நேஷனல் ஜாக்ரபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில் 'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடவுளின் சொந்த தேசமென்று அறியப்படும் கேரள மாநிலத்தில் எக்கச்சமான அழகிய சுற்றுலாப் பகுதிகள் நிறைந்துள்ளன. பாம்பே படத்தில் 'அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டேனே' என்று ஒரு பாடலை கேட்டிருப்பீர்கள்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போல கேரள கடற்கரைகள் உலக கடற்கரைகளின் அழகோடு போட்டி போடக்கூடியவை. அதிலும் ஒரு சில முக்கியமான கடற்கரைகளை நீங்கள் கேரளா வரும்போது கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது.

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்
இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது. மேலும் தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டி 200 மீட்டர் தூரத்தில் இருப்பதால் பயணிகள் அங்கு சென்று அமைதியாக ஓய்வெடுக்கலாம்.

வர்கலா பீச், வர்கலா
வர்கலா பீச் திருவனந்தபுரத்திலிருந்து 54கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இங்கு ஜனார்தன ஸ்வாமி கோயில் எனும் 2000 வருட பழமையை கொண்ட அற்புதமான கோயில் ஒன்று உள்ளது. அதோடு சரும வியாதிகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் கொண்ட நீரூற்று ஒன்றும் இப்பகுதியில் காணப்படுகிறது. இந்த கடற்கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களுக்கு மத்தியில் கைப்பந்து விளையாட்டு, நீச்சல், அலைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் இங்கு இஸ்ரேலி, சைனீஸ், இத்தாலியன் மற்றும் சர்வதேச உணவு தயாரிப்புகளை பரிமாறும் கஃபேக்கள் நிரம்பியுள்ளன.

கப்பட் பீச், கோழிக்கோடு
கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது கப்பட் பீச். இதன் புகழுக்கு காரணம் போர்த்துகீசிய கடற்பயணி ‘வாஸ்கோட காமா' 1498-ஆம் இந்தியா வந்தபோது முதன் முதலாக இங்குதான் வந்து இறங்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த கடற்கரையில் கடல் நீரை தொட்டுக்கொண்டு 800 வருடங்கள் பழமையான ஒரு கோயில் அமைந்திருக்கிறது. அதோடு கப்பட் பீச் ஆயுர்வேத சிகிச்சைக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் ஏராளமான ரிசார்ட் விடுதிகளும் இந்த கடற்கரையில் ஏராளம் உள்ளன.

ஆலெப்பி பீச் - ஆலப்புழா
ஆலெப்பி பீச் நகர மையத்திலேயே ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் அரை கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த கடற்கரை முழுக்க தென்னை மரங்கள் சூழ அட்டகாச அழகுடன் காட்சியளிக்கிறது. அதோடு படகு மூலம் இந்த கடற்கரை பகுதியிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே உள்ள தீவுப்பூங்காவுக்கு சென்று ரசிப்பதுடன், அங்குள்ள ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி கீழே காட்சியளிக்கும் இயற்கை அழகை ரசித்து மகிழலாம். இதற்காக ஒரு சிறு தொகையே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கோவளம்
கோவளத்தின் 3 முக்கிய கடற்கரைகளாக சமுத்ரா பீச், ஹவா பீச், லைட் ஹவுஸ் பீச் ஆகியவை அறியப்படுகின்றன. இந்த கடற்கரைகள் மூன்றும் அடுத்தடுத்து ஒரே கடலோரப் பகுதியில் அமைந்திருக்கின்றன. இதில் மற்ற இரண்டை விட சமுத்ரா பீச்சில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படும். அதேவேளையில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் இரவு வேளையில் கலங்கரை விளக்கின் ஒளியில் மிக அழகாக காட்சி தரும் லைட் ஹவுஸ் பீச்சை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது. லைட் ஹவுஸ் பீச்சுக்கு மறுபுறம் ஹவா பீச் அமைந்துள்ளது. இங்கு அந்த காலங்களில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபட்டு வந்தார்களாம்!!

பேக்கல் பீச், பேக்கல்
பேக்கல் பீச் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 550 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு பேக்கல் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள பேக்கல் கோட்டையில் திரைப்படங்கள் அதிகமாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. மணிரத்னத்தின் உயிரே படத்தின் ஒரு பாடல் கட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பூவார் பீச், பூவார்
பூவார் பீச்சில் நண்டுகள் குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருப்பதையும், மண்ணில் துளைபோட்டு கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு இருப்பதே அலாதியான அனுபவமாக இருக்கும். பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றும் சங்கமமாகும் அபூர்வ காட்சியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கடற்கரை திருவனந்தபுரத்துக்கு அருகில் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications







