'கலை' என்பது நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது. அது, பண்பாடு, வரலாறு, அழகியல் போன்றவை பாராட்டுதல், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு, உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

பிற உயிரினங்களில் இருந்து மனிதனை தனித்து காட்டுவது கலை, அதன் நுட்பம். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து, கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை என்றால் மிகையல்ல.
இத்தகைய கலை, நவீன நாகரீகத்தின் வளர்ச்சியால் கொஞ்சம், கொஞ்சம் தன் இயல்பை தொலைத்து வருவதோடு, மருவியும் வருகிறது. இருப்பினும், ஒரு சில கலைகள், பல நுாற்றாண்டுகளை கடந்தாலும், அதன் இயல்பையும், அதன் மீதான ஈர்ப்பையும், உள்ளூர் மட்டுமின்றி, உலக அளவிலும் இழக்கவில்லை.

அப்படிபட்ட ஒன்று காஷ்மீர் கைவினைப்பொருட்கள். இவற்றின் தோற்றம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இது, பல்வேறு பகுதிகள் மற்றும் கலாசாரங்களின் சங்கமத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, மத்திய ஆசியா மற்றும் பெர்சியா. காஷ்மீர் எம்பிராய்டரி கலை, 15 ஆம் நூற்றாண்டில் சுல்தான் ஜைன்-உல்-ஆபிதின் ஆட்சியின் போது, செழிக்கத் தொடங்கியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு கார்பெட் நெசவு, எம்பிராய்டரி போன்றவற்றில் பாரசீக கலைகளை அறிமுகப்படுத்தியதற்காக, சுல்தான் ஜைன் உள் ஆபிதின் அடிக்கடி புகழப்படுகிறார்; புகழப்பட்டும் வருகிறார்.
கலாசார பரிமாற்றம், காஷ்மீர் எம்பிராய்டரியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுல்தான் ஜைன் உள் ஆபிதின் சகாப்தத்தில் "கால் பாஃபி" (கையால் கட்டப்பட்ட தரைவிரிப்புகள்) அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, காஷ்மீரி கைவினைப் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறியது என்றால் எவராலும் மறுக்க முடியாது.
அட என்னங்க...! காஷ்மீர் என்றால் விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கும் பகுதி, இயற்கை பேரிடரை சந்திக்கும் இடம், கொள்ளை அழகை கொண்டிருக்கும் சுற்றுலா தலம் என்று தானே கேள்விப்பட்டு இருப்பீங்க. ஸாரிங்க ஒரு சிலருக்கு அந்த மாநிலத்தின் விஷயங்கள் எல்லாம் முழுமையாக தெரிந்து இருக்கலாம். அவங்க எல்லாம் உடனே போர்க்கொடி தூக்கிட்டு வந்துடாதீங்க.
சரி வாங்க கீழே உள்ள கொள்ளை அழகை தன்னுள் கொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலம் சார்ந்த விஷயம் சார்ந்து இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளை சிறிது நேரம் வாசிக்கலாம். வாங்க ப்ளீஸ்...!
முகலாயர் காலம், காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கான பொற்காலத்தைக் குறித்தது. பேரரசர் அக்பர் (1556-1605) காஷ்மீரி சால்வைகளை மிகவும் விரும்புபவராக இருந்தார். மேலும் அவர் "டோ-ஷல்லா" (இரட்டை சால்வைகள்) அணியும் பாணியை பிரபலப்படுத்தினார்.
முகலாயர்களின் ஆதரவு, தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள், சிக்கலான வடிவங்களை உள்ளடக்கிய எம்பிராய்டரி, சால்வை உருவாக்கும் நுட்பங்களை மேம்படுத்த வழிவகுத்தது. இந்த காலகட்டத்தில் பஷ்மினா சால்வைகள் செழித்து வளர்ந்தன. பல்வேறு உலோக வேலை நுட்பங்கள் அவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், காஷ்மீரி சால்வைகள் ஐரோப்பிய பிரபுக்கள், அரச குடும்பங்களை பெரிதும் கவர்ந்தன.நெப்போலியன் போனபார்டே, 200க்கும் மேற்பட்ட சால்வைகளை வாங்கி குவித்திருந்தாலும், தனது மனைவி ஜோசபினுக்கு ஒரு பஷ்மினா சால்வை பரிசளித்தது, அவர்களின் விருப்பத்தை எடுத்துக் காட்டுகிறது.
பின்னர், ஐரோப்பாவில் ஒரு ஃபேஷன் டிரெண்ட்டை தூண்டியது. அங்கு, காஷ்மீரி சால்வைகள் உயரடுக்கினர் மத்தியில் அந்தஸ்தின் அடையாளமாக மாறியது. விக்டோரியா மகாராணி மற்றும் பிற ஐரோப்பிய பிரபுக்களும், இந்த நேர்த்தியான சால்வைகளை விரும்பினர்; அவற்றை அந்தஸ்தின் அடையாளமாகவும் கருதினர்.
வரலாறு அறிவோம்...!
தலைமுறை தலைமுறையாக, இந்த கைவினைத்திறன் திறன்கள் குடும்பங்களுக்குள் கடத்தப்பட்டு வருகிறது. உழைப்பு மிகுந்த மற்றும் கலை ரீதியாக ஆழமான நுட்பங்களைப் பாதுகாப்பதையும் உறுதி செய்கிறது.
இந்த வரலாற்றுப் பயணம் ஒரு கைவினைப் பொருட்கள் உருவாக்கத்தின் தொடர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல; காஷ்மீரின் கலாசார மற்றும் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பைப் பற்றியது. இது, இந்த கலை மரபுகளுடன் நுணுக்கமாகவும் பிணைக்கப்பட்டுள்ளது.
சவால்களை கண்ட கலை
காஷ்மீரி கைவினைப் பொருட்களின் பயணம் பல சவால்களைக் கண்டது. குறிப்பாக, வேகமான நாகரீகத்தின் எழுச்சி, கைவினைக் கலைத்திறன் மீதான மதிப்பு குறைவதை, நாம் கண்டு வருகிறோம்.
இருப்பினும், இந்த பாரம்பரியத்தை புத்துயிர் பெறுவதிலும், நிலைநிறுத்துவதற்கும் அர்ப்பணிப்பு கொண்ட பல தளங்கள், அவற்றின் முன்முயற்சிகளும் முக்கியமானவை. தொழில்நுட்பத்தின் வருகை காஷ்மீரி கைவினைப் பொருட்களில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இ-காமர்ஸ் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உலகளாவிய அணுகலை செயல்படுத்தி, காஷ்மீரில் இருந்து நேரடியாக வாங்குபவர்களை பொருட்களை சென்றடைய அனுமதிப்பதன் வாயிலாக, இந்த கைவினைப்பொருட்களுக்கான சந்தையை விரிவுப்படுத்தி, எதிர்மறையான தாக்கம் உருவாகாதவாறு வைத்து கொள்கின்றனர் காஷ்மீரில் வாழும் கலைஞர்கள். தொழில்நுட்ப மாற்றம் விற்பனை மற்றும் வெளிப்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.
தொழில்நுட்பத்தின் தாக்கம்
புதிய கருவிகள் மற்றும் நுட்பங்களின் அறிமுகம் கைவினைஞர்களிடையே, கூடுதலாக திறன் மேம்பாட்டை எளிதாக்குகிறது. பட்டறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் வாயிலாக, கைவினைஞர்கள் தங்கள் கைவினைத்திறனை மேம்படுத்துவதற்கும், புதுமையான முறைகளைப் பின்பற்றுவதற்கும் உதவி வருகிறது. அதே நேரத்தில் அவர்களின் வேலையின் பாரம்பரிய சாரத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
இ-காமர்ஸ் கடைகளை அமைப்பதும், நிர்வகிப்பதில் உள்ள எளிமை, காஷ்மீரி தொழில்முனைவோருக்கு, உலகளாவிய அணுகலை எளிதாக வழங்கியுள்ளது. இ-காமர்ஸ் செயல்பாடுகளை அமைப்பதற்கும், இயக்குவதற்கும், இந்த எளிமை, மேலும் காஷ்மீர் தொழில்முனைவோரை அவர்களின் பாதையைத் தொடர ஊக்குவிக்கும். இது, தொழில்துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
டிஜிட்டல் துறையில் உள்ள புரட்சியாலும், அவற்றின் வாயிலாக கதைசொல்லல் காஷ்மீரி கைவினைஞர்களின் பார்வையை கணிசமாக உயர்த்தியுள்ளது. காஷ்மீரி எம்பிராய்டரியின் வரலாறு மற்றும் ஒவ்வொரு துண்டுக்குப் பின்னும் உள்ள நுட்பமான செயல்முறையைக் காண்பிப்பதன் மூலம், கைவினைஞர்கள் பார்வையாளர்களுடன் ஆழ்ந்த உணர்ச்சித் தொடர்பை உருவாக்க முடிகிறது.
இதன் வாயிலாக, சிக்கலான திறன்களைக் கொண்டு பார்வையாளர்களை ஈர்க்கிறது, வாங்கும் அனுபவத்தை வளப்படுத்துகிறது. மேலும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் பொருட்களை செய்த கலைஞர்களின் கலைத்திறனை பாராட்ட ஒரு தளமாக இயங்குகிறது.
காஷ்மீரி கைவினைப்பொருட்களை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்வதோடு, அவர்களின் சொந்தக் கதைகளைச் சொல்ல கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட தொடர்பை வளர்க்கிறது.
டிஜிட்டல் கதைசொல்லல் வாடிக்கையாளர்களுக்கு காஷ்மீரி கைவினைகளின் நுணுக்கங்கள், வெவ்வேறு வடிவங்களின் முக்கியத்துவம் மற்றும் வளமான கலாசார பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றி, கூடுதலாக கற்பிக்க ஊன்று கோலாக இருக்கிறது தொழில்நுட்ப புரட்சி. அதுமட்டுமின்றி, கலை வடிவங்களுக்கும், அவற்றை செய்யும் கலைஞர்களுக்கு அதிக பாராட்டு, மரியாதையையும் வளர்க்கிறது.
இந்த புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், அவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலால் வலுப்படுத்தப்படுகிறது. புதிய பார்வையாளர்களை சென்றடைவதற்கும், இந்த கலை வடிவங்களின் கலாசார முக்கியத்துவம் மற்றும் சிக்கலான கைவினைத்திறன் பற்றி வாடிக்கையாளர்களுக்கு கல்வி கற்பதற்கும், மின் வணிக தளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பரந்துபட்ட வாய்ப்பை எட்டிப்பிடிக்க அனுமதிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆர்வத்தின் அளவு, இன்னும் பொருந்தவில்லை என்றாலும், இந்த மாற்றம் காஷ்மீரி கைவினைப் பொருட்களின் எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கப் புள்ளியை பதிவிட்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
காஷ்மீரி கைவினைப்பொருட்கள் விலை உயர்ந்ததாக இருப்பதால், அதிக வாங்கும் திறன் சமநிலை (PPP) கொண்ட சந்தைகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் கணிசமான வாங்கும் திறன் கொண்ட பெரிய தெற்காசிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, பாரம்பரிய காஷ்மீரி பொருட்களுக்கான தேவைக்கு பங்களிக்கிறது.
அதுமட்டுமில்ல ஐரோப்பாவும் ஒரு மதிப்புமிக்க சந்தையாகும். ஆனால் மத்திய கிழக்கிலிருந்து நிறைய வணிகங்கள் வருகின்றன. அரபு ஆண்களுக்கான பாரம்பரிய தலைக்கவசம், ஷேமாக் என்று அழைக்கப்படுகிறது. இது தூய பாஷ்மினாவால் ஆனது, சோஸ்னி எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர கைவினைத்திறன் வசதியான நபர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஒரு இலாபகரமான சந்தையாகவும் அமைந்துள்ளது.
நம் முன்னோர்கள், படிக்காதவர்கள் தான் அதற்காக அவர்கள் முட்டாள்கள் அல்ல. பல அரிய கலை, அவற்றின் நுட்பம் சார்ந்த விஷயங்களை நம்முள் விட்டு சென்றுள்ளனர். அவற்றை நம் தலைமுறைக்கு அதே நேர்த்தி, நுட்பத்துடன் கடத்துவது ஒன்றே நாம் அவர்களுக்கு வழங்கும் மரியாதை ஆகும்.
காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் போதும், நம்மால் முடிந்த நேர்த்தியான ஒரு கைவினைப்பொருட்களை வாங்கி, நம் சார்ந்த நட்புகளுக்கு பரிசாக வழங்கி, காஷ்மீரி கைவினைப்பொருட்களின் நேர்த்தியான கலை நுட்பத்தை, நம் நட்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நேர்த்தியான கலை நுட்பங்கள், படைப்புகள் பற்றி நம்மை அறியாமலே மெல்ல மெல்ல வளரவும், அவற்றை பற்றி கடத்தவும், உறுதுணையாக இருக்கும் ஒரு புள்ளியாக விளங்குவோம். காஷ்மீர் கைவினைப்பொருட்கள் மட்டுமில்ல... தென்னிந்தியாவில் உள்ள பல கலை, கைவினைப்பொருட்களை ஊக்குவிக்க நம்மால் முடிந்தவற்றை செய்யலாமே...



Click it and Unblock the Notifications




