சென்னை தினம் என்பது தமிழகத்தின் தலைநகரான சென்னை மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவுபடுத்தும் ஓர் தினமாகும். இன்று தனது 379-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும், நினைவுச் சின்னங்கங்களும் தலைமுறை கடந்தும் போற்றவேண்டிய தலங்களாகும். இன்றைய தினத்தில் சென்னையின் சிறப்புகளையும், அங்குள்ள சுற்றுலா அம்சங்களையும் குறித்து அறிந்துகொள்ள பயணிப்போம் வாங்க.
சென்னையை வளமாக்கிய கிராமங்கள்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட பின், அதனை மையமாகக் கொண்டே ஆங்கிலேயர்களின் குடியிருப்புகள் வளர்ச்சி அடைந்தன. பின், சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த அப்போதே பரபரப்பான தொழல் மையங்களாக திகழ்ந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட சில கிராமங்கள் சென்னையுடன் இணைந்தன. பிவற்றிற்கு பிறகே சென்னை தனது முழுவளர்ச்சியை அடையத் துவங்கியது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
1522 ஆம் ஆண்டில் சென்னை வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவினர். அதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வடக்கே பழவேற்காடு பகுதியில் தங்களது குடியிருப்புகளை விரிவுபடுத்தினர். கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக சென்னையை பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயரைப் பெற்றது.
அடுத்தடுத்த வளர்ச்சிகள்
1746ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தினரால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், அதற்கு உட்பட்ட சென்னைப் பகுதிகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதனைத் தொடர்ந்தே சென்னை மாகாணம் அசுர வளர்ச்சியை அடைந்தது எனலாம். குறிப்பாக, உள்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், தொலைபேசி, ரயில், திரை பொழுதுபோக்கு என அடுத்து அடுத்து வளர்ச்சியைக் கண்டது சென்னை மாகாணம்.
முதல் சினிமா தியேட்டர்
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சினிமா கொட்டகை அமைக்கப்பட்டது சென்னை மாகாணத்தில் தான். தற்போது, அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தபால் நிலைய கட்டிடத்தில் தான் அப்போதைய சினிமா கொட்டடை அமைந்திருந்தது. இன்னும் கூட அந்த தபால் நிலையம் பழமை மாறாமல் சுதந்திர வரலாற்றை நினைவுகூறும் வகையில் அமைந்திருப்பதை அடுத்தமுறை அண்ணா சாலையில் பயணிக்கும் போது பார்க்கலாம்.
வணிகத்தில் முன்னோடி
சென்னையின் ஒருபுறம் நடுத்தர உள்நாட்டு மக்கள், மறுபுறம் பல்வேறு செல்வங்களையும், நிலங்களையும் கொண்ட நவாப் வம்சத்தினர், மையத்திலோ ஆங்கிலேயர்கள் என சென்னை மகாணம் தென்னிந்தியாவின் வணிகத் தலைநகரமாக திகழ்ந்தது. சென்னை மாநகரின் வர்த்தகத்துக்கு முக்கியப் பங்கு வகித்த சென்னைத் துறைமுகம் 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் உள்ளது. இந்தப் போக்குவரத்துகள் தான் சென்னையை ஒரு மிகப் பெரிய மாநகரமாக தற்போது உருவாக்கின.
காலம் கடந்த நூலகங்கள்
சென்னை மாகாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நவாப்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை கல்வியிலும் முக்கியத்துவம் அளித்ததாகவே தெரிகிறது. இதற்கு உதாரணமாக மாக்ஸ் முல்லர் பவன் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம் போன்றவை விளங்குகின்றன.
சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் என்று செய்தியில் வந்தவுடனேயே எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் ஒரு நொடி காது கூர்மையாகி டிவியை நோக்கி சென்றுவிடும். இதற்கு மக்கள் மனதில் ஒருவித அன்பைக் கொண்டுள்ளது என்றே கூறலாம். இத்தகைய இந்தியாவின் முதல் வானியல் ஆய்வகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் 1792ல் அமைக்கப்பட்டது. ,டைப்பட்ட காலத்தில் மையம் மாற்றப்பட்டாலும், தற்போது இந்த இடத்தில்தான் வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.
முக்கிய ஆலயங்கள்
சென்னையில் முக்கியமான திருத்தலங்களாக மயிலை கபாலீஸ்வரர் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமான சாந்தோம் தேவாலயமும், இஸ்லாமியர்களின் பெரிய மசூதி என அக்காலம் தொட்டு தலைமுறைகள் தாண்டி இன்றும் சென்னையின் அடையாளங்களாகத் நிலைத்து நிற்கின்றன.
ராயபுரம் ரயில் நிலையம்
தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் 1856ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இதுதான் நாட்டிலேயே மூன்றாவது ரயில் நிலையம் என்ற சிறப்புக்கு உரியது. இதற்கு அடுத்ததாக கட்டப்பட்டது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். அடுத்தடுத்தாக எழும்பூரில் ரயில் நிலையம் கட்டப்பட்டது. தொடர்ந்து, வர்த்தக ரீதியில் சென்னை முக்கிய நகரமாக திகழ்ந்ததை அடுத்து நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களுடன் சென்னை இணைக்கப்பட்டது.
Fæ