அங்கோர் வாட் கோயிலைப் பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது தான் உலகிலேயே மிகப்பெரிய கோவிலாகும். கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் வளாகத்திற்குள் 9 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்களும் சிலைகளும் உள்ளன. இந்த கோயிலுக்கு இணையான மதிப்புக் கொண்ட தலம் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ளது. திரிபுராவின் "உனகோடி" இந்தியாவின் அங்கோர் வாட் என்றும் வடகிழக்கு இந்தியாவின் அங்கோர் வாட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரலாற்று புராதன சின்னம் இப்பொழுது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் இடம் பெற போகிறதாம். இது பெருமைப்படக்கூடிய விஷயம் தானே!

எப்படி இது இந்தியாவின் அங்கோர் வாட் ஆனது?
திரிபுராவின் உனகோட்டியில் அமைந்துள்ள பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்களின் கட்டமைப்புகள் பிரமாண்டமாகவும், தனித்துவமான மங்கோலாய்டு அம்சங்களைக் கொண்டிருகின்றன. கம்போடியாவின் அங்கோர் வாட் கோயிலில் உள்ள அழகிய உருவங்கள் போலவே கிட்டத்தட்ட அதே மாய அழகைக் காட்டுவதால் இது வடகிழக்கு அங்கோர் வாட் என்று அழைக்கப்படுகிறது.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் நம் அங்கோர் வாட்
உனகோட்டியை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோவை அணுகியுள்ள மையம், மேலும் இந்த இடத்தை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்த மாநிலத்திற்கு 12 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வடகிழக்கு இந்தியாவின் இந்தப் பொக்கிஷத்தைப் பார்வையிட அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அந்த இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளை மேம்படுத்த திரிபுரா அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

99,999,99 சிற்பங்கள் கொண்ட உனகோட்டி
இந்த தளம் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. மேலும் இது ஒரு ஷைபா (சைவ) புனித யாத்திரை தளமாகும். இந்த இடம் அற்புதமான பாறை சிற்பங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகான சுவரோவியங்களைக் கொண்டுள்ளது. உனகோடி என்றால் 'ஒரு கோடிக்கு ஒன்று குறைவு' என்று அர்த்தமாம். மேலும் இங்கு 99,999,99 கட்டமைப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

எம்பெருமான் நடத்திய லீலை
சிவன் பார்வதியுடன் கைலாச மலைக்குச் செல்ல விரும்பிய பார்வதி தேவியின் பக்தரான கல்லு குமார் இந்த சிலைகளை உருவாக்கியவர் என்று உள்ளூர் பழங்குடி புராணம் கூறுகிறது. ஒரே இரவில் ஒரு கோடி தெய்வ சிலைகளை உருவாக்கினால் மட்டுமே, பார்வதியின் வேண்டுகோளின் பேரில் கல்லுவை கைலாச மலையில் உள்ள தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல சிவன் ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், காலையில் அவரால் 99,999,99 சிலைகளை மட்டுமே முடிக்க முடிந்தது, ஒன்றை விட்டு விட்டார் எனவும் கூறப்படுகிறது. அவரது பக்தியை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையில் சிலைகளை அங்கே விட்டுவிட்டு அவரை மட்டும் கைலாசம் அழைத்து சென்று விட்டாராம் சிவ பெருமான்.

காலம் கடந்து நிற்கும் சிற்பங்கள்
உனகோடியில் காணப்படும் படங்கள் பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் கல் உருவங்கள் என இரண்டு வகைகளாகும். பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்களில், மத்திய சிவன் தலை மற்றும் பிரமாண்டமான விநாயகர் உருவங்கள் சிறப்பு கவனத்திற்குரியவை. மத்திய சிவன் தலை 'உனகோடீஸ்வர கால் பைரவா' என்று அழைக்கப்படுகிறது. சிங்கத்தின் மீது நிற்கும் துர்க்கை, நந்தி விநாயகர் என பற்பல சிற்பங்கள் இங்குள்ளன.

வரலாறு மட்டுமல்ல, இயற்கை அழகிலும் உனகோட்டி பிரமாதம்
சுற்றிலும் பசுமையான தாவரங்கள் நிறைந்த அழகிய நிலப்பரப்பாக இந்த இடம் காட்சி தருகிறது. இயற்கை பொக்கிஷத்திற்கு நடுவே இப்படியொரு வரலாற்றுத் தலம் அமைந்திருப்பது, அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும், 'அசோகாஷ்டமி மேளா' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய கண்காட்சி, ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்கின்றனர்.

உனகோட்டியை எப்படி அடைவது?
உனகோட்டிக்கு அருகிலுள்ள விமான நிலையம் அகர்தலா ஆகும், இது கைலாஷாஹரிலிருந்து 178 கிமீ தொலைவில் உள்ளது. நீங்கள் ரயிலைத் தேர்வுசெய்ய விரும்பினால், கைலாஷாஹரிலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ள குமார்காட்டில் அருகிலுள்ள ரயில் நிலையத்தை அடையலாம். குவஹாத்தி, சில்சார், ஷில்லாங் மற்றும் அகர்தலா போன்ற அருகிலுள்ள நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் சாலை வழியாகவும் பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications





