யாராவது நம்மிடம் ஒரு விஷயத்தை மறைத்தால், உடனே நாம் 'ஆமா, இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா?' என்று கேட்போம். இப்படி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தை 'சிதம்பர ரகசியம்'. ஆனால் இந்த ரகசியத்தின் முழு அர்த்தத்தையும் உணர்ந்தவர் ஒரு சிலர் மட்டுமே. அது என்ன சிதம்பர ரகசியம் என்று நாமும் இன்று தெரிந்துக் கொள்வோம்!
கட்டிட அமைப்போ, பொன், பொருளோ அல்ல சிதம்பர ரகசியம்
சிதம்பர ரகசியம் என்ற பெயரில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை பற்றிய செய்திகளை பலரும் கூறி வருகின்றனர். சிதம்பர கோவிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு, அறிவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களை பெரும்பாலான மக்கள் சிதம்பர ரகசியம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ சிதம்பர கோவிலுக்குள் யாரும் தெரியாத விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் இருப்பதாகவும் அவையே சிதம்பர ரகசியம் என்றும் கூறுகின்றனர்.

சிவபெருமான் தான் அந்த சிதம்பர ரகசியமா?
இந்து சமய நூட்களின் படி தை மாதத்தில் ஒரு நாள் சிவபெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் தில்லை கோவிலுக்கு வருகை தருகிறார். ஆனந்த தாண்டவமாக காட்சி தருவதற்காக தில்லை நோக்கி வந்த சிவபெருமானின் 3000 பூதகணங்களில் 2999 பூதகணங்கள் ஒரு இடத்தில் இருந்தன. ஒரேயொரு பூதகணத்தை மட்டும் காணவில்லை, அதே போல எங்கு தேடியும் கிடைக்கவும் இல்லை. அப்போது அது நான் தான் நடராஜர் என்று அசரீரி கேட்டதாக கூறுகிறது. அப்படி பார்த்தல் சிதம்பர கோவிலில் நீக்கமற நிறைந்துள்ள சிவபெருமான் தான் அந்த ரகசியம் என்று சிலர் கூறுகின்றனர்.
சிதம்பர கோவிலில் ரகசிய பீடம்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது.

எந்த உருவமும் இருக்காது
திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில் உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட 'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும் காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.
ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது
ஆகாய உருவத்தில் இறைவன் மூர்த்தி ஒன்றும் இல்லாமல் வில்வ தளம் தொங்குவதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும், முதலும் இல்லாமல் இருக்கின்றார் என்பது தான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணர மட்டுமே முடியும் என்பதே இதன் முழு அர்த்தம். இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டி கொண்டு திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால் நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும்.

மனக்கண்ணால் உணர்வதே சிதம்பர ரகசியம்
உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம். சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும். மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்' என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம். அருவ வடிவமாக, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும். இப்படி ஞான நிலையில் சிவனை அடைவதே சிதம்பர ரகசியம்!



Click it and Unblock the Notifications





