என்ன சென்னைக்கு பக்கத்தில காடுகளா? என்று நீங்கள் யோசிக்கலாம். சென்னையிலிருந்து 1-2 மணி நேர பயண தூரத்தில் 'பூத்து குலுங்கி, இயற்கை அழகால் நிறைந்து, நம் மனதை வசீகரிக்கும் காடுகள்' பல உள்ளன. எப்பொழுதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இந்த சென்னையின் பிஸியான வாழ்வு உங்களை சோர்வடைய வைக்கிறதா? ஒரு சின்ன பிரேக் எடுத்து சில்லென்று காற்று, மூடுபனி உங்களைத் தொடும்படி, மகிழ்ச்சியாக ட்ரெக்கிங் செய்து, நீர்வீழ்ச்சியில் ஆரவாரமாக குளித்து விட்டு வந்தால் எப்படி இருக்கும்? நினைக்கவே நன்றாக இருக்கிறது அல்லவா!

நாகலாபுரம் மலைகள்
சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும் ஊத்துக்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள நாகலாபுரம் நீர்வீழ்ச்சி சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய குட்டி ஹில் ஸ்டேஷன் என்றே சொல்லலாம். பேருந்து, ரயில் போன்ற வசதிகள் எல்லாமும் மிக தூரத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களில் வருவது மிக நல்லது. 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. சுற்றிலும் பசுமை, தூய்மையான நீர், சிறு சிறு குளங்கள் என பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இந்த சிறு குளங்களிலும் நீர்வீழ்ச்சியிலும் நீங்கள் இறங்கி குளிக்கலாம். நீர் மிகவும் இதமாக இருப்பதால் உங்களுக்கு அதைவிட்டு வெளி வரவே மனது இருக்காது.
காஞ்சனகிரி மலைகள்
சென்னையிலிருந்து வெறும் 100 கிமீ தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய இடம் சென்னை வாசிகளிடையே அதிகம் பிரபலம் ஆகாத இடம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமவெளிகளும், குன்றுகளும், மலைகளும் நாம் ஏதோ ஒரு ஹில் ஸ்டேஷனில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த இடத்திற்கு நீங்கள் பைக் அல்லது காரில் வருவதே மட்டுமே சாத்தியம். இந்த மலையில் எங்கு நின்றாலும் அழகிய காட்சிகளே கண்களுக்கு தென்படுகிறது. சாலையில் உங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு நீங்கள் மலையேற்றம் செய்யலாம். மலை உச்சியை அடைந்த பிறகு, நீங்கள் மலை ஏறிய களைப்பே தெரியாமல் போகும் அளவுக்கு அழகிய காட்சிகள் உங்கள் மனதை மயக்கிவிடும். இங்கு நீர்வீழ்ச்சி எதுவும் கிடையாது, ஆனால் இயற்கை அழகை பார்த்து ரசிக்க இது ஒரு சரியான ஸ்பாட் மக்களே! அதோடு மட்டுமில்லாமல் இங்கு இருக்கும் பழமையான சிவன் கோவில் மற்றும் மணிப்பாறை ஆகியவற்றை பார்த்துவிட்டு வாருங்கள்!

கைலாசகோனா நீர்வீழ்ச்சி
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கைலாசகோனா நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. நீங்கள் சென்னை, மாதவரம், ஊத்துக்கோட்டை வழியாகவோ அல்லது சென்னை, திருவள்ளூர், திருத்தணி வழியாகவோ இந்த நீர்வீழ்ச்சியை அடைந்திடலாம். இந்த பட்டியலிலே மிகவும் குறைந்த தூரம் ட்ரெக்கிங் கொண்ட இடம் இதுதான், ஆகையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டு பெரியவர்களை நீங்கள் இங்கு தாராளமாக அழைத்து வரலாம். வெறும் 200 மீட்டர் தூரத்திலேயே நீங்கள் நீர்வீழ்ச்சி பகுதியை அடைந்திடலாம். அருகே தடுப்பு போட்டு நாம் குளிப்பதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் எந்தவிட பயமும் இன்றி ஆனந்தமாக குளித்து மகிழலாம்.
மாமண்டூர் காடுகள்
சென்னை - கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மாமண்டூர் காடுகளை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரிய மரங்கள், தாவரங்கள், மூங்கில் காடுகள், பச்சை நிற தெளிந்த நீர், அழகான பாதைகள் என முழு இடமும் சொர்க்கத்தில் இருந்து நழுவி விழுந்த ஒரு சிறு துண்டு போல காட்சியளிக்கிறது. முற்றிலும் நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழலில் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகர வாசிகளுக்கு இந்த இடம் ஒரு வரப்பிரசாதம் தான்.

தடா நீர்வீழ்ச்சி
சென்னைக்கு மிக அருகில் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள தடா அல்லது உப்பலமடுகு என்றழைக்கப்படும் இந்த இடம் சென்னை வாசிகளிடையே மிகவும் பிரபலம். இந்த இடத்திற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன. வெறும் 70 ரூபாயில் நீங்கள் தடாவை அடைந்திடலாம். ஆனால் அங்கிருந்து நீங்கள் நீர்வீழ்ச்சியை அடைய ஷேர் ஆட்டோ அல்லது காரில் செல்லலாம். நீங்கள் சொந்த வாகனத்தில் செல்வது இன்னமும் நல்லது என்றே சொல்லலாம். பார்க்கிங்கில் உங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பிக்கலாம். இங்கே 3 விதமாக நீர்வீழ்ச்சிகளும் குளங்களும் இருக்கின்றன.
சதாசிவகோனா நீர்வீழ்ச்சி
சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சதாசிவகோனா நீர்வீழ்ச்சியை சென்னை-அம்பத்தூர்-திருவள்ளூர்-நகரி வழியே அடைந்திடலாம். நகரி வரை சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அங்கிருந்து நீங்கள் ஷேர் ஆட்டோ மூலம் நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை அடையலாம். ஆனாலும் பைக்கில் சென்றால் கூடுதல் நன்றாக இருக்கும். பயணிகள் எளிதாக நீர்வீழ்ச்சியை அடையும் வகையில் அம்புகுறிகளும், தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ட்ரெக்கிங் செய்வது சற்று சிரமம், ஆதலால் இங்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்வது சரியான முடிவல்ல. குறுகலான மலைப்பாதையில் சற்று தூரம் கடினமான ட்ரெக்கிங் செய்த பின்னர் நீங்கள் இரண்டு நீர்வீழ்ச்சிகளை காண முடியும். வந்த களைப்பு எதுவும் அந்த இடத்தை கண்டவுடன் காணமல் போகிறது.

கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில் இவ்வளவு மெனக்கெட்டு வந்த இடத்தில் அமர்ந்து ரசித்தால் தானே நன்றாக இருக்கும். குறிப்பாக இந்த இடங்களுக்கு நீங்கள் சீசன் காலங்களில் வர வேண்டும், அதாவது நவம்பர் முதல் பிப்ரவரி வரை. இடைப்பட்ட காலங்களிலும் இந்த இடங்கள் அழகாக இருக்கும் என்றாலும் சீசன் காலத்தில் கூடுதல் அழகாக இருப்பதுடன், நீர்வரத்து அதிகமாக உள்ளது.
உங்களுக்குள் தேங்கி இருக்கும் அழுத்தம் யாவையும் போக்க, நண்பர்களுடன் ஒரு ஜாலி பிக்னிக் செல்ல, காதலருடன் லாங் ரைடு செய்ய இந்த இடங்கள் எல்லாம் சரியான சாய்ஸ் மக்களே. சென்னைவாசிகளே, இந்த வார இறுதியே நீங்கள் திட்டமிடுங்கள்!



Click it and Unblock the Notifications





