இயற்கை அழகுடன் நிறைந்திருக்கும் தர்மபுரி, உங்களை இதமாகவும், வசதியாகவும், மிகவும் ரம்மியமாகவும் உணர வைக்கிறது. தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தர்மபுரி பெரும்பாலும் 'கோயில்கள், தேவாலயங்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
தொலைதூரத்தில் இருந்து வரும் புனித யாத்ரீகர்களைக் கொண்டு, இது ஒரு ஆன்மிக சுற்றுலா மையமாக உள்ள இந்த மாவட்டத்தில், அழகான சுற்றுலா இடங்களுக்கும் பஞ்சமில்லை கைய்ஸ்...! அப்ப இப்பவே கிளம்புங்க... குறைந்த பட்ஜெட்டில் ஒரு ரவுண்ட் போலாம். அந்த அழகான இடங்கள் என்ன என்பதை, கீழே ஒரு பாருங்களேன்.
தர்மபுரி மாவட்டம், 37 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த காடுகளில் யானை, புள்ளி மான்கள் போன்ற வன விலங்குகள் நிறைந்திருக்கும் இப்படி இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இங்கு பல சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன என்றால் நம்பி தான் ஆகனும்.

அதியமான் கோட்டை
முதலில் பார்க்க இருப்பது அதியமான் கோட்டை . இந்த அதியமான் கோட்டை, தர்மபுரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோட்டை கி.பி., 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், மன்னர் அதியமான் வாழ்ந்த கோட்டையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதியமான் கோட்டைக்கு அருகில் சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள்ளன. இவ்விரண்டு கோவில்களும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கவை. தர்மபுரியில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா ஸ்தலமாக, இந்த கோட்டை உள்ளது. எனவே, தர்மபுரிக்கு சென்றால், இந்த அதியமான் கோட்டையை கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
நாகாவதி அணை
அடுத்து நாம் பார்க்க இருப்பது நாகாவதி அணை. இந்த அணை, தர்மபுரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆல் கட்டப்பட்ட இந்த அணை சிறந்த மீன்பிடி ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் உள்ளது. அதனால், நீங்கள் நாகாவதி அணைக்கு சென்று கண்டிப்பாக சுற்றிப்பாருங்கள்.
கோட்டை கோவில்
தர்மபுரியில் அமைந்துள்ள கோட்டை கோவிலில் உள்ள சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள இரண்டு தூண்கள் தரையில் படாமல் அந்தரத்தில் நிற்கிறது. அதனால் இதனை பார்ப்பதற்கும் பலர் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். அதனால் நீங்களும் மறக்காதீங்க அந்தரத்தில் தொங்கும் துாண்களை காண...

ஸ்ரீ வீர ஹனுமான் கோவில்
ஸ்ரீ வீர ஹனுமான் கோவில் தர்மபுரியிலிருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள முத்தம்பட்டியில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹனுமான் மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆவார். இந்த கோவில் ஒரு சிறிய ஓடையின் மேல் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
தொப்பையாறு அணை
தொப்பையாறு அணை தர்மபுரியிலிருந்து 44 கி.மீ., தொலைவில் உள்ள தொப்பூரில் அமைந்துள்ளது. கடந்த 1986ல் கட்டப்பட்டுள்ளது. அமைதியான மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை கண்டிப்பாக தர்மபுரியில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா ஸ்தலமாக உள்ளது.

பஞ்சபள்ளி அணை
பஞ்சபள்ளி அணை 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சபள்ளியில் அமைந்துள்ளது. இந்த அணை 1977-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. பாலக்கோடிலிருந்து தேன்கனிக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த அணை மலைகளால் சூழப்பட்டு, மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படுவதால், பல சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.
இது மட்டுமின்றி, தர்மபுரியில் படகு சவாரி செய்வதற்கும், மருத்துவக் குளியல் எடுப்பதற்கும் , அற்புதமான எண்ணெய் மசாஜ்களை அனுபவிப்பதற்கும், இங்கு சிறந்த இடங்கள் உள்ளன. மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை உங்களுக்குள் புகுத்தக்கூடிய அற்புத இடமான காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.
இந்த இடம் மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இந்த நீர்வீழ்ச்சி 'இந்தியாவின் நயாக்ரா நீர்வீழ்ச்சி' என்று அன்போடு குறிப்பிடப்படுகிறது. தனியாகவோ, நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தை செலவிடக்கூடிய இடமாகும்; எப்படி இருந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு நிறைய காரணங்கள் நம்ம தர்மபுரியில் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications





