகள் பயணத்தின் போது பாட்டில்களை திறக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பேக்கேஜ் ஸ்கேனர்கள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பி அனுப்பப்படுவீர்கள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் ஸ்கேனர் வைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அவர்களின் உடமைகளை அதில் ஸ்கேன் செய்ய வேண்டும். இதற்காக டிக்கெட் கவுன்டர்களில் சோதனை நடத்தப்படும். தடைசெய்யப்பட்ட சமைக்காக பச்சை இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் மது பாட்டில்கள் அவர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பயணிகள் உடனடியாக மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
கலக்கத்தில் பயணிகள்
திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. துர்நாற்றம் ஏற்படாத வகையில் நன்கு பேக் செய்யப்பட்ட காற்று புகாத கொள்கலன்களில் சமைக்கப்படாத உணவுகளை மெட்ரோ ரயில்களில் கொண்டு செல்ல பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பயணி ஒருவர் சென்னை மெட்ரோவை கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரில் நன்கு சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் சமைக்கப்படாத உணவுகளை எடுத்துச் செல்வோர் மெட்ரோ ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கே அனுமதி இல்லை, நீங்களும் இனி சென்னை மெட்ரோவில் இந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாம் மக்களே!