கலியுக வரதனாக பூமியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பதி ஏழுமலையானின் மவுசு உலகம் இருக்கும் வரையில் மங்காது. ஆனால், இந்தியாவின் பணக்கார கோயிலாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலை பின்னுக்கு தள்ளி அயோத்தியை இந்தியாவின் பணக்கார கோயிலாக மாற்ற அயோத்தியை சுற்றி வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன! கட்டமைப்பு, வசதிகள், பக்தர்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் என எல்லாவற்றிலும் திருப்பதியை முந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவாம் தெரியுமா மக்களே?
இந்தியாவின் பணக்கார கடவுள் - திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 2.5 கோடிக்கும் அதிகமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவிட்-19க்கு முன் ரூ.1,200 கோடியிலிருந்து 2023ஆம் ஆண்டில் ரூ.1613 கோடியாக அதிகரித்துள்ளது. இது வெறும் உண்டி காணிக்கை மட்டும் தான், இவை அல்லாமல், நன்கொடை, லட்டு விற்பனை, சுவாமி பொருட்கள் விற்பனை, சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் என பல ஆயிரக்கணக்கான கோடிகள் திருப்பதி ஏழுமலையான் காலடியில் கொட்டுகின்றன.

சுற்றுலாப் பயணிகளால் வருவாய் ஈட்டும் உத்தரப்பிரதேசம்
செல்வம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில், அயோத்தி திருப்பதியை விட பெரியதாக மாறக்கூடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாநில அரசின் மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில் சுமார் 32 கோடி சுற்றுலாப் பயணிகள், அயோத்தியில் மட்டும் 2.21 கோடி பேர் வருகை தந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகளின் மொத்த செலவு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளின் வருவாயை மிஞ்சப் போகும் உத்தரப்பிரதேசம்
2027ஆம் ஆண்டுக்குள் நார்வே மற்றும் ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உற்பத்தியை உத்தரபிரதேசம் விஞ்சும் நிலையில் உள்ளது, இது இந்தியாவின் உலகளாவிய பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக அயோத்தி ராமர் கோயிலின் வருவாய் இருக்கும் என அறிக்கைகள் கூறுகின்றன.

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட ஐந்தாவது மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு கூடுதலாக ரூ.10,500 கோடி பங்களித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அயோத்திக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பல பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களை பின்னுக்கு தள்ளும்
இதைவிட முக்கியமாக அயோத்தி ராமர் கோயில் மற்றும் அயோத்தி சுற்றுலா துறையின் மூலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் எஸ்பிஐ ரிசர்ச் ஆய்வறிக்கை கூறியுள்ளது. மேலும் சர்வதேச பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஜெப்ரீஸ் தனது ஆய்வறிக்கையில் பக்தர்கள் வருகை எண்ணிக்கையில் அயோத்தி ராமர் கோயில் வாடிகன் நகரம் மற்றும் மெக்கா ஆகியவற்றைத் தாண்டும் எனக் கூறியுள்ளது.

ஏற்கனவே 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிஸினஸ்
இதன் மூலம் அயோத்தி ராமர் கோயில் வருவாய் அளவில் மெக்கா, வாடிகன் நகரத்தை முந்த முடியாவிட்டாலும், பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டாயம் ஓரம்கட்டும் எனக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் வாயிலாகவும், இக்கோயிலை சார்ந்தும் வருடம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உருவாக்க உள்ளது. ஏற்கனவே 2.26 லட்ச கோடிகளுடன் திருப்பதி கோயில் இந்தியாவின் பணக்கார கோயிலாக உள்ளது. இதனை முந்துமா அயோத்தி?
திருப்பதியை பின்னுக்குத் தள்ளுமா அயோத்தி
ஏற்கனவே கேதார்நாத், ரிஷிகேஷ், துவாரகா, மதுரா, காசி விஸ்வநாதர், வைஷ்ணவ தேவி என பல கோயில்கள் வட இந்தியாவில் இருந்தாலும், எந்த கோயிலும் இன்று வரை திருப்பதியின் பெயர் மற்றும் புகழை அடைந்தது இல்லை. அயோத்தியை திருப்பதியை விட பெரிதாக்க வேண்டும் என்கிற செயல் உண்மையில் ஜெயிக்குமா? எல்லாம் அந்த ஏழுமலையானுக்கு தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்!



Click it and Unblock the Notifications





