வந்தாச்சு வார இறுதி, மாதத் துவக்குமும் கூட. அன்றாடம் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருப்பவர்களும், மச்சா இந்த வாரம் எங்கடா போகலாம் என ஏங்கிக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களும் நிச்சயம் ஏதாவதொரு சுற்றுலாத் தலங்களைத் தேடிக் கொண்டிருப்பீர்கள். அது நம் பகுதிக்கு அருகிலேயும் இருக்க வேண்டும், பட்ஜெட்டுக்கு ஏற்ற தலமாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் பாதுவானக் கருத்தாகக் கூட இருக்கலாம். அப்படி இந்த வீன்கென்டில் சின்னதா சுற்றுலா செல்ல விரும்புவோருக்காகவே உள்ளது நம்ம கொழுக்குமலை. வாங்க, எங்கே உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.
கோயம்புத்தூர் - சின்னார் சரணாலயம்
கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி- உடுமலை வழியாக மூணார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்னார் வனவிலங்கு சரணாலயம். இச்சரணாலயத்தில் சிறுத்தை, புள்ளி மான்கள், யானை, தொப்பித்தலை குரங்குகள், வரையாடுகள் என பல வகையான விலங்கினங்களைக் காண முடியும். மேலும், இங்குள்ள தூவானம் நீர்வீழ்ச்சி, முழு சரணாலயத்தையும் ஒரே இடத்தில் இருந்து கண்டு ரசிக்கும் வகையிலான கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை இச்சரணாலயத்தின் கவரும் அம்சங்களாக உள்ளன.
சின்னார் சரணாலயம் - கொழுக்குமலை
சின்னார் சரணாலயத்தில் சிறிது ஓய்வுக்குப் பிறகு பயணத்தைத் தோடர்ந்தீர்கள் என்றால் மணார் வழியாக, தேவிகுளம், சின்னகனல், சூரியநெல்லி வழியாக கேரள எல்லையைக் கடந்து மீண்டும் தமிழக எல்லையான தேனிக்கு உட்பட்ட கொழுக்குமலையை அடைந்து விடலாம். வளைந்து, நெளிந்த மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் பயணிப்பது சற்று கடிணமானதாக இருக்கும். முறையான அனுபவத்துடன் மட்டுமே இச்சாலையில் பயணிக்க முடியும்.
கொழுக்குமலை
உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் பகுதி என தேடினால் முதலில் நம் கண்ணில் தென்படுவது இந்த கொழுக்கு மலைப் பிரதேசம் தான். தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துப் பகுதியான இந்த கொழுக்குமலை கோயம்புத்தூரில் இருந்து சுமார் 195 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமுடி வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பிரம்மாண்டமான இயற்கைச் சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
தேயிலை மலைத் தோட்டம்
கொழுக்குமலையின் பெரும்பாலானப் பகுதி தேயிலை தோட்டங்கள் நிறைத்து காணப்படும். இதனருகே உள்ள பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே பரந்து விரிந்து கிடைக்கும் யானை இரங்கல் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி ரசிக்க ஏற்ற தலம். வெயில் படாத மலைப் பிரதேசமான கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயிலாக அமைந்துள்ளது சூரியநெல்லி மலைக் கிராமம்.
விளையாடும் மேகங்கள்
மலை முகட்டில் தேயிலைத் தோட்டங்களின் நடுவே நடந்து செல்லும் யாவரும் மேகக் கூட்டங்களுடன் மறைந்து வெளியேறும் அனுபவத்தைப் பெறமுடியும். இப்பகுதியில் மேகக் கூட்டங்கள் தரையிறங்கி படர்ந்திருக்கும் காட்சி, புகைப்படக் கலைஞர்களுக்க விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்த காட்சிகளை காலை நேரங்களில் சூரியன் உதிக்கும் வேளையில் தாராளமாக பார்த்து ரசிக்கலாம்.
மீசைப்புலி
கொழுக்குமலைக்கு அருகிலேயே உள்ள மலை முகடுதான் மீசைப்புலி. கொழுக்குமலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் ஜீப்பில் பயணித்தால் மீசைப்புலி மலைப்பகுதியை அடையலாம். தனி வாகனத்தில் செல்ல முடியாது. வனத்துறையினரின் முறையான அனுமதி பெற்றிருந்தால் இங்கே மலையேற்றமும் செய்ய முடியும். ஆனால், தற்போது அங்கே மலையேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் எளிதில் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிந்துள்ள பசுமை அழைகை காண முடியும்.
பாதுகாக்கப்பட்ட வனம்
நேரம் இருப்பின் கொழுக்குமலையில் இருந்து இடுக்கி பயணிப்பது கூடுதல் அனுபவமாக இருக்கும். கொழுக்குமலையில் இருந்து சூரியநெல்லி வரியாக சுமார் 11 கிலோ மிட்டர் தொலைவில் உள்ளது இடுக்கி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இச்சாலையின் இடையே தேயிலைத் தோட்டங்கள் சூழ ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியும் உள்ளது. அங்கே உள்ளூர் மக்களின் உதவியுடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அடர் காட்டிற்குள் சிறிது தூரம் மலையேற்றத்தில் ஈடுபடலாம். யானை, புலிகள் அதிகம் உலாவும் பகுதி என்பதால் முறையான அனுமதியின்றி உள்ளே செல்லக் கூடாது. மேலும், வனப்பகுதியிலும் தனித்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
தங்கும் விடுதிகள்
மூணார் சுற்றுலாத் துறையின் சார்பிலும், தனியார் மூலமாகவும் கொழுக்குமலை மற்றும், இடுக்கிக்கு உட்பட்ட ரிசர்வ் காடுகளுக்கு அருகே சில தங்கும் விடுதிகள் உள்ளன. ஓர் நாள் தங்கிச் செல்ல 700 முதல் 1500 வரையிலான குறைந்த பட்ஜெட் விடுதிகளும் உள்ளன. நகரமயமாக்களில், வாகன நெரிசலில் இருந்து விலகி மனதை சற்று ஆசுவாசப்படுத்த இங்கே தங்கி இரவின் மலைக் காடுகளை ரசிப்பது ரம்மியமானதாக இருக்கும்.