காசி என்றாலே இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பாதிபேருக்கு அகோரிகள்தான் ஞாபகம் வருகிறார்கள். அந்த அளவுக்கு தற்போது வரும் சினிமாக்கள் அகோரிகளின் வாழ்க்கையை பதிவு செய்துகொண்டிருக்கின்றன.
ஆனால் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கங்கை நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் காசி அல்லது பனாரஸ் அல்லது வாரணாசி நகரம் தேவ் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அழகு மிளிர காட்சியளிக்கும்.
வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இங்கு கொண்டாடப்படும் மஹாஉத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்!
தேவ் தீபாவளி
தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் குழுமுகிறார்கள்.
ஒளிரும் படித்துறைகள்!
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அது எப்படியோ தெரியாது ஆனால் நம் பூமியில் உள்ள தேவதைகளை அந்த நேரத்தில் பார்க்க தவறவிட்டுவிடக்கூடாது!!!
கங்கா ஆர்த்தி
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தசஸ்வமேத் படித்துறையில் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்த்தமனத்தின் போது கங்கா ஆர்த்தி நடைபெறும். ஆனால் தேவ் தீபாவளி அன்று நடக்கும் மகா ஆர்த்தி வெகு விசேஷமாக ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. அப்போது கங்கா ஆர்த்தி 21 பிராமண அர்ச்சகர்கள் மற்றும் 24 இளம் மங்கைகளால் நிகழ்த்தப்படுகிறது.
வீரர்களுக்கு வீரவணக்கம்!
தசஸ்வமேத் படித்துறையில் கங்கா ஆர்த்தி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளையில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதியில் இராணுவ வீரர்களால் வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. அப்போது நாட்டுப்பற்றுமிக்க பாடல்களும், பஜன்களும் பாடப்படுகின்றன. அதோடு பகீரத் சௌர்ய சம்மன் என்ற விருதும் இந்த தருணத்தில் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்நானம்
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் தீபாவளி அன்று தலைக்கு எண்ணை வைத்து கங்கா தீர்த்தத்தை குளியல் நீரில் கலந்து குளிப்பது வழக்கமாக இருக்கிறது. அதேபோல கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி கொண்டாடும்போது காசியில் உள்ள கங்கை நீரில் நீராடுவர். இவ்வாறு நீராடுவதால் வாழ்கையில் செய்த பாவங்கள் அனைத்தும் கங்கை நீரில் சென்றுவிடுவதாக பக்தர்கள் நம்பி வருகிறார்கள்.
கலாச்சார பிரவாகம்!
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களை போன்ற கலா ரசிகர்கள் கண்டிப்பாக தேவ் தீபாவளி அன்று காசி வர வேண்டும். அப்போது இசை, நடனம், கைவினைப்பொருட்கள் கண்காட்சி என்று இந்திய பாரம்பரிய கலைகளின் சங்கமமே இங்கு நடந்தேறும்.
ஆற்றில் மிதக்கவிடப்படும் அகல் விளக்குகள்!
நம்ம ஊர் திருவிழாக்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி ஆற்றில் விடும் கட்சியை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். அதேபோலத்தான் காசியிலும் தேவ் தீபாவளி பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கங்கை நதியில் மிதக்கவிடப்படுகின்றன. அப்போது படித்துரைகளோடு சேர்ந்து கங்கை நதியும் ஒளிவெள்ளத்தில் மிதக்கும்!