தொல்பழங்காலம், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், சேரர், முற்கால சோழ, பாண்டியர், களப்பிரர்கள், பல்லவர்கள், பிற்கால சோழ பாண்டியர்கள், இசுலாமியர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள் இறுதியில் ஆங்கிலேயர்கள் என மிக நீண்ட வரலாறு கொண்ட தமிழின் வரலாற்று பொக்கிஷங்கள் சரியாக பராமரிப்பு இன்றியும், அறியாமையினாலும் அழித்தொழிக்கப்பட்டு வருகிறது.
ஆதிச்சநல்லூரிலும் சரி, கீழடியிலும் சரி ஏதோ ஒப்புக்காக அகழ்வாய்வு நடக்கிறதே தவிர தமிழரின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள மத்திய அரசுக்கும் துளியும் எண்ணமில்லை என்கின்றனர் தமிழ் விரும்பிகள் பலர்.
எல்லாவற்றையும் பற்றி பேசுகிறோமே ஆனால் உலகின் மிகப்பெரிய போர்களை வரிசைப்படுத்தினால் முதல் 3ல் ஒன்றாக திகழும் இந்த போர் பற்றி நாம் எத்தனை அறிந்து வைத்துள்ளோம். அந்த போரில் ஈடுபட்டது இருபெரும் தமிழ் வேந்தர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் அந்த வரலாற்று நிகழ்வு பற்றி தெரிந்து கொள்வோம்.
உலக வரலாற்றின் மிக முக்கிய போர்
பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடைபெற்ற இந்த போர்தான் உலக வரலாற்றுப்போர்களில் முக்கியமான ஒன்றாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு பிரம்மாண்ட போர் நடைபெற்றதே இல்லை. பாண்டியர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர். சோழர்களையே இந்த அளவுக்கு புகழும்போது பாண்டியர்கள் சோழர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் கட்டிடக்கலை, போர்க்கலை, மருத்துவக்கலை என பலவற்றில் சிறந்து விளங்கியிருந்தனர்.
எப்போது நடைபெற்றது தெரியுமா
2000 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் நிலப்பரப்பை ஆண்டவர்கள் பாண்டியர்கள்.
அவர்கள் படையெடுப்பை நடத்தி, அருகிலுள்ள நாடுகளைப் பிடிப்பது வெற்றிக்கான கோட்டைகளை அமைப்பது போன்றவற்றில் சோழர்களை மிஞ்சியும் ஈடுபட்டுவந்தனர்.
ராஜராஜ சோழனின் பாட்டனார் விஜயால சோழன் வீரமரணம் அடைந்த, மாபெரும் போர் நடந்த இடம் எது தெரியுமா?
திருப்புறம்பியம்..... வரலாற்றின் அசைக்கமுடியாத சாட்சியம்.....
எங்குள்ளது
தமிழ்கடவுளாக கருதப்படும் முருகனின் ஆறு பெரும் வீடுகளில் முக்கியமானதும், அப்பனுக்கு பாடம் சொல்லிய சுவாமி மலை முருகன் குடி கொண்டிருக்கும் அந்த மலையிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பியம்.
எப்படி செல்வது
சுவாமி மலையிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவ ஆலயம் ஆகும்.
அங்கிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த போர் வரலாற்று இடம்.
வயல்வெளிப் பாதை
வாகனம் செல்ல இயலாத வயல் மற்றும் காட்டு வழியில் நடந்து சென்றால் அங்கு சிறிய வகை மூங்கில் காடு. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஆலமரங்கள் சூழ அமைதியாக அமைந்திருந்தது அந்த கோயில்.
பலப்பரீட்சை
இந்த இடத்தில்தான் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் மிகப்பெரிய பலப்பரீட்சையே நடந்தது. பல்லவர்களுடன் ஆதித்த சோழனும் போரில் இணைந்தான்.
இந்த போரில் பாண்டியர்களை வென்றே ஆக வேண்டும். இல்லையென்றால் சோழ வம்சம் மீண்டும் தலையெடுக்க முடியாது என்ற எண்ணம் கொண்டிருந்தான் ஆதித்த சோழன்.
மிகபெரிய பாண்டிய வம்சம்
அந்த காலக்கட்டத்தில் பாண்டிய வம்சம் மிகவும் பெரியது. அப்பொழுது போர் மிகவும் கடுமையாக நடந்தது. இந்த யுத்தத்தில் பல்லாயிரம் வீரர்கள் கொண்ட படை மற்றும் யானைப் படை, குதிரைப்படை என்று கலந்துகொண்டன. போர் மிகவும் பிரம்மாண்டமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போர் வாட்டர்லூச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற போர்கள் போல வரலாற்று முக்கியம் பெற்ற சண்டைகளுக்கு இணையான போர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிகின்றனர் என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றியும் தோல்வியும் தமிழருக்கே...
தமிழர்களுக்கான ஒரே நிலப்பரப்பை பாண்டியர்களும், சோழர்களும், பல்லவர்களும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். அவர்களிடையே போர் நடைபெற்று ஒவ்வொருவர் வெற்றி பெற்றிருந்தாலும், இதனால் மிகப்பெரிய பொருளிழப்பை தமிழர்கள் சந்தித்துள்ளனர்,
முடிவுக்கு வந்த போர்
மூன்று நாள் உச்சக்கட்ட யுத்தம் சோழ, பல்லவ படைகள் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்தன. இனி பின் வாங்குதல் மட்டுமே முடிவு என்ற நிலையில், போர்களத்தின் நிலைமை அறிந்து, போரில் அடிபட்ட காயத்தால் நடக்க முடியாத மற்றும் முதுமையும் சேர்ந்து வாட்டிய நிலையிலும் சோழ மன்னன் விஜயால சோழன் போர்க்களம் வந்தார்.
வீரமரணம்
ராஜ ராஜ சோழனோட பாட்டனாரான விஜயால சோழன் யானைகள், குதிரைகள் என்று எதுவுமே இல்லாமல் 200 படை வீரர்களுடன் களம் காண்கிறான். தன்னை இருவர் தோள்களில் தூக்கி கொள்ள சொல்கிறார் அவர்கள் கீழே விழும் பட்சத்தில் அடுத்தடுத்த இருவர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள் ஏந்தி போர்முனைக்குள் சென்று எதிரிகளை கொன்று குவிக்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் விஜயால சோழன் வீர மரணம் அடைகிறார்.
நடுவண்கல்
இந்த போரில் விஜயால சோழன் மற்றும் போர் தளபதிக்கு இங்கே நடுவண்கல் வைக்கப்பட்டது. அந்த நடுவண்கற்களை கண்டதும் அந்த ஒரு நொடி போர்க்களத்தில் அந்த மாவீரன் கர்ஜிப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
அதன் அருகில் இருந்த சின்ன கோவிலில் கடைசியாய் வந்த ஒரு ஆய்வாளர் இந்த இடத்தில் நடந்த போர் பற்றியும் இடத்தின் வரலாறு பற்றியும் கோவில் சுவற்றில் எழுதி உள்ளார். அவையும் பாதி அழிந்த நிலையிலேதான் இருக்கின்றன.
அரசு செய்தது என்ன?
திருப்புறம்பியம் வரலாற்று இடத்தை இன்னமும் அரசு புணரமைக்கவோ, அகழ்வாயவோ முயற்சி செய்யவில்லை. ஏற்கனவே மத்திய அரசுகள் இருக்கின்ற தமிழர் வரலாற்றை மண்ணை அள்ளி கொட்டவே அவர்களுக்கு நேரம் பத்தவில்லை. இதுல இதுக்கலாம் நேரம் எங்கே இருக்க போகிறது என்று தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் உள்ளம் குமுறுகின்றனர்.
வெளிநாட்டில் என்ன நடக்குது?
வெளி நாடுகளில் வெறும் சில நூறு வருட பழைய பாரம்பரியம், போர் நடந்த இடம்னு அதை அருங்காட்சியகமா மாத்தி, சுற்றுலாவாசிகளை ஈர்க்கின்றனர். அதை அனைவரும் அறியும்படிச் செய்கின்றனர். இது எங்கள் வரலாற்று பெருமை என்று மார்தட்டிக்கொள்கின்றனர்.
ஆனால் நாம்
ஆனால் நாம் வரலாற்று நினைவிடத்தில் காதலர்களின் பெயர்களை கிறுக்கிக்கொண்டு இருக்கிறோம். இத்தனை ஆயிரம் பழைய வரலாறு என்பது எத்தனை இன மக்களுக்கு இருக்கு, இவ்ளோ பெரிய யுத்தம் நடந்த இடம், இங்கு அதிக ஆராய்ச்சிகள் பண்ணா நாம் வியக்கும் பல தகவல் கிடைக்கலாம். கட்டாயம் கிடைக்கும்.. அந்த அளவுக்கு நம் தொல்லியல் துறை சிறந்து விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
நாம் செய்யவேண்டியது என்ன?
அங்கே இருந்த ஒரு சிறிய கோவிலின் கூரையும் இடிந்தே உள்ளது, எந்த ஒரு அரசு அறிவிப்பும் இல்லை, அந்த இடத்தின் வரலாறும் இல்லை. எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு அப்படி ஒரு இடம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமல் ஆகிவிடும்.
ஆனால் நாம் நினைத்தால் நம் வரலாற்றுப் பெருமையை உலகறியச்செய்யமுடியும். திருப்புறம்பியம் தமிழர் வரலாற்றின் இன்னும் ஒரு சுவடு.. நாம் இதை ஒருவருக்குப் பகிர்ந்தாலே அது மிகவும் பெரிய வேலையாக நினைக்கிறோம்.. குறைந்த பட்சம் உரியோர் செவி கேட்கும்வரையாவது பகிர்வோமே...