தாஜ் மகால், இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். முழுவதும் பளிங்கு கற்களாலான இக்கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.
காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. இக்கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது என்ற வரலாறு நமக்கு எல்லாம் தெரியும். காதலர்களும், வரலாற்றை நேசிப்பவர்களும், ஒரு முறையாவது காதல் சின்னத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அப்படி போக முடியவில்லை என்று வருத்தப்படாதீங்க...! தமிழகத்தில் உள்ள தாஜ்மஹாலை போய் பாருங்கள்.
ஹலோ, உங்களுக்கு ஏதாவது மண்டையில் கோளாறு? என்று கேட்பது புரிகிறது. தாஜ்மஹால் என்ன தமிழகத்தில் உள்ளது? உளறாதீங்கனு சொல்வதும் கேட்கிறது. எப்படி தன் மனைவியின் நினைவாக வெள்ளை பளிங்கு கோட்டையை, முகலாய மன்னன் ஷாஜகான் கட்டினாரோ... அதை போல தன் தாயின் நினைவாக அவரது மகன், மணிமண்டபம் கட்டி உள்ளார். இந்த மணிமண்டபத்தை, 'தென்னகத்தின் தாஜ்மஹால்' என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு தாஜ்மஹாலை போன்று காட்சியளிக்கிறது.

இடம் அறிவோம்?
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் கிராமத்தில் அமுர்தீன் என்பவரின் தாயார் ஜெய்லானி பீவியின் நினைவிடம், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 8 ஆயிரம் சதுர அடி அகலத்திலும், 46 அடி உயரத்திலும் மினார் அமைக்கப்பட்டு உள்ளது.
நினைவிடத்தில் அமுர்தீன் தன் தாயாரின் ஜிம்மா மசூதியும், அதன் ஒரு புறம் பிரமாண்டமான பள்ளிவாசல், மறுபுறம் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் மதரஸா பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது.
'தாஜ்மஹால்' போன்ற வடிவமைப்பு உருவானது எப்படி?
அமுர்தீனின் அம்மாவுக்கு, முகமது அப்துல் கான் என்ற ஒரு வளர்ப்பு மகனும் இருக்கிறார். அவரும் அமுர்தீனும் இணைந்தே தொழில் செய்து வருகிறார். தாஜ்மஹால் போலக் காட்சியளிக்கும் இந்த நினைவிடத்தின் கட்டுமானத்திற்கான வடிவமைப்பு, திட்டமிடலை, அமுர்தீனும், அவரது உடன்பிறவா சகோதரரும் இணைந்தே தேர்வு செய்துள்ளனர்.
அம்மாவுக்கான நினைவிடத்தை அமைப்பதற்கு திருச்சியைச் சேர்ந்த ஒரு கட்டடக் கலை நிறுவனத்தை தேர்வு செய்து, அம்மாவின் நினைவிடம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதை உள்வாங்கிய கட்டடக் கலை நிறுவனத்தினர், ஒரு நினைவிட மாதிரியை வடிவமைத்து அனுப்பியுள்ளனர். அந்த மாதிரி வடிவம், அண்ணன், தம்பிக்கு மிகவும் பிடித்து போனது. அதற்கு காரணம், ஒருபுறம் அது பார்ப்பதற்கு தாஜ்மஹால் போல இருந்தது என்பதே.

வெள்ளை கற்கள் தேர்வு ஏன்?
தாயின் வெள்ளை மனதை பிரதிபலிக்கும் விதமாக, நினைவிடத்தை பளிங்கு கற்களைத் தேர்வு செய்து கட்டப்பட்டுள்ளது. கட்டடத்துக்கு இத்தாலிய பளிங்கு கற்களைவிட, இந்திய பளிங்கு கற்கள்தான் சிறப்பானதாக இருக்கும் என்ற கட்டுமான நிறுவன அறிவுறுத்தலை ஏற்று,ராஜஸ்தானில் இருந்து, பிரத்யேகமாக வெள்ளை நிற பளிங்கு கற்களை வரவழைத்து, அமுர்தீன் மற்றும் அவரது சகோதரர், தன் தாய் நினைவாக இந்த தாஜ்மஹாலை செதுக்கியுள்ளனர்.
நினைவிடத்தின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதி ஆகிய இரண்டுமே ஒன்று போல் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த தாஜ்மஹாலை, ராஜஸ்தான், பிகார், ஹரியானா ஆகிய பகுதிகளிலிருந்து பிரத்யேக கட்டட கலைஞர்களை வரவழைத்து, 5 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஆண்டுகளாக கட்டியுள்ளார் அமுர்தீன்.
தாயின் நினைவிடம் 'தாஜ்மஹால்' போன்ற அமைப்பைப் பெற்றது மிகவும் தற்செயலானது; அம்மாவின் நினைவாக நினைவிடம் ஒன்றை உருவாக்க நினைத்தோம்; கட்டடப் பணி தொடங்கிய பிறகு, இது ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்க வேண்டுமென்ற எண்ணம், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடமும் இருந்தது.
ஆனால், அதை தாஜ்மஹால் போல் அமைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை என்று கூறுகின்றனர் அமுர்தீன் மற்றும் அவரது சகோதரர். குடும்பத்தின் அச்சாணியாக திகழ்ந்த ஜெய்லானி பீவி, கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் திடீர் மறைவு, எங்கள் குடும்பத்தின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் சகோதரர்கள், தாயின் நினைவாக இந்த நினைவிடத்தை கட்டியுள்ளனர்.
எப்படி செல்வது
சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ., தொலைவில் உள்ள திருவாரூர் மாவட்டத்துக்கு சென்றால், தன் தாய்க்கு என கட்டிய, இந்த வெள்ளை மாளிகையை காணலாம். எவ்வித கட்டணமும் இன்றி, இந்த தென்னக தாஜ்மஹாலை காணலாம் என்பது கூடுதல் சிறப்பு.
நாங்கள் இந்த வெள்ளை மாளிகையை பார்க்க போனோம்; ஆனால் எப்படி தாஜ்மஹால் உடன் இந்த நினைவிடத்தை ஒப்பீடு செய்தீர்கள் என, திட்ட துவங்கிடாதீங்க... ஹலோ முதலில் சொல்லிட்டேன்; தாஜ்மஹாலின் மாதிரி தான்.
அண்மையில் சொத்துக்காக தன் தந்தையை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியானது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற மகன்கள் வாழும் புன்னிய பூமியில், தன் தாயின் நினைவாக கட்டப்பட்ட தென்னக தாஜ்மஹாலின் அழகையும், மகன்களின் அர்ப்பணிப்பையும் ஒரு முறையாவது பார்த்து விட்டு, பாராட்டலாம் என்ற எண்ணத்தில் தான் இந்த கிறுக்கல்கள்.



Click it and Unblock the Notifications





