கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமும் நம் நாடும் கொரானா தொற்றால் பல இன்னல்களை சந்தித்தோம்! பல துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சுற்றுலா என்பது மிகவும் பாதிக்கப்பட்டது. நம்மால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்குமே செல்ல முடியவில்லை. எல்லா இடங்களுமே பூட்டப்பட்டன, விழாக்கள் நிறுத்தப்பட்டன, கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டே இருக்கின்றன. நினைவுச் சின்னங்களும் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இரண்டு வருடங்களாக நடக்காமல் இருந்த கண்காட்சிகளும் விழாக்களும் இப்போது நடக்கவிருக்கின்றன.
அருணாச்சலப் பிரதேசத்தின் அமைதியான நகரமான ஜிரோவில் இருந்து ராஜஸ்தானின் வண்ணமயமான அல்சிசார் வரை, இந்த அற்புதமான வரவிருக்கும் கலை விழாக்களுக்கு முற்றிலும் தனித்துவமான ஒன்றை அனுபவிக்க இப்போதே திட்டமிடுங்கள். இந்த வண்ணமயமான திருவிழாக்களில் நீங்கள் கலந்துக் கொள்ள இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
ஜிரோ ஃபெஸ்டிவல் ஆஃப் மியூசிக் - ஜிரோ, அருணாச்சல பிரதேசம் (29 செப்டம்பர் - 2 அக்டோபர் 2022)
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜிரோ பள்ளத்தாக்கு பசுமை, துடிப்பான கலாச்சரம், பாரம்பரியம், இயற்கை அழகிற்கு பெயர் போன ஒரு இடமாகும். இசை மற்றும் கலை ஆகியவற்றின் கலவையில் அரங்கேறும் ஒரு அற்புதமான திருவிழாவில் நீங்கள் இப்போது கலந்துக் கொள்ளலாம். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல திறமையான இசைக் கலைஞர்கள் இந்த திருவிழாவில் கலந்துக் கொள்வார்கள்.
மியூசிக் ஃபெஸ்டிவலில் கலந்துக் கொள்வதோடு அபதானி பழங்குடியினரின் தாயகமான ஜிரோ பள்ளத்தாக்கில் அழகிய இயற்கைக்காட்சிகள், கம்பீரமான மலைகள், வசீகரமான கிராமங்கள், வெள்ளி போன்று மின்னுகின்ற ஆறுகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு மகிழலாம்.
ஜோத்பூர் மெஹ்ரன்கர் கோட்டையில் RIFF - ஜோத்பூர், ராஜஸ்தான் (6 அக்டோபர் - 10 அக்டோபர் 2022)
ஜோத்பூர் RIFF (ராஜஸ்தானி இன்டர்நேஷனல் ஃபோக் ஃபெஸ்டிவல்) என்பது ராஜஸ்தானின் செழுமையான இசை மரபைத் தழுவிய ஐந்து நாள் இசைத் திருவிழா ஆகும். இந்த திருவிழா ஜோத்பூரில் உள்ள கண்கவர் மெஹ்ராங்கர் கோட்டையில் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 250 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கம்பீரமான மெஹ்ரன்கர் கோட்டையை அலங்கரிப்பார்கள்.
இந்த பிரமாண்டமான இசைத் திருவிழாவைக் கண்டு ரசிப்பதோடு, ஜோத்பூரின் பல அழகிய கோட்டைகள் மற்றும் அரண்மனைகளையும் நீங்கள் ஆராயலாம். எனவே, இந்த அக்டோபரில், செழுமையான அரண்மனைகளுக்குச் செல்லவும், உள்ளூர் சுவைகளில் ஈடுபடவும், சாகச நடவடிக்கைகளில் ஈடுபடவும், கலாச்சார களியாட்டத்தை அனுபவிக்கவும் இது உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்.
ஆரஞ்சு திருவிழா - தம்புக், அருணாச்சல பிரதேசம் (15 டிசம்பர் - 18 டிசம்பர் 2022)
அருணாச்சலப் பிரதேசத்தின் தபாங் பள்ளத்தாக்கிற்குள் அமைந்துள்ள தம்புக் ஆரஞ்சுப் பழங்களுக்காகப் பெயர் போன ஒரு அழகிய இடமாகும். நகரத்தின் அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விலகி இந்த இடம் மனதை ஆசுவாசப்படுத்துகிறது. மலைச் சரிவுகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் ஆரஞ்சுத் தோட்டங்கள் அறுவடைக் காலத்தில் இப்பகுதியின் அழகைக் கூட்டுகின்றன.
இந்த நேரத்தில் தான் இங்கு ஆரஞ்சு ஃபெஸ்டிவல் ஆஃப் அட்வென்ச்சர் & மியூசிக் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. பிரமிக்க வைக்கும் டம்புக்கின் இயற்கை எழில் கொஞ்சும் இசை சங்கமத்தில் நீங்களும் கலந்துக் கொள்ளுங்கள்!
தர்மஷாலா சர்வதேச திரைப்பட விழா - மெக்லியோட் கஞ்ச், இமாச்சல பிரதேசம் (நவம்பர் 3 - நவம்பர் 6, 2022)
அழகான மெக்லியோட் கஞ்சில் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழா கலைஞர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சுதந்திர திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
அற்புதமான மற்றும் அசாதாரணமான ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை நாம் இங்கே கண்டு மகிழலாம். ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் தாயகமான தர்மஷாலா திபெத்திய மற்றும் பிரிட்டிஷ் கலாச்சாரத்தின் கண்கவர் கலவையாகும்.
இந்திய புகைப்பட விழா - ஹைதராபாத், தெலுங்கானா (18 நவம்பர் - 19 டிசம்பர் 2022)
தெலுங்கானா அரசு மற்றும் மாநிலக் கலைக்கூடம் ஆகியவற்றுடன் இணைந்து லைட் கிராஃப்ட் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்படும் இந்த இந்திய புகைப்படத் திருவிழாவில் உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களின் பேச்சுக்கள், பட்டறைகள், திரையிடல்கள் மற்றும் அச்சு மற்றும் டிஜிட்டல் கண்காட்சிகள் ஆகியவற்றை நாம் காணலாம்.
புகைப்படம் எடுக்கும் கலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திருவிழாவில் நீங்கள் கலந்து கொள்வதோடு தெலுங்கானாவில் உள்ள பழமையான பாரம்பரிய நினைவுச்சின்னங்கள், தோட்டங்கள், ஏரிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுவையான உணவுகள் மற்றும் அற்புதமான ஷாப்பிங் ஆகியவற்றிலும் ஈடுபடலாம்.
ஆகவே, உங்களால் இந்த திருவிழாக்களில் எவற்றில் கலந்துக் கொள்ள முடியுமோ அதற்கு ஏற்றார்போல் உடனே திட்டமிடுங்கள்!