மலை மலையா சுடச்சுட சோறு, அண்டா அண்டாவா கறிக்குழம்பு - ஆனால் ஆண்களுக்கு மட்டும் தான். இந்த திருவிழாவில் கட்டாயம் பெண்களுக்கு அனுமதி இல்லை. காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு வயிறு முட்ட கறி விருந்து சாப்பிடலாம். நீங்க மதுரையில இருந்தா இந்த திருவிழாவுக்கு போக மறந்துடாதீங்க!
ஆண்டுதோறும் நடைபெறும் வினோத திருவிழா
மதுரை மாவட்டம் அனுப்பப்பட்டி அருகே சொரிக்காம்பட்டியில் அறுவடைக் காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். செக்காணூரணி அருகே சொரிக்காம்பட்டி - பெருமாள்கோயில்பட்டி கண்மாய்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கரும்பாறை முத்தையா கோயிலில் தான் இந்தாண்டுக்கான திருவிழாவும் நடைபெறும்.
400-500 வருடங்களாக நடைபெறும் கிடா வெட்டு விருந்து
இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக் காலமான தை அல்லது மாசி மாதங்களில் கிடா வெட்டி அனைத்து சமூக மக்களுக்கும் விருந்து வைப்பதைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இந்த பாரம்பரியம் கிட்டதட்ட 400-500 வருடங்களாக வழக்கத்தில் உள்ளது என்று கூறுகின்றனர். இந்த கிடா விருந்தில் சமைக்கப்படும் அனைத்தும் கருப்பு கிடாக்கள் மட்டுமே.

காணிக்கையாக கறுப்பு நிற கிடாக்கள் மட்டுமே
இந்த சமபந்தித் திருவிழாவிற்காக கறுப்புக் கிடாக்களை கிராம மக்கள் காணிக்கையாக அளிப்பார்கள். அந்தக் கிடாக்கள் அப்பகுதியில் தானாக வளர்ந்து வரும். தோட்டங்களில் உள்ள பயிர்களை இந்தக் கிடாக்கள் உண்ண வரும்போது முத்தையா சாமியே வந்து உண்ணுவதாக நினைத்து விரட்டுவது கிடையாது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
சுற்று வட்டார ஊர்களில் இருந்து ஆவலுடன் கலந்துக் கொள்ளும் மக்கள்
இந்த திருவிழாவில் 2500 கிலோவுக்கும் அதிகமான அரிசி, நூற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு கறிகளை சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிடுவதே இந்த திருவிழாவின் வழக்கம். இதற்காக கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உட்பட சுற்று வட்டாரத்தில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனைவர்க்கும் சுடச்சுட கறி விருந்து வழங்கப்படும்.

மலை மலையா சோறு, அண்டா அண்டாவா கறிக் குழம்பு
பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கி நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்படும். மூட்டை மூட்டையாக வந்த அரிசியை சமைத்து குவியலாக தயார் செய்வார்கள். கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள்.
யார் வேணாலும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்
அங்கே வந்து இருக்கும் அனைவர்க்கும் இலை போட்டு சுடச்சுட சோறு போட்டு, கறி குவியல் வைத்து, குழம்பு ஊற்றி கறி விருந்து வைக்கப்படும். யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். எல்லையே கிடையாது. உணவருந்திய பின் இலையை எடுக்கக் கூடாது என்பதால் அப்படியே விட்டுச்சென்றனர். ஒரு வாரம் கழித்து, இலைகள் காய்ந்த பின்னர்தான் இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதிக்குப் பெண்கள் வருவார்களாம்.
நீங்க மிஸ் பண்ணிடாதீங்க
2024 ஆம் ஆண்டுக்கான திருவிழா மே மாதம் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. நீங்கள் மதுரையில இருந்தா இந்த சூப்பர் திருவிழாவில் கலந்துக் கொள்ளுங்கள்!



Click it and Unblock the Notifications





