ஆனால், இங்கு மட்டும் ஆறு முகங்களுடனும், 12 கரங்களுடனும் வித்யாசமாகவும், விஸ்வரூபமாகவும் காட்சி கொடுக்கிறார் முருகன்.
நுழைவு வாயிலை கடந்து, இடது புறத்தில் 16 அடி உயரமுள்ள லிங்க வடிவிலான பீடம். அதனடியில் லிங்கேஸ்வர கணபதி, நமது கவலையை போக்க அருள்பாலிக்கிறார். இவரை வலம் வருகிறபோது, வாழ்க்கை சிறக்க குரு தட்சழணாமூர்த்தியைக் காணலாம்.
கந்தனை எண்ணியவாறு உள்ளே செல்லும்போது, வானளாவிய விஸ்வரூப ஆறுமுகத்துடன் பன்னிரெண்டு கரங்களால் பக்தர்களைக் காத்து, ஆறு திசைகளிலும் தன் அருட்பார்வையை நமக்கு அளிக்கின்றார் விஸ்வரூப முருகப் பெருமான்.
புண்ணியம் கிடைக்கும்
மனம் உருகி வேண்டினால் விளைநீக்கி விடியலைத் தந்து, சத்துரு பிரச்னைகளைப் போக்கி சந்தோஷம் அளிக்கும் சரவணபுரத்தில் குடிபுகுந்து இருக்கிறார் கடவுள் முருகப்பெருமான். 81 அடி உயரத்திலிருந்து அபிஷேகம் தீர்த்தம் நம் சிரசு மீது கொட்டும் போது, பாவம் தொலையும் புண்ணியம் கிடைக்கும்.

கருவறையில் பலமாநில மடாதிபதிகளால் வேதபாராயணங்கள் சரவணபவ மூல மந்திரங்களால் உருவேற்றப்பட்ட பீடத்தில் ஆறு அடி உயர சக்தி வாய்ந்த ஆறுமுகப் பெருமான் வேலோடும், சேவல் கொடியோடும் காட்சியளித்து கருணை பொழிகிறார். கருவறையில், முருக உபாசகரும், ஸ்தாபகருமான ஸ்ரீ ஆறுமுக அடிகளார் விடியல் சின்னத்தம்பி ஸ்வாமிகள், அவரது திருக்கரங்களால் அபிஷேகம், ஆராதனை நித்திய பூஜை நடைபெறுகிறது.
16 வகையான அவதாரம்
மலைபோல் தோற்றமுள்ள குகைக்குள் 102 அடி வலம் வரும் போது, 16 செல்வங்களை வழங்கும் வகையில் 16 வகை அவதார முருகப் பெருமானை காணலாம். முருகன் ஆலயத்தில், வேறு எங்கும் காணாத வகையில், ஸ்ரீ வராகி அம்மன், ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி, ஸ்ரீ சர்வேஸ்வரர், ஸ்ரீ பூவராகவர், ஸ்ரீ வீர ஆஞ்சனேயர், ஸ்ரீ அய்யப்பன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ குருலிங்கம், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ கடம்பன், ஸ்ரீ அருள்சக்தி அம்மன், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, தம்பதிகளோடு நவகிரக பீடம், அருள்ஜோதி வள்ளலார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.
பங்குனி உத்தரம்-தைப்பூசம்-வைகாசி விசாகம்-ஆடிக்கிருத்திகை-போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், காவடி ஊர்வலமும்-திருத்தேர் பவனியும் அன்னதானமும் நடைபெறுகிறது.
எப்படி செல்வது...!
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூர், திருவண்ணாமலை கூட்டு சாலையில் (சு.குளத்தூர்) சரவணபுரத்தில், இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலுாரில் இருந்து ஐந்து கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications





