திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் என்றதும் அறுபடை வீடுகள் மட்டுமே புகழ்பெற்றதாக இருந்த நிலையில் தற்போது எட்டுக்குடி முருகன் கோவிலும் பரவலாக அறியப்படக் காரணம் இத்தல முருகனின் உடலில் இருந்து வெளியேரும் இரத்தமே. இவை எதற்கான அறிகுறி ? இத்தல சிறப்புகள் என்ன என தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.
எட்டுக்குடி
திருவாரூர் மாவட்டம், திருவாய்மூருக்கும், திருக்குவலைக்கும் இடையே அமைந்துள்ள பகுதிதான் எட்டுக்குடி வட்டம். திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டிணம் மாநில தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் திருவாய்மூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். இதன் அருகருகே பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு திருவாய்மூர் லிங்கம் கோவில், வாய்முருநாதர் திருத்தலமும் அமைந்துள்ளது.
சூரா சம்ஹார தலம்
எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் அmவரின் கோபத்தை தனிக்கும் வகையில் தினந்தோறும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களின் திருவுருவமும் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இத்தலத்தில் இருந்தே புறப்பட்டதாக நம்பப்படுகிறது.
வான்மீகர் ஜீவசமாதி
பழங்கால சித்தர்களில் ஒருவரான வான்மிக சித்தருக்கு எட்டுக்குடி முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார் சித்தர். வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார். வான்மீகரைப் பற்றி சித்தர் போகர் பாடியுள்ளதால் இவரும் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதி சோழ மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போது, தன் நாட்டைக் காக்கும் வகையில் முருகன் சிலையை வடிவமைக்கும் படி சிற்பிக்கு உத்தரவிட்டார். சிற்பியும் கலைநயமிக்க முருகனை சிலையாக வடிவமைத்துக் கொடுத்தார். மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதேப் போன்று இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார்.
உயிர்த்தெழுந்த முருகன்
கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே முருக பெருமானை வேண்டி மீண்டும் ஒரு சிலையை உருவாக்கினார். அச்சிலை மிக உயிர்த்துடிப்புடன் அமைந்து, ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலையும் உண்டானது.
உயிர்பெற்ற மயில் வாகனம்
திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, எட்டிப்பிடி எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர். சிறப்புபெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். பின்னாளில் எட்டிப்பிடி என்ற அந்த வார்த்தையே எட்டுக்குடி என்று மருவியதாக வரலாறு.
உருமாறும் கந்தன்
பொதுவாகவே முரகனின் காட்சியானது ஏதோ ஒருவித இனம் புரியா உணர்வை ஏற்படுத்தும். முருகன் காட்சி தரும் அழகு அனைவரலாறும் விரும்பத்தக்க ஒன்று. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் முருகனின் மீது அலாவதியான அன்பிருக்கும். இத்தல முருகப் பெருமான் தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி அருள்கிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக பார்த்தால் முதியவனாகவும் காட்சி புரிவதாக பக்தர்களால் கூறப்படுகிறது.
பரிகாரத் தலம்
எட்டுக்குடி முருகரை தரிசித்து அவருக்கு மலர் மாலைச் சூடி வேண்டினால் வறுமை நீங்கும். முருகனின் திருவுருவத்தில் சந்தனம் பூசி வழிபட்டால் உடல் நலம் பெருகும். குடும்பத்தில் பிரச்சனை நிலவுபவர்கள் இத்தல முருகனுக்கு புது வஸ்திரம் வழங்கி வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான நிகழ்வுகள் அரங்கேறும் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது.
இரத்த ஓட்டம் கொண்ட முருகன்
இத்தலத்திற்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால் எட்டுக்குடி முருகன் திருவுருவத்தில் இருந்து வெளியேறும் இரத்தமே. கட்டை விரல் வெட்டப்பட்ட சிற்பி அடுத்த முருகன் சிலையை வடிவமைக்க உயிர் ஓட்டமிக்க கல்லை தேர்வு செய்தார். அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார். அப்போது இக்கிராமத்தை ஆண்டுவந்த முத்தரசன் என்ற குறுநில மன்னன் அச்சிலையைப் பார்வையிட்டார். முருகனே நேரில் நிர்ப்பது போல தோற்றம் கொண்ட அந்த முருகன் சிலைக்கு அங்கேயே கோவிலைக் கட்டினார். இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோவிலில் இன்றும் உள்ளது. தற்போதும், அச்சிலையில் இருந்து இரத்தம் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.
Benjamín Preciado
எப்படிச் செல்வது ?
சென்னையில் இருந்து 332 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். தஞ்சாவூர், திருச்சி, சென்னை, மதுரை என மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருவாரூரை அடைய பேருந்து வசதிகள் உள்ளன. ரயில் மூலமாகவும் திருவாரூரை வந்தடையலாம். ரயில் நிலையத்தில் அங்கிருந்து எட்டுக்குடியை சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளன.