'உலகப்பொதுமறை' என்று போற்றப்படும் திருக்குறளை இந்த உலகிற்கு பரிசளித்த திருவள்ளுவருக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னையில் தேர் போன்ற வடிவில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. 80, 90 களில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற எவருமே வள்ளுவர் கோட்டம் சென்று நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு சென்றிருப்பார்கள். ஆனால் இன்றைய நவீன கால இளைஞர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வள்ளுவர் கோட்டம் நோக்கி வரவைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது!
திருவள்ளுவருக்கு தேர் வடிவில் நினைவுச்சின்னம்
வள்ளுவர் கோட்டம் நினைவுச்சின்னம் என்பது புகழ்பெற்ற திருக்குறளை எழுதிய தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் நினைவுச் சின்னமாகும். இந்த தேர் வடிவ நினைவுச்சின்னம் 39 மீட்டர் (128 அடி) உயரம் கொண்டது, மேலும் இது திருவாரூரில் உள்ள கோவில் தேரின் பிரதியாகும். வள்ளுவர் கோட்டத் தேரில் திருவள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை மிகவும் உயிரோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது என்பது அதன் கூடுதல் சிறப்பு.

தூண்களே இல்லாத மிகப்பெரிய அரங்கம்
அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் சுமார் 4,000 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை காண முடியும்.
மு.கருணாநிதியால் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம்
திருவள்ளுவரின் பங்களிப்பை போற்றும் வகையில் 1970களில் கலைஞர் மு.கருணாநிதியால் இந்த நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டம் அதன் சிறந்த கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது, புதுமையான அமைப்புகளுடனும், நன்கு சிந்திக்கப்பட்ட செயலாக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் கம்பீரமான அழகை, காலை நேரங்களில் நன்றாக அனுபவிக்கலாம், அதே போல சூரியன் அடிவானத்தில் மறையும் மாலை நேரங்களில் இந்த இடத்திற்குச் செல்லலாம்.
சென்னையின் பிரதான சுற்றுலாத் தலம்
வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கியமான சுற்றுலாத் தலமாக இருப்பதுடன், நகரின் சில முக்கியமான கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கும் விருந்தளிக்கிறது. கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் இங்குள்ள ஆடிட்டோரியத்தில் வழக்கமாக நடத்தப்படுகின்றன, இது குளிரூட்டப்பட்ட வசதி மற்றும் உள்ளேயும் வெளியேயும் உள்ள கலை அழகை ரசிக்க சில மணிநேரங்களை செலவிட சிறந்த வழியாகும்.

வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்க முடிவு
ஆனால் இன்றைய கால இளைஞர்களுக்கு இவற்றை எல்லாம் சுற்றிப் பார்க்க நேரமோ விருப்பமோ இருப்பது இல்லை, எந்நேரமும் மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு எதிரே யார் வருகிறார் என்பதை கூட கவனிக்காமல் கூட நடந்து செல்கின்றனர். அப்படியே நேரம் கிடைத்தாலும் மால்கள், தியேட்டர்கள் என கிளம்புவார்கள். இன்றைய கால இளைஞர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் பொருட்டு தமிழக அரசு வள்ளுவர் கோட்டத்தை மறு சீரமைக்க முடிவு செய்துள்ளது.
நூலகம், திரையரங்கு, உணவகம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தை நவீன அம்சங்களுடன் பொதுப்பணித்துறை (PWD) சீரமைக்க உள்ளது என தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வள்ளுவர் கோட்டத்தில் நூலகம், ஒலி-ஒளி காட்சி, உணவகம், திரையரங்கு ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் சுமார் ரூ.30 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறையினர் சீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருவதாகவும், அது முடிந்ததும் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
எப்போது வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லலாம்
வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது. எல்லா நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 6 வரை வள்ளுவர் கோட்டம் திறந்து இருக்கிறது. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களிடம் ரூ.3 மற்றும் குழந்தைகளிடம் ரூ.2 வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள அரங்கில் அவ்வப்போது கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அந்த சமயத்தில் அனைவருக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.
நீங்கள் வள்ளுவர் கோட்டத்திற்கு சென்றது உண்டா? அதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?



Click it and Unblock the Notifications





